Links

Tuesday, 26 December 2023

 

கலாச்சாரமும் ஆடை நெறிமுறையும்


கடந்த வாரம் யாழ் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிற்கு வருகை தந்த ஒருவர் கட்டைக் காற்சட்டையுடன் வந்ததால் பல்கலைக் கழக வளாகத்தினுள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அந்த நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்ட தரப்பால் எடுக்கப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு எம்மவர்களால் சில நாட்களாக பேசப்படும் விடயமாக மாறியது.


இது தொடர்பில் அந்தப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நடந்துகொண்ட விதம் குறித்துச் சிலரும், அவர்களோடு முரண்பட்டவர்கள் நடந்து கொண்ட விதம் குறித்தும் பலரும் தமது வாதப் பிரதிவாதங்களைப் பகிர்வதையும் பார்க்க முடிந்தது.


உரையாடல் நடைபெறும்போது பொறுமையிழந்து அந்த இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் எடுத்தெறிந்து பேசுவதை அவதானிக்க முடிந்தது. அதேநேரம் மற்றத் தரப்பும் லேசுப்பட்டதாகத் தெரியவில்லை. “எழுத்தில் காட்டு, “ என்ன culture?”, “என்ன செய்வீர்கள்?” என்று எம் தமிழரில் சிலருக்கு இருக்கும் சண்டித்தன முறையில்தான் அவர்களும் உரையாடுகிறார்கள். பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடமும் அதுவே வெளிப்படுகிறது.


இங்கு, பல்கலைக் கழகத்தினுள் எவரும் கட்டைக் காற்சட்டையுடன் வரமுடியாது என்ற விதிமுறை எழுத்தில் இருக்கிறதா என்று கேட்டால், அது இருப்பதற்குச் சாத்தியம் குறைவு. ஆனால் மருத்துவ பீடத்திற்கு ஆடை நெறிமுறை எழுத்தில் இருப்பதை தேடலில் அறிய முடிகிறது. அதேபோல கலைப் பீடத்திற்கும் 2016 இல் வெளியானதாக் சொல்லப்படும் ஆடை நெறிமுறை இருப்பதாகத் தெரிகிறது. ஏனைய பீடங்களுக்கும் அவ்வாறு விதிமுறைகள் இருக்கக்கூடும்.


ஆனால் யாழ் பல்கலைக் கழகத்தில் மட்டுமல்ல, நாட்டில் உள்ள ஏனைய பல்கலைக் கழகங்களிலும் அணியக் கூடிய ஆடை தொடர்பில் சில எழுதாத சட்டங்கள் நடைமுறையில் இருக்கிருக்கின்றன. உதாரணமாக பேராதனையில் ஒரு ஆண்கள் விடுதியிலிருந்து இன்னொரு ஆண்கள் விடுதிக்குச் செல்வதற்கே தற்போது கட்டைக் காற்சட்டையுடன் செல்ல அனுமதிப்பதில்லை என்று அறிய முடிகிறது.


ஒரு நிறுவன வளாகத்தினுள் செல்லும்போது நாம் அங்குள்ள சட்டதிட்டங்களை மதித்தே செல்ல வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரம், அதிகாரிகள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், விதிமுறைகளை எவ்வாறு முரண்பாடுகள் அற்ற விதத்தில் விளக்க வேண்டும் என்பது குறித்தும் பல்கலைக் கழக நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

அதே போல அங்கு சென்று முரண்பட்டவர்களும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் ஒரு நிகழ்வுக்குச் செல்கிறோம் என்றால் ஏற்புடைய Dress code என்னவென்று தெரிந்து கொண்டு செல்வது எமது பொறுப்பாகிறது.

 

உண்மையில் இந்த முரண்பாடும் இதற்கான தீர்வும் இலகுவானவை. ஆனால் எனது கவனத்தை ஈர்த்தவை இது தொடர்புபட்ட சில விமர்சனங்களும் தொடர்புபட்ட சில விடயங்களுமே!

 

சொல்லப்பட்ட ஒரு விமர்சனத்தில், இவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்கள். அதனால்தான் வேண்டுமென்றே பிரச்சனை பண்ணுகிறார்கள் என்று ஒருவர் குறிப்பிட்டிருந்தார். இது ஒரு இழிநிலை மனப்பாங்கு. அவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருந்தாலும், அதனால்தான் அவ்வாறு நடந்து கொண்டார்கள் என்று சொல்வதும், இந்த நிகழ்வைப் பயன்படுத்தி  அவர்களை இழித்துப் பேசுவதும் அவர்கள் மீதான வன்முறைத் தாக்குதலே.

 

இன்னும் சிலர், பல்கலைக் கழகம் தமிழரின் கலாச்சரத்தைக் கட்டிக் காப்பாற்றும் இடம். அந்த இடத்தில் இவ்வாறு விதிமுறைகளைத் தளர்த்தினால் அது பெரும் ஆபத்தாக மாறிவிடும் என்றும் எச்சரிக்கிறார்கள். அப்படி யாழ் பல்கலைக் கழகம்தான் தமிழரின் கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பாற்றுகிறது என்றால் இந்தப் பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்ட 1974 ம் ஆண்டுக்கு முன்னர் தமிழரின் கலாச்சாரத்தை கட்டிக் காப்பாற்றியது எது? அல்லது அதற்கு முன்னர் தமிழர் கலாச்சாரம் அற்றவர்களாக இருந்தார்களா?

 

அவ்வாறு யாழ் பல்கலைக் கழகம் தமிழரின் கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பாற்றுகிறது என்றால் ஏன் இந்தப் பல்கலைக் கழகம் அங்கு வருடாந்தம் ராக்கிங் என்ற பெயரில் நடைபெறும் புதுமுக மாணவர்கள் மீதான வன்முறையைத் இல்லாது ஒழிக்க முடியவில்லை? புலிகள் செல்வாக்காக இருந்த காலம் தொட்டு நேற்று வரை அங்கு கற்கும் பெண்கள்மீது சில பேராசிரியர்கள், விரிவுரையாளர் மேற்கொள்ளும் பாலியல் அத்துமீறல், பாலியல் துஸ்பிரயோகங்கள் தொடர்பாக எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளை பாரபட்சம் இன்றி விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுதியாகக் குரல் கொடுக்கவில்லை?

 

எனது பார்வையில், தேடிக் கற்கும் மனப்பாங்கை ஏற்படுத்துதல், சமூக ஆய்வு, பல்வேறு கலாச்சார அம்சங்களை வெளிப்படுத்தும் முயற்சிகளுக்கும் களம் அமைத்துக் கொடுத்தல் என்பவற்றினூடாக கலாச்சாரத்தை மெருகுபடுத்துவதில் பல்கலைக் கழகத்திற்கு பங்கு இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் பல்கலைக் கழகத்தால்தான் எமது கலாச்சாரம் கட்டிக் காப்பாற்றப்படுகிறது என்று கண்ணை மூடிக்கொண்டு Romanticize பண்ணுவது ஆபத்தானது. பல்கலைக் கழகத்தை கோவில் என்றெல்லாம் புனிதப்படுத்தி மற்றவர் வாயை மூட முயற்சிப்பதும் ஒரு மலினமான உத்தியே.

 

இவ்வாறு சிலர் Romanticize செய்வதன் பின்னால், யாழ் பல்கலைக் கழகம் யாழ்ப்பாணிகளின் சொத்து அல்லது தமிழரின் சொத்து என்று சிந்தனை காரணமாக இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். பல்கலைக் கழகத்தில் உள்ள சிலரும் அப்படி நினைப்பதாகவே தெரிகிறது. 2016 இல் கலைப் பீடாதிபதி கொண்டு வந்த ஆடை விதிமுறைகளும் அதற்கு கட்டியம் சொல்வது போலவே தெரிகிறது.

 

ஆனால் அந்த விதிமுறைகளும் பாரபட்சமானவை என்று அந்த சுற்றுநிருபம் வெளிவந்த சூழலில் விவாதிக்கப்பட்டது. சில கொழும்பு மற்றும் இந்திய ஊடகங்கள் விவாதிக்கும் அளவுக்கு அந்த நேரத்தில் அது விவாதப் பொருளாகவும் இருந்தது.

அந்தச் சுற்றுநிரூபத்தில் ஆண்கள் தாடி வைத்துக் கொள்ளக் கூடாது என்ற விதிமுறை அங்கு அந்தக் காலப் பகுதியில் அங்கு கல்வி கற்ற முஸ்லிம் ஆண் மாணவர்களின் மத உணர்வை பாதிக்கும் விடயமாகக் கருத்தப்பட்டது.  அதைவிட முக்கியமாக ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் பெண்கள் சேலை அணிந்து வரவேண்டும் என்ற பெண்களுக்கு என பிரத்தியேகமாக சொல்லப்பட்ட விதிமுறையும் வாதப் பிரதிவாதங்களை உருவாக்குவதாக இருந்தது.

 

Hiru News ( 26, 2016) செய்திப்படி, அப்போதைய பீடாதிபதி இந்தப் புதிய நடைமுறை யாழ்ப்பாண கலாச்சாரத்தைப் பாதுகாக்கவே எனச் சொல்லியிருக்கிறார். அப்படியானால் இந்த விதிமுறை ஏன் ஆண்களுக்கு ஆடை விடயத்தில் விலக்களித்தது? கலாச்சாரப் பாரம் ஏன் எப்போதும் பெண்கள் தலையிலேயே சுமத்தப்படுகிறது? ஏன் கலாச்சாரத்தைப் பாதுகாப்பது பெண்களின் பொறுப்பு என்ற சித்தாந்தம் தொடர்ந்தும் எமது சமூகத்தில் காவப்படுகிறது? பல பெண்களும் ஏன் இந்த மூளைச் சலவைக்குள் ஆளாகி அவர்களும் கலாச்சாரக் காவலராகி ஏனைய பெண்கள் மீது அதனைத் திணிப்பவர்களாக மாறிவிடுகிறார்கள்?

 

ஆண்களை எப்போதும் மேற்கத்தைய உடைகள் அணிய அனுமதிக்கும் அரசும் அரசு சார்ந்த நிறுவனங்களும் அதேபோல, ஏன் பெண்களையும் உடலை முழுமையாக மூடும் வகையிலான மேற்கத்தைய பாணியிலான உடையணிய அனுமதிக்கக் கூடாது?

 

உண்மையில் நாம் சிறந்த கலாச்சாரம் கொண்டவர்களாக இருந்தால், இந்தக் கேள்விகளுக்கு விடை தேட வேண்டியவர்களாக இருக்கிறோம்.

தேடுவோம்!

 

-    வீமன் -

 


References:

 https://www.colombotelegraph.com/index.php/why-is-jaffna-university-imposing-an-authoritarian-dress-code/

https://www.google.com/search?q=jaffna+university+dress+code&rlz=1C1SQJL_enCA886CA886&oq=jaffna+university+dress&gs_lcrp=EgZjaHJvbWUqBwgBECEYoAEyBggAEEUYOTIHCAEQIRigATIHCAIQIRigATIHCAMQIRigATIHCAQQIRifBTIHCAUQIRifBdIBCjE2MjI2ajBqMTWoAgCwAgA&sourceid=chrome&ie=UTF-8#vhid=XboaSGqB0r3-zM&vssid=l

https://www.hirunews.lk/english/127182/jaffna-undergrads-say-no-to-new-dress-code-introduced-by-uni-authority

 

 

Saturday, 8 April 2023

 




அய்யனும் அவன் மேல் ஐயமும்!
========================
தமிழ் கூறும் நல்லுலகில் அய்யன் வள்ளுவன் அவர் இயற்றிய திருக்குறளுக்காக இன்றளவும் கொண்டாடப்படுகிறார். உலகில் இதுவரை 42 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நூலாகவும் மதசார்பற்ற நூலாகவும் திருக்குறள் விளங்குகிறது. ஆனால் ஐயம் திரிபறக் கற்கும்படியும், எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் மெய்ப்பொருள் காணவும் சொன்ன வள்ளுவன் யார் என்பதில்தான் எங்களுக்கு இன்னமும் சந்தேகம் தீர்ந்தபாடில்லை. அவன் வள்ளுவன் மறைந்து 2000 ஆண்டுகள் கடந்த பின்னரும் இதற்கு ஒரு முடிவு வரவில்லை.
உண்மையில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த வள்ளுவர் எப்போது வாழ்ந்தார் என்பதற்கு யாரிடமும் ஆதாரமில்லை. அதேபோல அவரது தோற்றம் தொடர்பாக அறிந்தவரும் யாருமில்லை. ஆனால் இன்று அவரைச் இந்து சமயத்தவர் என்று ஒரு சாராரும் சமணர் என்று இன்னொரு சாராரும் இன்றுவரை வாதிட்டு வருகிறார்கள். ஆசீவகம் என்று விவாதிப்போரும் உண்டு. இவர்களுக்குப் போட்டியாக அவரைக் கிறிஸ்தவர் என்று சொல்வோரும் உண்டு, வள்ளுவர் மதச் சார்பற்றவர் என்று சொல்வோரும் உண்டு. மறுபுறத்தில் அவரைப் பிராமணர், தேவர், நாடார், வன்னியர், பறையர் என்று சாதிச் சாயம் பூசும் முயற்சியும் நடைபெற்றது.
வள்ளுவருக்கு உருவம் கொடுக்கும் வேலை 19ம் நூற்றாண்டிலேயே ஆரம்பித்தது என்று கூறுகிறார்கள். சென்னை மாகாணத்தின் ஆட்சியராக இருந்த பிரான்சிஸ் வைட் எல்லிஸ் என்பவர் திருவள்ளுவர் உருவம் பொறித்த தங்க நாணயத்தை 1810 அளவில் வெளியிட்டதாகத் தெரிகிறது. அதில் வள்ளுவர் சமணரைப் போன்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தார்.
அதன் பின்னர், 1904இல் இந்து தியலோஜிகல் மேல்நிலைப் பள்ளியில் பண்டிதராக இருந்த கோ.வடிவேலு செட்டியார் என்பவர் வெளியிட்ட திருக்குறளில் திருவள்ளுவரை சடாமுடி, தாடி மீசையுடன் மார்புக்குக் குறுக்காக துண்டும், ஒரு கையில் சின் முத்திரையுடன் செபமாலையும் மறுகையில் ஏடும், நெற்றியில் பட்டையும் குங்குமமும் உள்ளதாக வரையப்பட்டிருந்தது. இந்த உருவம் வழங்கப்பட்டமைக்கு இந்த நூலில் விளக்கம் சொள்ளப்பட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. பின்னர் இந்த நூலின் ஆங்கிலப் பதிப்பில் வள்ளுவர் ஒரு சைவ அடியார் போலவும் அவரிடம் இரு அடியார்கள் தொழுவது போலவும் வரைந்ததாகச் சொல்லப்படுகிறது. அதன் பின்னரான காலத்தில் சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1952இல் வெளியிட்ட நூல்களிலும் வள்ளுவர் சைவ அடியாராகவே காட்சிப்படுத்தப்பட்டிருந்தார்.
அதேநேரம், இந்த நூல்களில் பயன்படுத்தப்படும் படங்களில் இருப்பது திருவள்ளுவர் அல்ல, அது திருவள்ளுவ நாயனார் என்பவரின் படம் என்கிறார்கள். அவர் 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த, ஞான வெட்டியான் என்ற நூலை எழுதிய ஒருவர் என்று சொல்கிறார்கள். அவர் வாழ்ந்தது 16ம் நூற்றாண்டின் பிற்பகுதி என்போரும் உண்டு. மறுபுறத்தில் திருவள்ளுவரும் திருவள்ளுவ நாயனாரும் ஒன்று என்று வாதிடுவோரும் உண்டு.
இந்த சூழ்நிலையில் திராவிடச் சித்தாந்தம் செல்வாக்குடன் இருந்த 1950களின் பிற்பகுதியில்தான் வெள்ளுடையுடன் மதசார்பற்ற வள்ளுவரை வரையும் முயற்சி தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. அதன்போது வேணுகோபால சர்மா என்ற பிராமணர் வரைந்த உருவப் படமே இன்றுவரை பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் அரசாணை பெற்ற வள்ளுவர் உருவமாகவும் திகழ்கிறது. இவரும் தான் ஏன் வள்ளுவரை அப்படி வரைந்தேன், எவ்வாறு திருக்குறளிலிருந்து அதற்கான எண்ணக்கருக்களைப் பெற்றேன் என்று விளக்கவுரை ஒன்றையும் வெளியிட்டார்.
அதேநேரம், பிராமணரான அவர், இவ்வாறு திறனாய்ந்து திருக்குறளை எழுதும் ஆற்றல் பிராமணருக்கே இருந்திருக்கும் என்று சிந்தித்ததாகவும் அதனால் வள்ளுவருக்குப் பூணூல் போட்டு முதலில் வரைந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் பின்னர் பாரதி தாசனின் ஆலோசனைப்படி அது தெரியாத வகையில் சால்வையை வரைந்தாகச் சொல்லப்படுகிறது. 1959 அளவில் வள்ளுவரை இவர் வரைந்து முடித்த நிலையில் 1960 இல் இந்தப் படம் சி.என். அண்ணாத்துரையால் காங்கிரஸ் மைதானத்தில் வெளியிடப்பட்டது.
அதன் பின்னர் வள்ளுவர் கிறிஸ்தவர் என்று சிலர் வாதம் செய்ததுடன் இரண்டு பாகங்களாகப் புத்தகம் வெளியிட்டு அதனை வலியுறுத்தப் பார்த்தார்கள். அதைத் தொடர்ந்து, நான்கு வருடங்களுக்கு முன்னர்தான் இந்தியாவில் வள்ளுவரின் வெள்ளை வேட்டியை உருவிவிட்டு காவி கட்டி சிலர் அழகு பார்க்கத் தலைப்பட்டார்கள். 2019 நவம்பர் மாதத்தில் சமூக வலைத் தளத்தில் காவியுடை வள்ளுவரை தரவேற்றி தமிழர்களை ஆழம் பார்த்தது பா.ஜ.க. பின்னர் 2020 ஜனவரி மாதம் அப்போது துணை ஜனாதிபதியாக இருந்த வெங்கயா நாயுடுவும் காவியுடை வள்ளுவனை உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிந்து பின்னர் எதிர்ப்பால் பின்வாங்கி வெள்ளுடை வள்ளுவனை மீளப் பதிந்தார். ஆனால் தமிழ்நாட்டு பா.ஜ.க.வினர் இன்றுவரை தொடர்ந்தும் காவி கட்டிய வள்ளுவரை வெளியிட்டு மல்லுக்கட்டி வருகிறார்கள்.
இலங்கையைப் பொறுத்த வரையில், கடந்த காலங்களில் வள்ளுவர் மீதுள்ள மரியாதையால் சில முக்கிய இடங்களில் வள்ளுவர் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதன் பின்னர் 2016இல் மறவன் புலவு சச்சிதானந்தத்தின் வேண்டுகோளை ஏற்று வி.ஜி.பி உலக தமிழ்ச்சங்க நிறுவனர் வி.ஜி. சந்தோஷம் பைபர் கிளாஸினால் ஆன 16 வள்ளுவன் சிலைகளை இலங்கையிடம் ஒப்படைத்தார். இவற்றை தமிழர்கள் அதிகம் வாழும் திருகோணமலை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, புத்தளம், புளியங்குளம் போன்ற இடங்களில் நிறுவுவதே மறவன் புலவு சச்சியின் திட்டமாகும். கடந்த வருடம் நவம்பர் மாதம் வலிவடக்கில் மக்கள் மீளக் குடியமர்ந்த வள்ளுவர்புரத்திலும் கருங்கல்லில் ஒரு வள்ளுவர் சிலை நிறுவப்பட்டது.
தற்போது இலங்கையின் வடக்கில் யாழ் பிரதம தபாலகத்துக்கு முன்பாக நிர்மாணிக்கப்பட்ட வள்ளுவர் சிலையிலும் கடந்த மார்ச் 17இல் கலாநிதி ஆறுதிருமுருகனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையில் காணப்படும் சிவசின்னங்கள் மீண்டும் ஒருமுறை வள்ளுவரின் அடையாளத்தை விவாதிக்க வைத்துள்ளது.
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பின் அதன் மெய்ப் பொருள் காணும்படி வள்ளுவர் சொன்னதை சரியாகப் புரிந்திருந்தால் கிறிஸ்தவராகட்டும், சைவ சமயத்தவராகட்டும், தங்களை இந்துக்கள் என்பவர்களாகட்டும், கடவுள் இல்லை என்பவர்களாகட்டும் எவருமே வள்ளுவர் யாரென்று தேடியிருக்க மாட்டார்கள். மாறாக வள்ளுவன் சொன்னவற்றில் ஒரு சில அறிவுரைகளையாவது பின்பற்றி தமது வாழ்வையும் தம்மைச் சூழ உள்ளவர்கள் வாழ்வையும் மகிழ்வானதாக மாற்றியிருப்பார்கள்.

ஏனெனில் மற்றவர்களுக்கு தொண்டு செய்வதும் அன்பு பாராட்டுவதும் உயர்ந்த மதம் என்ற உயர் கருத்தையே திருக்குறள் வலியுறுத்துகிறது. மனித இனத்தில் காணப்படும் பலவீனங்களை அகற்றி அறம் சார்ந்து இயங்கும் சமூகத்தைக் கட்டியெழுப்ப வழிகாட்டும் ஒரு பொது மறையைத் தந்த வள்ளுவர் உலகுக்குப் பொதுவானவர். அவரை உங்கள் மனதுக்கு உகந்தபடி அவரை உருவகிப்பதற்கும் மரியாதை செய்யவும் எவருக்கும் உரிமையுள்ளது. அதேநேரம் தமது அதிகாரத்தை வலுப்படுத்தவும் மற்றவர் மீது மதரீதியான ஆதிக்கம் செலுத்தவும் வள்ளுவரையும் திருக்குறளையும் பயன்படுத்த நினைப்பது ஏற்புடையதல்ல.

 


உடற்பயிற்சியும் உபாதைகளும்

சில தசாப்தங்களுக்கு முன்னர் வாழ்ந்த எமது முந்திய தலைமுறையில் அதிகமானவர்கள் நாளாந்தம் உடலுழைப்பில் ஈடுபடுபவர்களாக இருந்தார்கள். அதனால் இயல்பாகவே அவர்களின்தசைநார்கள் வலிமையாக இருந்தன, உடல் எடையும் கட்டுக்குள் இருந்தது, அவர்கள் தனியாக தினமும் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க வேண்டிய தேவை இருந்திருக்கவில்லை.

 

ஆனால் காலப் போக்கில் உடல் உழைப்பற்ற உத்தியோகங்கள் அதிகரிக்க மக்களும் உடலுழைப்பைக் குறைக்கத் தொடங்கினர் அல்லது தவிர்த்தனர். அதன் விளைவாக அதிக உடல் எடை, இதய நோய், நீரிழிவு என்பன இள வயதினரையே பாதிக்கக்கூடிய ஒரு காலத்தில்தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதன் தாக்கம் தற்போது பலரையும் விரும்பியோ விரும்பாமலோ உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டு மைதானங்கள், நடைப் பயிற்சிக்கான பாதைகளை நோக்கி நகர வைத்துள்ளது.

 

இன்று நாற்பதிலிருந்து எழுபது வயது வரையான ஆண், பெண் இருபாலாரிலுமே பலர் தமது ஆரோக்கியம் கருதி உடற்பயிற்சி செய்வதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். தமது ஆரோக்கியத்தில் கொண்ட அக்கறை அல்லது குடும்ப வைத்தியரின் அறிவுறுத்தல் காரணமாக நடத்தல், ஓடுதல், சைக்கிள் ஓடுதல், நீச்சல் என உடற்பயிற்சி செய்பவர்கள் ஒருபுறம் என்றால் பயிற்சிக் கூடத்துக்கு ஒழுங்காக சென்று உடற்பயிற்சி செய்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கிறது. இன்னொரு புறம் கிரிக்கெட், உதைபந்து, பூப்பந்து, கரப்பந்து போன்றவற்றை விளையாட்டுகளில் ஐம்பது, அறுபது வயதைத் தாண்டியும் விளையாடுபவர்களும் இருக்கிறார்கள்.

 

இது உண்மையிலேயே ஒரு மகிழ்ச்சியான விடயம்தான். ஆனால் மறுபுறத்தில் இவ்வாறு உடற்பயிற்சி செய்பவர்கள், விளையாட்டில் ஈடுபடுபவர்களில் கணிசமானவர்கள் கடுமையான மற்றும் நிரந்தரமான காயங்கள், உபாதைகளுக்கு உள்ளாவதும் அதிகரிக்கிறது. அதேநேரம் பாட்மிண்டன் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுபவர்களில் சிலருக்கு விளையாடும்போதே மாரடைப்பு, இதயச் செயலிழத்தல் என்பவற்றால் சிலர் துரதிஷ்டவசமாக இறந்து போவதும் கடந்த சில வருடங்களாகவே நடைபெற்று வருகிறது.

 

இவ்வாறு கடும் காயங்கள் ஏற்படுவதற்கும் எதிர்பாராத விதமாக மரணம் ஏற்படுவதற்கும் நாம் விடும் தவறுகளே காரணமாக இருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை. உடற்பயிற்சியானாலும் விளையாட்டானாலும் எமது உடலைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டுதான் நாம் களத்தில் இறங்க  வேண்டும். எல்லோருடைய உடல் ஆரோக்கியமும் நீண்டநேர உடல் உழைப்பைத் தாங்குதிறனும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மறுபுறத்தில், ஒரு தனிநபரின் உடற்பலம், தாங்குதிறன், தசைநார், நரம்புகளில் ஏற்படும் காயங்கள் குணமடைய எடுக்கும் காலம் என்பன வயதாக வயதாக மாறுபடுகிறது.

 

எனவே நாம் முதலில் எமது ஆரோக்கிய நிலை மதிப்பீட்டைச் செய்து விட்டே எமக்குப் பொருத்தமான உடற்பயிற்சியையும் தெரிவு செய்ய வேண்டும். ஆரோக்கியமான உடலைப் பேண உணவில் எவ்வளவு கவனம் எடுக்கிறோமோ அதேயளவுக்கு நாம் செய்யும் உடற்பயிற்சியையும் அளவோடுதான் செய்ய வேண்டும். பொதுவாகவே மூன்றிலிருந்து ஆகக் கூடியது ஐந்து நாள் உடற்பயிற்சி போதுமானது என்று சொல்கிறார்கள். ஆனால் சிலருக்கு ஐந்து நாட்கள் உடற்பயிற்சியில் ஈடுபட்டாலே அதிக களைப்பு ஏற்படவும் காயங்கள் ஏற்படவும் சந்தர்ப்பம் உள்ளது.

 

எனவே நாம் கடுமையான உடற்பயிற்சி செய்யும்போது இவ்வாறான விடயங்களைக் கட்டாயம் கருத்தில் எடுக்க வேண்டும். அதற்கு முதலில் உங்கள் குடும்ப வைத்தியரிடமோ ஒரு தகுதி வாய்ந்த உடற்பயிற்சியாளரிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டு பயிற்சியில் ஈடுபடுங்கள். குறிப்பாக மருத்துவ காரணங்களுக்காகவோ வேறு காரணங்களுக்காகவோ கணிசமான கால இடைவெளியின் பின்னர் மீள உடற்பயிற்சியை ஆரம்பிக்கிறீர்கள் என்றால் கட்டாயம் தகுந்த ஆலோசனை தேவை.

நாம் பொதுவாக தெரிவு செய்யும் உடற்பயிற்சி அல்லது விளையாட்டுகளில் ஈடுபடும்போது காயங்கள், உபாதைகள் வராது தடுக்கும் சில வழிமுறைகளை உங்களுடன் பகிரலாம் என்று நினைக்கிறேன்.

 

நீங்கள் தேர்ந்தெடுத்தது நீண்ட தூரம் நடத்தல் அல்லது மெல்லோட்டம் என்றால் அவற்றை ஆரம்பிக்க முன்னர் பெரிதாக முன்னாயத்தம் எதுவும் தேவையில்லை. ஆனால் நீண்ட நாட்களுக்குப் பின்னர் மீள ஆரம்பிக்கிறீர்கள் அல்லது புதிதாக ஆரம்பிக்கிறீர்கள் என்றால் முதல் நாளே 10 km தூரம் நடக்கவோ ஓடவோ ஆசைப்பட வேண்டாம். முதல் வாரம் மூன்று அல்லது நான்கு km தூரம் மட்டுமே நடந்தால் போதுமானது. பின்னர் மெது மெதுவாக தூரத்தை அதிகரியுங்கள். நீண்ட தூரம் நடக்கப் பழகிய பின்னரும் ஒவ்வொரு 20 நிமிடம் நடந்த பின்னர்  2 – 3 நிமிட ஓய்வு எடுப்பது நல்லது. நடந்து அல்லது ஓடி முடிந்த பின்னர் உடல் தசைகளை மீளத் தளர்வாக்க தளர்வுப் பயிற்சி (Cool down Exercise) செய்வது சிறந்தது.

 

நீங்கள் தெரிவு செய்வது கரப்பந்து, கால்பந்து, பாட்மிண்டன், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளாக இருந்தால் அதன்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், விளையாடத் தொடங்க முன்னர் 5 நிமிடமாவது Warm-up எனப்படும் தசைகளைத் தயார்ப்படுத்தும் உடற்பயிற்சியைக் கட்டாயம் செய்ய வேண்டும். இது விளையாடும்போது தசைப்பிடிப்பு, தசைநார்ச் சேதம் என்பன ஏற்படும் சந்தர்ப்பங்களைக் குறைக்க உதவும். அதேபோல விளையாடி முடிந்த பின்னரும் 5 – 10 நிமிடங்கள் தசைத் தளர்வுப் பயிற்சி செய்ய வேண்டும்.

 

பாட்மிண்டன் போன்ற விளையாட்டுகளின் பொது 2 – 3 games விளையாடிய பின்னர் 5 நிமிட ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. இது உடற்தசைகள் ஓய்வெடுக்கவும் உங்கள் இதயம் தொடர்ந்து அளவுக்கு அதிகமான வேகத்தில் நீண்டநேரம் வேலை செய்வதைக் குறைக்கவும் உதவும்.

 

நான் ஆரம்பத்தில் சொன்னது போலவே ஒரு வாரத்தில் எத்தனை நாட்கள் உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்பதும் முக்கியமானது. இளவயதில் தினமும் பாட்மிண்டன் அல்லது உதைபந்து விளையாடுவதால் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது. ஆனால் நாற்பதைத் தாண்டி ஐம்பதை அண்மிக்கும்போது அதேபோல தினமும் விளையாட முடியாது. அவ்வாறு விளையாடினால் காயங்கள் ஏற்படுவது சந்தர்ப்பம் அதிகம். மறுபக்கத்தில், அவரவர் உடல் நிலையைப் பொறுத்து, விளையாடிய நாளுக்கு மறுநாள் முழுவதும் உடல்வலி, தலைவலி அல்லது கடும் உடற்சோர்வு ஏற்படும் சாத்தியம் இருக்கிறது.எனவே உங்கள் உடல் நிலையை நீங்களே கணிப்பிட்டு ஒரு நாள் விட்டு ஒரு நாளோ, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறான விளையாட்டுகள், கடும் உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம்.

 

எம்மவர் மத்தியில் இவ்வாறான விளையாட்டுகளில் ஈடுபடுபவர்களில் கணிசமானவர்கள் தாம் வாழும் நாட்டில் நடைபெறும் பல்வேறு சுற்றுப் போட்டிகளில் விளையாடுவதில் அதிக ஆர்வம் காட்டுவதையும் அண்மைக் காலமாக அவதானிக்க முடிகிறது. நாற்பதுகளைத் தாண்டிய பின்னர் இவ்வாறு சுறுசுறுப்பாக இருப்பது போட்டிகளில் விளையாடுவதும் நல்லதுதான். ஆனால் எமது உடல் நிலையை சரியாகக் கணிக்காமல் தொடர்ந்து சுற்றுப் போட்டிகளில் ஈடுபடுவதும் புத்திசாலித்தனமான செயலல்ல.

 

எனக்குத் தெரிந்த நண்பர்கள் பலர் இவ்வாறு தொடர்ந்து சுற்றுப் போட்டிகளில் விளையாடியதன் விளைவாக அடிக்கடி உடல் உபாதைகளுக்கு உள்ளாவதைப் பார்த்து வருகிறேன். உங்கள் உடல் ஒத்துழைத்தால் போட்டிகளில் கலந்து கொள்வதில் தவறில்லை. இல்லையெனில் நீங்கள் கொஞ்சம் அவதானமாக இருப்பது நல்லது. போட்டிகளில் ஈடுபடும் ஆர்வம் இருந்தால், நடைபெறும் எல்லாப் போட்டிகளுக்கும் போகாமல் தெரிந்தெடுத்த முக்கியமான போட்டிகளில் மட்டும் கலந்து கொண்டு உங்கள் திறமையைக் காட்டுங்கள், காயம் வராது பார்த்துக் கொள்ளுங்கள்.

 

சுருக்கமாகச் சொன்னால் நாம் ஆரோக்கியமாக வாழ உடற்பயிற்சி எமக்கு உதவுகிறது. எனவே வாராந்தம் உங்கள் ஓய்வுநேரத்தில் ஒரு பகுதியை உடற்பயிற்சிக்கென ஒதுக்குங்கள். அதேநேரம், உடற்பயிற்சி செய்யும்போது உடலுறுப்புகளுக்கு இடையிடையே போதிய ஓய்வும் கொடுங்கள். தேவையற்ற உடலுபாதைகள் ஏற்படும் சந்தர்ப்பத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

 

வீமன்

Monday, 20 March 2023

 

மகிழ்ச்சியாக வாழுதல்




"Happiness is not a goal...it's a by-product of a life well-lived." Eleanor Roosevelt

வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்றுதான் நாம் ஒவ்வொருவரும் ஆசைப்படுகிறோம். நாம் கஷ்டப்பட்டுப் படிப்பது, வேலை தேடுவது, தொழில் தொடங்குவது, பணம் சம்பாதிப்பது, திருமணம் செய்வது, சொத்துத் சேர்ப்பதும் எல்லாமே நாங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் நாங்கள் எல்லோருமே எப்போதுமே மகிழ்ச்சியாக இருப்பதில்லை.

பணம், வசதி இருப்பதால் மட்டுமே எல்லோருமே மகிழ்ச்சியாக இருப்பதில்லை. அதேபோல மகிழ்ச்சியாக இருக்கும் எல்லோரிடமும் பணமும் வசதியும் இருப்பதில்லை.

சிலர் எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாகவும் கலகலப்பாகவும் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதற்கு மாறாக சிலர் சிறந்த நகைச்சுவையைக் கேட்கும்போதுகூட சிரிக்கத் தெரியாத சிடுமூஞ்சிகளாக இருப்பதையும் பார்த்திருப்பீர்கள். அது ஏன் என்று நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?

 இது இன்று நேற்று எழுந்த கேள்வியில்லை. ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னரே இது பற்றிக் கேள்வியெழுந்துவிட்டது. நாம் மகிழ்ச்சியாக இருப்பதை எது தீர்மானிக்கிறது என்பதே அறிய கிரேக்க அறிஞர்கள் காலத்திலிருந்தே இதனை ஆராய்ந்து வந்திருக்கிறார்கள். கிரேக்க கால தத்துவஞானியான அரிஸ்டோடில் மகிழ்ச்சியாக இருத்தலே மனிதர்கள் எப்போதும் அடைய விரும்பும் ஒரே விடயம் என்று சொல்லியிருக்கிறார்.

அமெரிக்க உளவியலாளரான Dr. Ed Diener (Aka Dr.Happiness) ஒருவர் மகிழ்ச்சியாக இருப்பதை நேரிய உணர்வு, செய்யும் செயல்களில் ஈடுபாடு மற்றும் செய்யும் செயல் அர்த்தமுள்ளதாக இருத்தல் ஆகிய மூன்று விடயங்கள் தீர்மானிப்பதாக கூறுகிறார். அவருடைய ஆய்வின்படி நாம் மகிழ்ச்சியாக இருப்பது 40% எமது மரபணுவில் தங்கியுள்ளது என்கிறார். ஒருவர் மகிழ்ச்சியாக இருப்பதை பகுதியாக உங்கள் மரபணு தீர்மானிக்கிறது என்றாலும் மிகுதி அவருடைய எண்ணங்கள், செயல்கள் என்பவற்றாலும் எமது சூழல் காரணிகளிலும் தீர்மானிக்கப்படுவதாக Dr. Ed Diener சொல்கிறார். இதனையே வேறு பல உளவியலாளர்களும் சொல்லியிருக்கிறார்கள்.

 

இவர்களின் கருத்துப்படி எம்மிடம் உள்ள பணம் மற்றும் ஆடம்பரப் பொருட்களால் ஏற்படும் மகிழ்ச்சியின் ஆயுட்காலம் மிகவும் குறுகியது. ஆனால் நாம் எம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் மந்திரம் எமக்குள்ளேயே இருப்பதை உணராமல் எங்களைச் சூழ உள்ள ஏதோ ஒன்றிடமிருந்து அல்லது யாரோ ஒருவரிடமிருந்தே எங்கள் மகிழ்ச்சியைப் பெற்றுக் கொள்ளவே முயற்சிக்கிறோம். அதனால்தான் எங்களால் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ முடிவதில்லை.

 

 

எனது ஆண் நண்பர்கள் சிலரிடம், “எது உங்களை மகிழ்ச்சிப்படுத்துகிறது?” என்று கேட்டபோது அவர்கள், “அலுவலகத்தில் தரப்பட்ட வேலையை பிரச்சனையின்றி முடிப்பது, குடும்பத்தோடு சுற்றுலா போவது, உரியநேரத்தில் வீட்டுக்கடன், மாதாந்த சேவைக் கட்டணங்களை சிரமமின்றிக் கட்ட முடிவது, பிள்ளைகளின் பெறுபேறுகள், அலுவலகத்தில் கிடைக்கக் கூடிய பாராட்டு, வீட்டிலும் வேலைத்தளத்திலும் மனப்பதற்றம், மன அழுத்தம் தராத சூழல்” போன்றவை மகிழ்ச்சியைத் தருவதாகத் தெரிவித்தனர். சில பெண்களைக் கேட்டபோது, மேற்படி விடயங்களோடு, கணவர் தங்களோடு அன்பாக இருப்பது என்ற விடயத்தையும் மேலதிகமாக சேர்த்துக் கொண்டனர்.

 இவை யாவும் பொதுவாகவே எங்களில் பலரும் கொடுக்கக்கூடிய பதில்களே. அதேநேரம் இவர்கள் குறிப்பிட்ட எல்லாமே இலகுவாக அடையக்கூடிய விடயங்களாகவும் திரும்பத் திரும்ப நடக்கக்கூடிய விடயங்களாகவும் இருக்கின்றன. அதனால் இப்படியான எண்ணம் உள்ளவர்களால் மற்றவர்களைவிட அதிகம் மகிழ்ச்சியாக இருக்க முடியும். ஒரு விடயத்தில் வெற்றி கிடைக்காதபோதும் இன்னொரு விடயத்தில் அவர்களால் மகிழ்ச்சியடைவது அவர்களுக்கு சாத்தியமானதாக இருக்கும்.

மாறாக வேறு சிலர் நிறையப் பணம், மாளிகை போன்ற வீடு, விலையுயர்ந்த வாகனம், சமீபத்தில் விற்பனைக்கு வந்த விலையுயர்ந்த கைபேசி போன்றவற்றைவை தங்களிடம் இருந்தால் தங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியுமென்று நம்பி அவற்றைத் தமதாக்க கடினமாக உழைக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஆசைப்பட்ட எல்லாமே அவர்களுக்கு சொந்தமான பின்னர், அவர்களின் மகிழ்ச்சி, மனத் திருப்தி எல்லாமே சில நாட்களிலேயே வடிந்துவிடும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. அவர்களுக்கு மீண்டும் மகிழ்ச்சியை ஏற்படுத்த புதிதாக வேறு பொருள் தேவைப்படும். மீண்டும் அதை நோக்கி அவர்கள் ஓடத் தொடங்குவார்கள். அதேநேரம் இவ்வாறு தமது மகிழ்ச்சிக்காக வாங்கிய பொருள்களில் ஏதாவது ஒன்றுக்குச் சிறு சேதம் ஏற்பட்டுவிட்டால் அதனால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய மனவருத்தம் அவர்களின் மகிழ்ச்சியை அடியோடு இல்லாது ஒழித்துவிடும் என்பதுதான் உண்மை.

வேறு சிலர் தமது சிறுவயதில் இருந்தே தாங்கள் ஈடுபடும் எதிலும் வெற்றிபெறவேண்டும் என்ற எண்ணம் உள்ளவராக இருப்பார்கள். அதற்காகத் தம்மைக் கடுமையாக வருத்திக் கொள்ளவும் அவர்கள் தயங்குவதில்லை. அவர்களால் அவர்கள் ஆசைப்பட்ட அந்த முதலிடம் கிடைக்கும்போதுதான் அவர்களால் மகிழ்ச்சியடைய முடியும். அதனைத் தவறவிட்டால் அவர்கள் உடைந்துபோய் விடுவார்கள். அதேநேரம் அந்த முதலிடம் கிடைத்தாலும் அவர்களால் அந்த மகிழ்ச்சியை முழுமையாக அனுபவிக்க முடிவதில்லை. தாம் கைப்பற்றிய முதலிடத்தை எப்படித் தக்க வைப்பது என்பதிலேயே அவர்களின் கவனம் இருக்கும்.

 இன்னும் சிலருக்கு சமூகத்தில் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய மரியாதை, பாராட்டு, சமூக அங்கீகாரம் என்பனவே மகிழ்ச்சியைத் தருபவையாக இருக்கின்றன. இவர்கள் தாமாகவே சமூக செயற்பாடுகளில் தங்களை விரும்பி இணைத்துக் கொள்வார்கள். ஒரு குழுவாக இணைந்து வேலை செய்தாலும் தான் தனியாகத் தெரிய வேண்டும், தனக்கே பாராட்டும் மாலையும் விழவேண்டும் என்று நினைப்பார்கள். அதற்காக மற்றவர்களைவிட அதிகம் நேரம், சக்தி என்பவற்றை இவ்வாறன செயற்பாடுகளில் செலவிடுவார்கள்.

 இவர்களால் தமது சகா யாராவது மற்றவர்களால் பாராட்டுப்பட்டு விட்டால் அதனைத் தாங்க முடிவதில்லை. இவர்கள் தன்னோடு உள்ளவர்கள் தன்னைப்பற்றி எப்போதும் பாராட்டிப் பேச வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார். இவ்வாறானவர்கள் தாங்களும் மகிழ்ச்சியாக வாழ்வது இல்லை. மற்றவர்களையும் மகிழ்ச்சியாக இருக்க விடுவதில்லை.

 இவ்வாறாக தமது மகிழ்ச்சியை உயிரற்ற பொருட்கள் மற்றும் சூழ உள்ளவர்கள் மூலம் மட்டுமே பெற்றுக் கொள்ள நினைப்பவர்கள் பொதுவாக மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லை. இவர்களின் மனதில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் ஆசைகள், எதிர்மறை எண்ணங்கள், பிறர்மேல் ஏற்படக்கூடிய பொறாமை உணர்வு, போட்டி மனப்பான்மை, பிறர் தன்னை மகிழ்விக்க வேண்டும் என்ற அதீத எதிர்பார்ப்பு போன்றவையே இவர்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியான சந்தர்ப்பங்களையும் நாசமாக்கிவிடுகிறது. இவர்களைவிட தமது சிறு சிறு வெற்றியையும் மற்றவரின் வெற்றியையும் கொண்டாடத் தெரிந்தவர்கள்தான் அதிகம் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

உண்மையில் எமது எண்ணங்கள் செயல்களில் மாற்றங்களைச் செய்வதன் மூலமும் எமது சூழலில் சில மாற்றங்களை செய்வதன் மூலமும் ஆசைகள், இலக்குகளை மீளமைத்துக் கொல்வதன்மூலமும் நாங்கள் அனைவருமே மகிழ்ச்சியாக வாழமுடியும். கீழே உள்ளவை போன்ற சில விடயங்களைப் பின்பற்றுவதன் மூலம் எமது வாழ்க்கையை எப்போதுமே மகிழ்ச்சியானதாக எம்மால் வடிவமைத்துக் கொள்ள முடியும்.

 

1.   உங்கள் திறமை, அனுபவங்களுக்கு ஏற்ற முயற்சிகளில் உங்களை ஈடுபடுத்துங்கள். வெற்றி கிடைக்காவிட்டால் அல்லது தாமதமானால்  உடைந்து விடாதீர்கள். மீண்டும் சிறு இலக்குகள் வைத்து அவற்றை வெற்றி கொள்ள முயற்சி எடுங்கள். ஒருபோதும் மற்றவர்களின் பெறுபேறுகளை உங்கள் இலக்குகளாக்கி விடாதீர்கள்.

 

2.   உங்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அவர்களுக்கு விருப்பமான விடயத்தில் ஈடுபடவும் அதில் சாதிக்கவும் உங்களால் முடிந்த வகையில் உதவுங்கள். அவர்களின் சின்னச் சின்ன பெறுபேறுகளையும் கொண்டாடுங்கள். அவர்கள் மீது நிபந்தனையற்ற அன்பை வெளிப்படுத்துங்கள்.

 

3.   உங்கள் வாழ்வில் நடந்த நல்ல விடயங்களை மட்டுமே நினைத்துப் பாருங்கள். உங்களோடு பழகியவர்களின் நல்ல குணங்கள், அவர்களோடு உங்களுக்கிருந்த சந்தோசமான தருணங்களை மட்டுமே நினைத்துப் பாருங்கள்.

 

4.   குடும்பத்தோடும் போதுமான நேரம் செலவிடுங்கள். குறிப்பாக உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுங்கள். அடிக்கடி குடும்பத்துடன் வெளியில் சென்று ஒன்றாக உணவகத்தில் உணவு உண்ணுங்கள்.

 

5.   ஒவ்வொரு வாரமும் குறைந்தது மூன்று நாட்களாவது உங்களுக்கு பிடித்த உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். ஓடுதல், நடைபயிற்சி, சைக்கிள் ஓடுதல்.

 

6.   ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் பழக்குங்கள்.

 

7.   தினமும் போதுமான நேரம் நித்திரை கொள்ளுங்கள். தினமும் குறித்த நேரத்தில் உறங்கச் செல்லுங்கள்.

 

8.   நல்ல நண்பர்களுடன் பழகுங்கள். அவர்களுடன் ஆரோக்கியமான முறையில் நேரத்தைச் செலவிடுங்கள். Toxic ஆன நபர்களிடமிருந்து விலகியே இருங்கள்.

 

9.   உங்கள் மாத வருமானத்தின் ஒருபகுதியை எதிர்காலத்திற்கென சேமியுங்கள். அதில் ஒரு சிறுபகுதியை தேவையுடைய மக்களுக்காக உதவுவதற்காகச் செலவிடுங்கள்.

இன்று பதினோராவது சர்வதேச மகிழ்ச்சி தினம். இந்த வருட கருப்பொருளாக Be Mindful. Be Grateful. Be Kind என்ற சுலோகம் அமைந்துள்ளது. நாட்டின் தேசிய வருமானத்தைவிட மக்களின் மகிழ்ச்சியே முக்கியமானது என்று கருதும் நாடான பூட்டானின் முயற்சியினாலேயே இந்த நாள் கொண்டாடப்படுகிறது. நாமும் பூட்டான் மக்களைப் போல மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து எங்களோடு உள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதோடு எங்களுடைய வாழ்க்கையைத் தினமும் ரசித்து வாழவும் முயற்சிப்போம்.