உலக காடுகள் தினம் – March 21
தொழில்நுட்பம் கோலோச்சும் இன்றைய காலத்தில் செவ்வாயில் உயிர்வாழ என்ன
செய்யலாம் என்று ஆராய்ச்சி செய்பவர்களே மக்கள் மத்தியில் பிரபலமானவர்களாக
இருக்கிறார்கள். அவர்களின் ஆய்வுக்காக கோடிக்கணக்கில் பணம் கொடுக்க பல அரசுகளும்
சில தனிநபர்களும் தயாராகவே இருக்கிறார்கள். மக்களில் பலரும் செவ்வாயில்
புதுவாழ்க்கை என்ற அக்கரைப் பச்சைக்காக காத்திருக்கிறார்கள்.
ஆனால் எமது வீட்டை நாங்களே செப்பன்னிட்டுக் கொண்டால் வேறு வீடு தேவையில்லை
என்ற நம்பிக்கையோடும் பலர் இருக்கிறார்கள். வீட்டில் சேரும் மாசுகளையும் கழிவுகளையும்
அகற்றிச் சுத்தமாக்கி விட்டால் இங்கேயே இருந்துவிடலாமே என்று தம்மால் இயன்ற வகையில்
முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களில் சிலர் மட்டுமே மக்களிடையே
பிரபலமடைந்திருக்கிறார்கள். இன்னும் பலர் எந்த ஊடக வெளிச்சமோ சமூக மதிப்பளிப்போ
கிடைக்காத நிலையிலும் எந்தப் பலனையும் எதிர்பார்க்காமலே தமது பணியை செய்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களில் சிலரைப்பற்றிப் பார்க்கலாம்.
1. பத்ம ஸ்ரீ Jadav Molai Payeng - The Forest Man of India
ஆதிக்குடிகளின் இனத்தைச் சேர்ந்த ஜாதவ் பாயேங் அஸ்ஸாமில்
உள்ள ஒரு காட்டுப் பகுதியில் வாழ்ந்து வந்த ஒரு ஏழை மனிதர். அவர் வாழ்ந்த
பகுதியில் இருந்த பிரம்மபுத்திர நதித் தீவான முஜிலி தீவு தொடர்ந்து மண்ணரிப்புக்கு
உள்ளாகி அழிவடைந்து வந்தது. இதனைத் தடுப்பதற்கு அஸ்ஸாம் வனவிலங்குத் திணைக்களம் அந்த
மண்மேடான தீவில் 200 ஹெக்டயரில் மரங்களை மீள நடுவதற்கு முயற்சியெடுத்தபோதும் ஓரிரு
வருடங்களிலேயே அதைக் கைவிட்டு விட்டது.
ஆனால் வனவிலங்குத் திணைக்களத்தில் ஒரு அடிப்படை
ஊழியராக இருந்த ஜாதவ் அந்தத் திட்டத்தை கைவிட்டுவிட விரும்பவில்லை. அரசு
கைவிட்டாலும் தனது சொந்த முயற்சியால் தொடர்ந்து முப்பது வருடங்களாக அந்தத் தீவில் பல்லின
மரங்களை ஆயிரக்கணக்கில் நட்டு, இன்று 550 ஹெக்டயர் பரப்பளவுள்ள ஒரு காட்டினையே
உருவாக்கி இயற்கைக்குக் கொடுத்துவிட்டார். அவர் இதன்மூலம் அந்தத் தீவையும்
காப்பாற்றி வனவிலங்குகளுக்குப் புதிதாக ஒரு வாழிடத்தையும் உருவாக்கி விட்டார். இன்று
அந்தக் காடு வனவிலங்குகள் படிப்படியாகக் குடியேறி ஒரு முழுமையான சூழல் தொகுதியாக
மாறிவிட்டது.
2.
Saalumarada Thimmakka – மரங்களின் தாய்
மரங்களின் தாய் என்று செல்லமாக அழைக்கப்படும்
சாலுமரதா திம்மக்கா கர்நாடகாவின் துமுகுறு மாவட்டத்தைச் சேர்ந்தவர். முறைசார்
கல்வி கற்காத, கூலித் தொழிலாளியாக இருந்த இவருக்குத் திருமணமாகி 25 வருடங்கள்
ஆகியும் பிள்ளைகள் பிறக்கவில்லை. அதனால் இவர் தனது நாற்பதாவது வயதில்
தற்கொலைக்கும் முயன்று இருக்கிறார். பின்னர் தனது மனதை வேறு பயனுள்ள விடயத்தில்
செலுத்த விரும்பிய திம்மக்கா அன்றிலிருந்து வீதியோரங்களில் மரங்களை வளர்க்கத்
தொடங்கினார். இதற்காக அவர் தெரிவு செய்தது
ஆலமரத்தை ஆகும். கணவனோடு இந்த முயற்சியைத் தொடங்கிய திம்மக்கா 1991 இல் அவரின்
கணவர் இறந்த பின்னரும் அவர் மரங்களை நட்டு வளர்ப்பதை நிறுத்தவில்லை.
இவர் கர்நாடக மாநிலத்தில் குதூர்
கிராமத்துக்கும் ஹுலிகல் என்ற இடத்துக்கும் இடைப்பட்ட நான்கு கிலோமீட்டர் தூரத்துக்கு
பிரதான சாலையின் இருமருங்கிலும் மொத்தமாக 385 ஆலமரங்களை நட்டு வளர்த்திருக்கிறார். இந்த இளங்கன்றுகளுக்கு நீர்
ஊற்றுவதற்காக சிலவேளைகளில் நான்கு கிலோமீட்டர் தூரத்துக்கு தண்ணீரைக் கொண்டு செல்ல
வேண்டிய தேவையும் இவர்களுக்கு இருந்திருக்கிறது. தனது நாற்பதாவது வயதில் மரம் நடத்
தொடங்கிய இவர் அதன்பின்னர் 65 வருடங்களுக்குத்
தொடர்ந்து மரங்களை நட்டு வந்திருக்கிறார். இவர் இந்த ஆலமரங்களைத் விட 8000 வேறுவேறு
வகையான மரங்களையும் நட்டு வளர்த்திருக்கிறார்.
2019 இல் பத்மஸ்ரீ விருது பெற்ற இவருக்கு அதற்கு முன்னர் National Citizens Award, Nadoja Award, Karnataka Kalpavalli Award, Godfrey
Phillip Award, and Vishwathama Award போன்ற பல
விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.
3.
Piyush Manush – சுற்றுச் சூழல் ஆர்வலர்
சேலத்தில் பிறந்து வளர்ந்தவரான (மகாராஷ்டிரா பின்னணி கொண்ட) பியுஸ் மனுஷ் ஒரு விவசாயி, சுற்றுச் சூழல் ஆர்வலர், மற்றும் ஒரு நீர்நிலை மீட்பாளர் என்று சொல்லலாம். சேலம் பகுதியில் இருந்த பல மாசடைந்த குளங்களை மக்களுடன் இணைந்து இவர் சீரமைத்திருக்கிறார். இவற்றோடு நிலஅபகரிப்பு, இயற்கைக்கு சேதம் விளைவிக்கும் அபிவிருத்தித் திட்டங்கள், வணிக நோக்கத்தில் உருவாக்க முனைந்த சுரங்க வேலைகள் போன்றவற்றை எதிர்த்து மக்களோடு இணைந்து போராடி இருக்கிறார். இதற்காக அடிக்கடி கைது செய்யப்பட்டும் இருக்கிறார்.
இதனைவிடவும் தர்மபுரி மலைப்பகுதியில் உள்ள காடுகளைப் பாதுகாப்பதற்காக கூட்டுறவுக் காடு (Coop Forest) என்ற அமைப்பையும் 2009 இல் உருவாக்கினார். இவருடைய செயற்பாடுகளால் கவரப்பட்டு தமிழ்நாட்டில் தாம்பரம் அருகில் இளைஞர்கள் அதேபோல காடமைக்க முயற்சி எடுத்திருப்பதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
4. நடிகர் விவேக்
நடிகர் என்பதற்கு அப்பாற்பட்டு நடிகர் விவேக் சுற்றுச்
சூழலிலும் அக்கறை செலுத்திவருகிறார். இந்தியாவின் முன்னாள் சனாதிபதி அப்துல் கலாம்
அவர்களின் வேண்டுகோளை ஏற்று ஒரு கோடி மரம் நாடும் திட்டத்தை (Green Kalam Project) 2010 இல் ஆரம்பித்தார். இந்தத் திட்டத்தின் கீழ் பாடசாலைகள், கல்லூரிகள், கிராமங்கள்
எனப் பல இடங்களிலும் எட்டு வருடங்களில் முப்பது இலட்சம் மரங்களை நட்டு
முடித்திருக்கிறார். பூமி வெப்பமயமாதலைக் குறைப்பதற்காகவே இந்தத் திட்டம்
ஆரம்பிக்கப்பட்டது.
5. Rev. Godson Samuel
பனைவளம் நிறைந்த கன்னியாக்குமரியில் பிறந்தவரான
பாதிரியார் கோட்சன் சாமுவேல் அவர்கள் கடந்த 25 வருடங்களை பனைமரங்களைக்
காதலிப்பதில் செலவிட்டுள்ளார். பனை மரங்களை நடுவதை ஊக்குவித்தல், பனை சார்
பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உதவுதல் என இவரது பணி தொடர்கிறது. இவர் மும்பையில்
உள்ள ஆரே (Aarey) வனப்பகுதியில் மரங்களை வெட்டப்படுவது தொடர்பாக விழிப்புணர்வு
ஏற்படுத்துவதிலும் பங்கேற்றுள்ளார். இந்தப் பகுதியில் கடந்த வருடம் பனம்
விதைகளையும் தொண்டர்கள் உதவியுடன் நட்டிருக்கிறார். இந்தப் பனைகளின் காதலனின் பயணம்
இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இவர்களுள் நடிகர் விவேக்கைத் தவிர ஏனையவர்களின்
செயற்பாடுகள் பல வருடங்கள் கழித்தே மக்களைச் சென்றடைந்தன. அரசின் கவனத்தையும்
பெற்றுக் கொண்டன. ஆனால் இன்று இந்தியாவில்
இவர்கள் அனைவருமே மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு முன்னுதாரணங்களாக விளங்குகின்றனர்.
இலங்கையை எடுத்துக் கொண்டால் எல்லோருமே நாடளாவிய
ரீதியில் பிரபலமடையாவிட்டாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக காடுகளை பாதுகாக்க
விரும்பவர்கள், மரங்களை நடுபவர்கள் எம்மத்தியில் இருந்திருக்கிறார்கள். இன்றும்
இயங்கிக் கொண்டும் இருக்கிறார்கள்.
1.
Milk white அதிபர் கந்தையா கனகராஜ்
ஒரு வர்த்தகராகவும் உள்ளூர்
உற்பத்தியாளராகவும் அறியப்பட்ட கந்தையா கனகராஜ் அவர்கள் பனம்பழங்கள் கிடைக்கும் காலத்தில் தனது லாரி நிறைய
பனை விதைகளை ஏற்றிக் கொண்டு வந்து தனது பணியாளர்களைக்கொண்டு
சாலை ஓரங்களில் அவற்றை வீசி எறியச் சொல்லுவாராம். அவ்வாறு வீதியோரங்களில் முளைக்கும்
பனைமரங்கள் எதிர்காலச் சந்ததிக்கு உதவும் என்பது அவருக்கு நம்பிக்கையாக
இருந்திருக்க வேண்டும். அவரும் பனை மீது மீளாக்காதல் கொண்ட ஒருவராக இருந்திருக்கிறார்.
2.
Arthur V.
Dias
ஆர்தர் டயஸ் வசதியான குடும்பத்திற் பிறந்தவர். அவரது ஆரம்பகாலங்களில் மதுவிலக்குக்காகவும், இலங்கையின் சுதந்திரத்துக்காகவும்
போராடிய ஒருவர். உலக யுத்தம், இலங்கையில்
அனேக உணவுற்பத்தி நிலங்கள் பெருந்தோட்டப் பயிர்களால் விழுங்கப்பட்ட நிலை என்பவற்றைத்
தொடர்ந்து, எதிர்காலத்தில் பஞ்சம் வரக்கூடும் என நினைத்த டயஸ் பலா மரங்களை
அதிகளவில் உற்பத்தி செய்து இவ்வாறான அபாயத்தைத் தவிர்க்கலாம் என நினைத்தார்.
மலேசியாவுக்குச் சென்று ஏராளம் பலா விதைகளைக் கொண்டுவந்து பலா நாற்றுகளை உருவாக்கி
ஒவ்வோர் ஊருக்கும் சென்று மக்களிடம் அவற்றை இலவசமாய்க் கொடுத்து நாடெங்கும் எங்கும்
பலா மரங்கள் உருவாக வழியமைத்தார்.
அவர் அவ்வாறு உருவாக்கிய மரங்களின் எண்ணிக்கை பத்துலட்சம் இருக்கலாம் என நம்பப்படுகிறது. டயஸ் மக்கள் ஆதரவுடன் நட்டுவைத்த மரங்கள்
எழுபதுகளில் ஏற்பட்ட பஞ்சத்தை வென்றது மட்டுமல்ல, தற்போதைய
கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காலத்திற் பல குடும்பங்கள் உயிர்
பிழைக்கவும் வழிவகுத்துள்ளன.
3.
இராசையா குபேந்திரநாதன்
யாழ்ப்பாணத்தைத் சேர்ந்த இராசையா குபேந்திரநாதன்
பலாலி வீதியில் யாழ்ப்பாணம் இலுப்பையடிச்
சந்தியில் இருந்து ஊரெழு அம்மன் கோவில் வரை சுமார் 350 நிழல்
மரக்கன்றுகளை வீதியின் ஒரு பக்கத்தில் (மட்டும்), தனது சொந்தச்
செலவில் நாட்டி, தண்ணீர் ஊற்றி வளர்த்துள்ளார்.
இப்போது அவை வளர்ந்து பெரிய மரங்களாகி விட்டன. ஆனால் இப்படியானவர்கள் மிகச்
சிலருக்கே தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்.
4.
Douglas Thisera – Mangrove Master
இலங்கையின் கடலோரப்பகுதியில் கடலரிப்பைத் தடுத்தல்,
பல மீனினங்கள், இறால், நண்டுவகைகள் இனப்பெருக்கம் செய்வதற்கு ஏற்ற சூழலை
வழங்குதல், கரையோர வெள்ளப்பெருக்கை குறைதல் போன்ற பல நன்மைகளை mangrove என்று சொல்லப்படும்
சதுப்புநிலத் தாவரங்கள் வழங்குகின்றன. டக்லஸ் திசேர கடந்த 16 வருடங்களில் இலங்கையின் மேற்கு
கரையோரமாக கிட்டத்தட்ட 2 மில்லியன் mangrove
மரங்களை நட்டிருக்கிறார். அதனோடு இவ்வாறான மரங்களைப் பாதுகாக்கவென சமூகத்
திட்டங்களையும் ஒழுங்கு செய்துள்ளார்.
இவ்வாறான தனிநபர்கள் தவிர்த்து பலர்
அமைப்புகளாக இணைந்தும் காடுகளைக் காக்கவும் புதிய காடுகளை உருவாக்கவும் முயற்சி
செய்து கொண்டிருக்கிறார்கள்.
1. Rainforest Protectors of Sri Lanka
இந்த அமைப்பினர் ரூனாகந்த மலைக்காட்டுக்கு
அருகில் உள்ள உள்ள ஹெடிகல்ல என்ற இடத்தில உள்ள தனியார் நிலத்தில் 2015 இல் 209 சுதேச மரங்களை
நட்டு முடித்துள்ளனர். இவர்களின் நோக்கம் ரூனாகந்த காட்டுப்பகுதியில் உயிர்ப்
பல்லினத் தன்மையை அதிகரிப்பதும், இந்தப் பகுதியில் மண்ணரிப்பைத் தடுப்பதுமாகும்.
இதேபோல ரக்வான பகுதியில் ஆக்கிரமிப்புத்
தாவரங்களை அகற்றி சுதேச மரங்களை நடுதல் இவர்களின் இன்னொரு செயற்திட்டமாகும்.
இதுபோன்ற பல வேலைத் திட்டங்களை இவர்கள் செய்து வருகிறார்கள்.
2.
பசுமைச்
சுவடுகள்
பசுமைச் சுவடுகள் என்ற அமைப்பு உள்ளூர் சிறுவர்கள்,
இளைஞர்களையும் இணைத்துக் கொண்டு விதைப்பந்துகளை உருவாக்குகிறார்கள். இந்த விதைப்
பந்துகளை காடழிக்கப்பட்ட பகுதிகளில் வீசி மீண்டும் சுதேச மரங்களை உருவாக்குவது
இவர்களின் நோக்கமாகும். இதனோடு வீட்டுத் தோட்டம் செய்ய விரும்புபவர்களுக்கு
அதற்கான விதிகளையும் வழங்குகிறார்கள்.
3.
வேர்கள் அமைப்பு
வேர்கள் அமைப்பும் விதைப்பந்துகளை உருவாக்கி
காடுகளை மீள உருவாக்கும் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. கடந்த வருடம்
விமானப்படை உதவியுடன் லஹுகல-கிதுலான பகுதியில் ஒரு தொகுதி விதைபந்துகளை இவர்கள்
தூவினார்கள்.
இதனைவிடவும் குறிப்பிட்ட ஒரு சிறு நிலப்பகுதியில்
அடர்த்தியாக உள்ளூர் மரக்கன்றுகளை வளர்ப்பதன் மூலம் சிறிய காடுகளை உருவாக்கும்
முயற்சியிலும் மட்டக்களப்பு வேர்கள் அமைப்பு ஈடுபட்டுள்ளது.
4.
வடமராட்சி
பசுமை நிழல்
இந்த அமைப்பும் இதுவரை 10,000 மரக்கன்றுகளை
நட்டுள்ளது. இவர்கள் பல பிரதேசங்களின் ஆக்கிரமிப்புத் தாவரங்களை அழிப்பதுடன்,
இலுப்பை, மருது, மலைவேம்பு, சவண்டலை போன்ற
பயன்தரும் மரங்களை நட்டுவருவது பாராட்டத்தக்கது.
5. Sudeesa
புத்தளத்தை தளமாகக் கொண்ட இந்த அரச சார்பற்ற
நிறுவனம் தனது செயற்பாடுகளில் ஒரு அங்கமாக இலங்கையின் கரையோரப் பகுதிகளில்
mangrove மரங்களை மீள நட்டு வருகிறது. மன்னாரில் உள்நாட்டுப் போர் விதவைகளின்
பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 17,000 mangrove செடிகளை மன்னாரில் வசிக்கும் பெண்களின் உதவியுடன் நட்டுள்ளது. இந்த நிறுவனத்தின்
குறிக்கோள் இலங்கையில் mangrove தாவரங்கள்
வளரும் 8,815 ஹெக்டயர்
நீரேரிகளைப் பாதுகாப்பதாகும்.
இவ்வாறு தனிநபர்களும் சமூக அமைப்புகளும் தன்னலமற்று எமது பிரதேசங்களில்
மீண்டும் காடுகளை உருவாக்க முயற்சிப்பது மிகவும் பாராட்டத்தக்கது. இவர்களே
உண்மையான சூப்பர் ஹீரோக்கள். எங்களால் நேரடியாக களத்தில் இறங்கி வேலை செய்ய
முடியாவிட்டாலும் வேறு வகைகளில் இவர்களுக்கு ஏனையவர்கள் தோள் கொடுக்க முன்வரவேண்டும். மேலும் பல
இளைஞர்கள் இவ்வாறன அமைப்புகளுடன் இணைந்து பயணிக்க முன்வரவேண்டும்.
கிராம மட்டத்திலும் பாடசாலைகளிலும் பொது அமைப்புகள் மேற்சொன்ன அமைப்புகளோடு
இணைந்து அவர்களும் பல்லின மரங்களை நட்டுப் பராமரிக்க முன் வரவேண்டும்.
கிராமங்களில் உள்ள வெற்றுக் காணிகளிலும் பயனுள்ள மரங்களை நடுகை செய்வதைப்பற்றி
யோசிக்கலாம். ஒவ்வொருவரும் தமது வீட்டுக்கொரு மரம் வளர்க்க முன்வருவதும் வரவேற்கத்தக்கது.
இவ்வாறு மரங்களை நடும்போது நீண்டகாலம் பயன்தரும் மரங்கள், பழமரங்கள், பொருளாதார நன்மை
தரக்கூடிய மரங்கள் எனத் தெரிவு செய்து நடலாம்.
இவ்வாறு மரங்களை நடமுடியாதவர்கள் வேறு வகைகளிலும் பங்களிக்க முடியும்.
உதாரணமாக பிளாஸ்டிக் பாவனையைக் குறைத்தல், தண்ணீரை வீண்விரயம் செய்யாது
பயன்படுத்துதல், மின்சாரத்தை அளவாகப் பயன்படுத்துதல், சுற்றுச்சூழலை சுத்தமாக
வைத்திருத்தல், முறையாகக் கழிவுகளைப் பாதுகாப்பாக அகற்றுதல் என்பனவும் மறைமுகமாக
எமது காடுகளையும் சூழலையும் பாதுகாக்க முடியும்.
மரங்களை நட்டுக் காடுகளை வளர்ப்பவர்கள் மட்டுமே சுற்றுச்சூழல் போராளிகள் இல்லை. அண்மையில் சிரச தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபற்றி சிங்கராஜா வானத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று அரசுக்கு எதிராக பயப்படாது குரல் கொடுத்த பாக்யா அபேவர்த்தனவும் ஒரு சுற்றுச் சூழல் போராளிதான். இவ்வாறான இளைஞர்களும் ஆதவு வழங்கப்பட வேண்டியவர்களே.
எதற்கெல்லாமோ கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கும் பல்கலைக் கழகங்கள் இவ்வாறு இயற்கையைக் காக்கப் போராடுவோரையும் கௌரவித்து தமக்குப் பெருமை தேடிக் கொள்ளலாமே? புலம் பெயர் தேசத்தில் உள்ளவர்களும் மரம் வளர்த்து என்ன பிரயோசனம் என்ன என்று கேட்காது, இதுபோன்ற தொண்டுப் பணிகளுக்கும் உதவி செய்ய முன்வரவேண்டும்.
- - வீமன் –
நன்றி:
இந்த ஆக்கத்திற்கான சில தகவல்கள் தியாகராஜா விஜயேந்திரன் அவர்களின் பக்கத்திலிருந்து
பெறப்பட்டது.
ஏனைய தகவல்கள் பல்வேறு இந்திய, இலங்கை தகவல் பக்கங்களில் இருந்து
பெறப்பட்டன.




No comments:
Post a Comment