பெரும் தொற்றுக் காலத்தில் உடல், உள ஆரோக்கியம் - 2
முதல் பதிவில் உடல் ஆரோக்கியம் தொடர்பாக நாம் ஒவ்வொருவரும் உணவு, உடற்பயிற்சி, ஓய்வு தொடர்பாக செய்யக்கூடிய சில விடயங்களைக் குறிப்பிட்டிருந்தோம். இந்தப் பதிவில் எங்கள் மனதை இந்தப் பேரிடர் காலத்தில் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் சில வழிமுறைகளைப் பார்ப்போம்.
சாதாரண காலத்திலேயே எமது எதிர்காலம், பிள்ளைகளின் எதிர்காலம், நிகழ்காலத்தில் நாம் முகம் கொடுக்கும் பிரச்சனைகளைப் பற்றி யோசிப்பது என்பது எம்மால் தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்தது. இந்த நிலையில் கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக நாம் முகம் கொடுக்கும் இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் கோவிட் நோய் வந்துவிடுமோ என்ற பயம் ஒரு பக்கம்; வக்சின்களை நம்பிப் போடலாமா என்ற தயக்கம் மறுபுறம்; இதைவிட பழைய இயல்பு வாழ்க்கைக்கு என்று திரும்புவோம் என்ற விடை தெரியாத கேள்வி இன்னொரு புறமாகத்தான் பலரும் நாட்களைக் கடத்துகிறார்கள். இவ்வாறன அழுத்தங்களும் கவலைகளும் எங்களைச் சூழ இருக்கும் நிலையில் நாங்கள் இவற்றை எதிர்கொள்ள மனதால் வலியவர்களாக இருக்க வேண்டியதாகிறது.
அதற்கு பல சுலபமான வழிமுறைகள் இருக்கின்றன. உங்களில் பலர் அவற்றை ஏற்கனவே பின்பற்றுபவர்களாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். மற்றவர்களும் கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள்.
உள ஆரோக்கியத்தில் உடற்பயிற்சிக்கு முக்கிய இடமுண்டு. நான் எதற்காக திரும்பவும் உடற்பயிற்சி பற்றிப் பேசுகிறேன் என்று உங்களில் சிலர் நினைக்கக்கூடும். ஆனால் எங்களை உற்சாகமாக வைத்திருப்பதற்கு உடற்பயிற்சி உதவுகிறது என்பதுதான் உண்மை. உடற்பயிற்சி செய்யும்போது எமது மூளையில் செரேடோனின் (Serotonin) என்ற சுரப்பு சுரக்கப்படுகிறது. அது எம்மை உற்சாகமாக வைத்திருக்க உதவுகிறது, நல்ல தூக்கத்தைத் தருகிறது. எமக்கு நாளாந்தம் வேலை மற்றும் வேறு காரணங்களால் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தைக குறைக்கவும் உதவுகிறது.
முன்பெல்லாம் நண்பர்கள், உறவினர்களை அடிக்கடி எங்காவது சந்தித்து ஊர்க்கதை மகிழ்ந்த எமக்கு இன்று வீடுகளுக்குள் முடங்கியிருப்பது மிகக் கஷ்டமான ஒரு விடயமாக உள்ளது. ஆனால் இந்த நாட்களில்தான் நாங்கள் முடிந்தவரை எமக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்களுடன் தொடர்பில் இருக்க முயற்சிக்க வேண்டும். அடிக்கடி அவர்களுக்கு அழைப்பு ஏற்படுத்தி நலம் விசாரியுங்கள். கானொளியில் பார்த்துக் கதைக்கக்கூடிய zoom meeting போன்ற வழிமுறைகளையும் முயற்சிக்கலாம். ஆனால் அதற்காக இன்னொருவரைப்பற்றி வம்பு பேசாதீர்கள். அதனால் வீண் வம்பில் மாட்டி உங்கள் மகிழ்ச்சியைத் தொலைக்க வேண்டியும், ஏற்படலாம்.
கோவிட் தொடர்பாக மணிக்கொரு தடவை Flash News சொல்லும் வானொலி, தொலைக்காட்சிச் சேனல்களை பார்ப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். உண்மையில் இவ்வாறான ஊடகங்கள் உங்களையறியாமலே உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியவை என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். வேண்டுமென்றால் காலை ஒருமுறை, மாலை ஒருமுறை முழுமையான செய்தி அறிக்கையைக் கேளுங்கள். அது போதும்.
வைரஸாகப் பார்த்து எங்கள் எல்லோருக்கும் குடும்பத்துடன் செலவு செய்ய நிறைய நேரத்தைக் கொடுத்துள்ளது. இப்படியாகிவிட்டதே என்று இடிந்து போய் ஒரு மூலையில் இருந்து மன அழுத்தத்தை ஏற்றிக் கொள்ளாமல் குடும்பத்தோடு மகிழ்ச்சி தரக்கூடிய செயற்பாடுகளில் ஈடுபடுங்கள்.
1. வாரம் ஒருநாளாவது குடும்பத்தோடு ஒரு படம் பாருங்கள் (Family Movie Time). உங்களுக்குப் பிடித்த படத்தைப் பார்க்க பிள்ளைகளை வற்புறுத்தாமல், பிள்ளைகளுக்குப் பிடித்த படத்தைப் பாருங்கள்.
2. உங்கள் வீட்டு வளவில் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடுங்கள். பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாட இதே மாதிரி வேறொரு சந்தர்ப்பம் கிடைக்காமலும் போகலாம்.
3. வீட்துக்கு உள்ளேயிருந்து பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடக்கூடிய போர்ட் கேம்ஸ், வார்த்தை விளையாட்டு, பாட்டுக்குப் பாட்டு, Karaoke போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபடலாம்.
4. பிள்ளைகளோடு உரையாடுங்கள். குறிப்பாக உங்கள் வீரப்பிரதாபங்களை அளந்துவிடாமல் உங்கள் பிள்ளைகளைக் கதைக்கவிட்டு, அவர்கள் சொல்வதற்குக் காது கொடுத்துக் கேளுங்கள்.
5. தினமும் ஒருவேளை குடும்பமாக அமர்ந்து உணவருந்துங்கள். ஆனால் உணவு மேசையில் தேவையற்ற விடயங்களைப் பேசாதீர்கள். குறிப்பாகப் பிள்ளைகளின் நடத்தைகள், குறைபாடுகளைப் பேசும் இடமாக சாப்பாட்டு மேசை இருக்கக்கூடாது.
பெரும்தொற்றுக் காரணமாக அனைவருமே ஒரு வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டிய சூழ்நிலையில், பெற்றோர் – பிள்ளைகள் இடையில் ஏற்படக்கூடிய முரண்பாடுகளைவிட, கணவன் – மனைவிக்கிடையில்தான் அதிகம் வார்த்தை பரிமாறல்களும் கருத்து முரண்பாடுகளும் ஏற்படக்கூடிய சூழ்நிலை அதிகம்.
இவை பல சந்தர்ப்பங்களில் சண்டைகளாக மாறவும் சந்தர்ப்பம் அதிகம் உள்ளது. இதற்கு, அனைவரும் வீட்டிலேயே இருப்பதால் மனைவிக்கு ஏற்படும் வேலைச்சுமை ஒருபுறமும், அது போதாதென்று ஆண்கள் அடிக்கடி சிற்றுண்டி, தேநீர் போன்றவற்றை மனைவி வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பல ஆண்களுக்கு இருக்கிறது. இவ்வாறான சூழல் இருவரையுமே மகிழ்ச்சியை இழக்கச் செய்வதுடன் தேவையற்ற மன அழுத்தத்தையும் ஏற்படுத்திவிடும்.இதனைச் தவிர்ப்பதற்கு பின்வரும் விடயங்களைப் பின்பற்றிப் பார்க்கலாம்.
1. கணவன் மனைவி இருவருமே சேர்ந்து சமைத்தல் அல்லது ஒவ்வொரு நேரச் சமையலை ஒவ்வொருவர் பொறுப்பெடுத்தல்.
2. மாலை நேரத் தேநீர் அருந்தும்போது கணவன் மனைவி இருவரும் அதற்காக நேரம் ஒதுக்கி ஒன்றாக அமர்ந்து தேநீர் அருந்துங்கள். இதன்போது மகிழ்ச்சி தரக்கூடிய விடயங்களைப் பேசலாம். உதாரணமாக, நீங்கள் திருமணம் செய்த புதிதில் நடந்த சுவாரசியமாக விடயங்கள், உங்கள் பிள்ளைகள் சிறுவர்களாக இருந்தபோது செய்த சேட்டைகள் போன்றவற்றைப் பேசலாம்.
3. வீட்டில் உள்ள ஏனைய வேலைகளையும் கணவன் மனைவி இருவரும் பகிர்ந்து கொள்ளும்போது இருவருக்குமே வேலைச்சுமை குறையும். இருவருக்குமிடையில் அன்யோன்யம் அதிகரிக்கும்.
இவ்வாறு கணவன் – மனைவி இருவரும் அன்பாகவும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருப்பது இந்தப் பெரும்தொற்றுக் காலத்தில் எம்மை மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும். ஆனால் ஆனால் அளவுக்கு மிஞ்சினால் தேனும் திகட்டும் என்பதுபோல தொடர்ந்து எழு நாட்களும் கணவன், மனைவி ஒரே வீட்டுக்குள் இருப்பது தேவையற்ற சின்ன சின்ன பிரச்சனைகளையும் உருவாக்கலாம்.
முக்கியமாக இருவருமே வீட்டிலிருந்து அலுவலக வேலை செய்பவர்களாயின் இருவரும் ஒரே மேசையில் இருந்து வேலை செய்யாதீர்கள். இருவரும் வேறு வேறு அறைகளில் இருந்து வேலை செய்யுங்கள். குறிப்பாக நேரலைக் கூட்டங்கள், தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளும்போது மற்றவருக்கு தொந்தரவு இல்லாமல் வேலையில் முழுக் கவனத்தையும் செலுத்த முடியும்.
அதைவிட முக்கியமானது கணவன், மனைவி இருவருமே தமக்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். அதாவது உங்களுக்கேயான உங்கள் தனிமைக்கான நேரம். இந்த நேரத்தில் நீங்கள் படம் பார்க்கலாம், விருப்பமான பாட்டுக் கேட்கலாம் அல்லது ஒரு புத்தகம் வாசிக்கலாம். தினமும் உங்களுக்காக 30 நிமிடத்தில் இருந்து ஒரு மணித்தியாலம் வரை உங்களுக்கென ஒதுக்கிக் கொள்ளுங்கள். இது உங்களைத் தினமும் புதுப்பித்துக் கொள்ள உதவும்.
இவ்வாறான விடயங்களைப் பின்பற்றுவதால் உங்கள் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். தேவையில்லாத விடயங்களைப் பற்றி யோசிக்காதீர்கள். உதாரணமாக, கோவிட்க்கு மருந்து எப்படிக் கண்டுபிடிப்பது? செவ்வாய்க்கு செல்லும்போது என்ன பொருட்களைக் கொண்டு செல்லலாம்? நான் சொன்னபடி கேட்கும் ஒருவராக எனது வாழ்க்கைத் துணையை மாற்றுவது எப்படி? எனவெல்லாம் யோசித்தால் உங்களுக்கு மனவழுத்தம்தான் ஏற்படும். அதனால் அப்படியான விடயங்களைப்பற்றி யோசிக்காமல் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்.
மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் இன்னொரு விடயமும் முக்கியமானது. அதுதான் self-care எனப்படும், எம்மைக் கவனித்துக் கொள்ளுதல். அதை எப்படிச் செய்யலாம் என்பதை இன்னொரு பதிவில் பார்ப்போம்.

No comments:
Post a Comment