Saturday, 10 July 2021

 நேருவின் பழங்குடியின “மனைவி” !

******************************************



உங்களில் எத்தனை பேருக்கு நேருவின் பழங்குடியின மனைவியைத் தெரியும்? அவர் எப்படியான வாழ்க்கையை வாழ்ந்தார் என்று தெரியுமா?
புதினி (Budhni Manjhiyan) மேற்கு வங்காளத்தில் வாழும் ஒரு பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண். அங்கு தாமோதர் ஆற்றின் குறுக்காக நேரு தலைமையிலான இந்திய அரசு ஒரு அணையைக் கட்டியது. அந்த அணை கட்டும் வேலைக்கு வந்த ஒரு பழங்குடி இனப் பெண்தான் இந்தப் புதினி. அணையும் கட்டி முடிக்கப்பட்டு நேருவின் கையால் திறப்பதற்கும் நாள் குறிக்கப்பட்டது.
அந்த நாளான 1959 ஆம் ஆண்டு, டிசம்பர் 6ம் திகதி அந்த அணைக்கட்டைத் திறந்து வைக்கப் பிரதமர் நேரு அங்கு சென்றிருந்தார். அதன்போது, தான் அணையைத் திறந்து வைக்காது, அந்த அணையைக் கட்டும் வேலையில் ஈடுபட்ட பழங்குடியினப் பெண்ணான பதினைந்து வயது புதினி என்பவரைக் கொண்டே அணையைத் திறக்க வைத்தார். அவர் அதோடு விட்டிருக்கலாம். ஆனால், விதி யாரை விட்டது? பிரதமர் நேரு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த அங்கிருந்த மாலையை அந்தப் பெண்ணின் கழுத்தில் போட்டு வாழ்த்தினார்.
அந்த ஒரு நிகழ்வு அந்தப் பெண்ணின் வாழ்க்கையையே புரட்டிப்போடப் போகிறது என்று நேருவுக்கும் தெரிந்திருக்கவில்லை, அந்தப் பெண்ணுக்கும் தெரிந்திருக்கவில்லை.
அந்த மாலை போட்ட நிகழ்வின் பின்னர் அன்றிரவே ஒன்றுகூடிய அந்தப் பெண்ணின் சமூகம், நேரு மாலை போட்டதால் புதினி இப்போது நேருவின் மனைவியாகிவிட்டார் என்று அறிவித்தது. அதனோடு நேரு தமது பழங்குடியினத்தவர் இல்லை என்பதால் புதினியை தமது சமூகத்திலிருந்து ஒதுக்குவதாகவும் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் தனது சமூகத்துடன் இருக்க முடியவில்லை. மூன்று வருடங்களில் அவர் செய்து வந்த அரச வேலையையும் இழந்தார். நேருவின் மனைவி என்ற பெயருடன் அவரால் தனது சமூகத்தில் ஆணொருவரைத் திருமணம் செய்வது சாத்தியம் இல்லை என்பதையும் உணர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் ஜார்கண்டிற்குச் சென்றார். அங்கு ஏழு வருடங்கள் தனது வாழ்க்கையை முன்னெடுக்க பல சிரமங்களைச் சந்தித்தார். அந்தக் காலப்பகுதியில் சுதிர் தத்தா என்பவரைச் சந்திந்தார். அவரை மணம் செய்ய விரும்பியபோதும், தன்னை நேருவின் மனைவியாகக் கருதும் தனது சமூகத்தினால் ஏதும் கேடு நிகழுமோ என்ற அச்சத்தினால் அந்த எண்ணத்தைக் கைவிட்டு இருவரும் ஒன்றாக வாழத் தொடங்கினர். அவர்களுக்கு மூன்று பிள்ளைகளும் பிறந்தன.
இவ்வளவும் நடந்த பின்னரும் அவரது பழங்குடி சமூகத்தைப் பொறுத்தவரை புதினி நேருவின் மனைவிதான். எப்படியோ இந்த விடயத்தை அறிந்த ராஜீவ் காந்தி 1985 இல் தனது “பாட்டியை” அவரது 41வது வயதில் தேடி வந்து சந்தித்துள்ளார். உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்று கேட்டபோது, தனது வேலையைப் பறித்துவிட்டார்கள், அந்த வேலையைத் திரும்பத் தரமுடியுமா என்று கேட்க, ராஜீவ் காந்தியின் உதவியால் 23 வருடம் கடந்து அந்த வேலை மீண்டும் கிடைத்தது.
பின்னர் இவர் இறந்துவிட்டதாக 2012 இல் சொல்லப்பட்டபோதும் 2019 இல் இவர் உயிருடன் இருப்பதை அறிந்த கேரளாவைச் சேர்ந்த ஊடகவியலாளரான சாரா ஜோசப் இவரைத் தேடிக் கண்டுபிடித்து அவரது கதையை ஒரு நாவலாக்கினார். அதன் மொழிபெயர்ப்பு சங்கீதா ஸ்ரீனிவாசனால் செய்யப்பட்டு ஆங்கிலத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.
1959 இல் அன்றைய பிரதமர் தான் செய்வது பிழையென்று தெரியாது ஒரு இளம் பெண்ணின் கழுத்தில் போட்ட மாலை அந்தப் பெண்ணின் வாழ்வையே புரட்டிப் போட்டது. 32 வருடங்கள் கழித்து 1991 இல் அவரது பேரனான ராஜீவ் காந்திக்கு ஒரு பெண் மாலை போட்டவேளையில் அவரது வாழ்க்கை முடிந்து போனது.
-வீமன்-
குறிப்பு: ClubHouse இல் Surekaa Sundar என்பவர் ஜூலை 2ம் திகதி இந்தக் கதையைப் பகிர்ந்தார். மேலதிக விபரம் இணையத்தில் பெறப்பட்டது.

No comments:

Post a Comment

  அடி சறுக்கும் அனுர?   தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கில் பெரும் வெற்றியைப் பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்திரு...