பாராளுமன்றப்
பதவிப் போர் – 2
(சுமந்திரனின்) தமிழரசுக் கட்சி!
செல்வநாயகம் அவர்களால் 1949 இல் ஆரம்பிக்கப்பட்ட தமிழரசுக் கட்சி பலரின் கைமாறி இறுதியாக
ஸ்ரீதரனின் கைக்கு எட்டியும் எட்டாமலும் இருக்கும் நிலையில் இருக்கிறது. தமிழர்
தாயகம், சமஷ்டி என்று தொடர்ந்து பேசிக் கொண்டும், தீபாவளிக்குள் தீர்வு என்றும் பல
தசாப்தங்களாக மக்களை ஏய்த்துப் பிழைத்த கட்சியாகவே பலரால் பார்க்கப்படுகிறது.
அண்மையில் நடந்த தலைவர் தெரிவின்போது அரங்கேறிய
கூத்துகள், தேர்தல் முடிவை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கு, தமிழ் ஜனாதிபதிப் பொது
வேட்பாளரை ஆதரிப்பதில் இருந்த இரட்டை நிலைப்பாடு என்பன கட்சியின் மதிப்பை மேலும்
இறக்கியது எனலாம்.
தற்போது பாராளுமன்றத் தேர்தல்
வேட்பாளர் தெரிவு, கட்சியை மேலும் பலவீனப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது. வடக்கில்
தனியாக நிற்பதுடன் முன்னாள் பங்காளிக் கட்சிகளை திருடர்கள், கொலைகாரர்கள் என்று
விமர்சித்துக் கொண்டே, திருகோணமலையில் அதே “திருடர்களுடன்” கூட்டு என்பது என்ன
விதமான கொள்கை என மக்களை கேட்கச் செய்துள்ளது. தலைவராக இல்லாத போதிலும், தன்
விருப்பப்படி வேட்பாளர்களைத் தெரிவு செய்து, சிறிதரனையும் மௌனிக்கச் செய்து
கட்சியை சுமந்திரனின் தமிழரசுக் கட்சியாக மாற்றி விட்டார் என்றே சொல்லலாம்.
அவர் தன்னை ஒரு நேர்மையான ஜனநாயகவாதியாக
காட்டிக் கொண்டாலும், கடந்த தேர்தல் காலத்திலும் இம்முறையும் உட்கட்சி ஜனநாயக
முறையில் வேட்பாளர்களை நியமிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு கட்சி உறுப்பினர்களாலேயே
முன் வைக்கப்பட்டது. கட்சிக்குள் நீண்ட காலமாக இருந்த பெண் உறுப்பினர்களின்
விண்ணப்பத்தை ஓரமாக வைத்துவிட்டு தன் விருப்பம் போல புதிய வேட்பாளர்களை களமிறக்கி சில
நீண்டகால உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறி தனியாகக் களம் காணவும் இவரே
காரணமாகி நிற்கிறார். கடந்த முறை சசிகலாவை வாக்குகளுக்காக போட்டியில் இறக்கியது
போலவே இம்முறையும் அவர் குறித்த நபர்களை இறக்கியிருப்பதாகவே பலரும் கூறுவதை
அவதானிக்க முடிகிறது. இந்தச் சூழலில் எதுவும் செய்யாமல் மௌனமாக தனக்குரிய
ஆசனத்தைப் பெற்று அமைதியாக இருக்கும் ஸ்ரீதரன் மீதும் அவரது இயலாமை குறித்து
விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மறுபுறத்தில் கிழக்கு மாகாணத்தில்
கடந்த தடவை பாராளுமன்றம் சென்ற குறுகிய காலத்திலேயே தமிழ், சிங்கள, முஸ்லிம்
மக்களிடையே துரிதமாகப் பிரபலமான சாணக்கியனும் சுமந்திரனுடன் சேர்ந்த பின்னர் தனது
செல்வாக்கை கணிசமாக இழந்துள்ளதாகவே கிழக்கு நண்பர்கள் கூறுகிறார்கள். ஆனாலும்
அவருக்கு ஆசனம் கிடைக்கும் என்றும்
கூறுகிறார்கள். கட்சியில் தற்போது முக்கிய தூண்களாக காட்டிக் கொள்வோரின்
நிலையே இப்படி இருக்கும்போது ஏனைய வேட்பாளர்களுக்கு வெல்லும் சந்தர்ப்பம் கிடைக்கும்
என்பதே சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது.
தலைவரே அங்கீகரித்த கட்சி,
மாவீரர்களின் கட்சி என்று மேடை மேடையாகச் சொன்னாலும் தமிழரசுக் கட்சி
அங்கீகரிக்கப்பட்ட சூழ்நிலை வேறு என்பதையும் இவர்கள் இதய சுத்தியோடு தமிழ்
மக்களுக்காக போராடவில்லை என்பதையும் தமிழ் மக்கள் பலரும் உணராமல் இல்லை. இந்த
நிலையில் இவர்கள் இம்முறை படுமோசமாக மண் கௌவினாலும் ஆச்சரியமில்லை. என்னைக்
கேட்டால், கட்சியில் பெரும் சிதைவையும் பின்னடைவையும் பெற்றிருக்கும் தமிழரசுக்
கட்சிக்கு இம்முறை மக்கள் ஓய்வு கொடுத்து, அவர்கள் தம்மை புத்தாக்கம் செய்து கொள்ள
கால அவகாசம் கொடுப்பதே நல்லது என்பேன்.
ஒரு நாடு, இரு தேசங்கள்
இலங்கையில் நீண்ட வரலாறு கொண்ட,
மூன்றாம் தலைமுறை மன்னராட்சி நடைபெறும் ஒரு கட்சி என்று இந்தக் கட்சியைச் சொல்லலாம்.
தேர்தல் என்று வந்தாலே இவர்கள் எப்போதுமே இரட்டை நிலைப்பாடுதான். ஜனாதிபதி தேர்தல்
என்றால், அது சிங்களத் தலைமைக்கான தேர்தல், தமிழர்கள் தேர்தலைப் பகிஸ்கரிக்க
வேண்டும் என்பார்கள். சிங்கக்கொடிக்கு கிட்டவும் போக மாட்டோம் என்பார்கள். ஆனால்
பாராளுமன்ற தேர்தலில் ஆசனம் கிடைத்தால் அதே சிங்கக் கொடி பறக்கும் பாராளுமன்றம்
செல்லத் தயங்க மாட்டார்கள்.
2010 தேர்தலில் கஜேந்திரனுக்கு யாழ்
தொகுதியில் ஆசனம் ஒதுக்கவில்லை என்று முரண்பட்டு தனிக் கட்சி கண்டுவிட்டு,
தலைவரின் கொள்கையைக் கைவிட்ட கூட்டமைப்பிலிருந்து கொள்கைக்காக பிரிந்தோம் என்று
கூசாமல் சொல்பவர்கள். 2009இல் கைதான தனது தம்பியை மட்டும் காப்பாற்றி சிறையில்
இருந்த ஏனைய தமிழ் இளைஞர்களை விடுவிக்க அப்போது பா.உ. வாக இருந்த கஜேந்திரன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும்
காற்றுவெளியில் மிதந்து கொண்டிருக்கிறது. இதுவரை சிறையில் தடுத்து
வைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகளில் எத்தனை பேரை இவர்கள் வழக்குத் தொடுத்து
விடுவித்தார்கள் என்ற கேள்விக்குப் பதில் உங்களுக்கே தெரியும்.
2020 தேர்தலின் பின்னர் சட்டத்தரணி மணிவண்ணனை
தனியாக நிதி பெற்றார், கட்சியின் கொள்கைக்கு மாறாக நடந்தார் என்று சொல்லி
கட்சியிலிருந்து வெளியேற்றினார்கள். அவர் தேர்தலுக்கு 10 மாதங்களுக்கு முன்னர்
அவ்வாறு நடந்து கொண்டதாக கூறிய பிரதானிகளிடம், அப்படியானால் ஏன் அவரை அப்போது
கட்சியிலிருந்து விலக்கவில்லை என்ற கேள்விக்கு மழுப்பலாக பதில் சொன்னாலும் அவர்
மூலம் கிடைக்கும் வாக்குக்காகவே அவ்வாறு நடந்து கொண்டதாக சொல்லப்பட்டது. இதிலேயே
கட்சியின் நேர்மை புலப்பட்டது. அவர் மீது குற்றம் சுமத்தினாலும் கடைசி வரை அதனை
அவர்கள் நிரூபிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தனியாக களம் கண்ட பின்னர், முதன்
முறையாக 2020இல் ஆசனம் வென்றபோது கிடைத்த போனஸ் ஆசனத்தை கிழக்கிற்கு கொடுக்கும்படி
கட்சியில் சில உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கேட்டுக் கொண்டாலும், தேர்தலில்
தோற்றுப் போன, வடக்கைச் சேர்ந்த ஒருவருக்கே வழங்கி தமது கட்சியும் உட்கட்சி ஜனநாயகத்தை “மதிக்கும்” கட்சி என்று
நிரூபித்த கட்சியாகவே இருக்கிறது.
தலைவரின் கொள்கையைப் பின்பற்றும் கட்சி
என்று சொல்லிக் கொண்டாலும் தமது வேட்பாளர் பட்டியலில் எத்தனை முன்னாள் போராளிகள்
இருக்கிறார்கள் என்பதே அவர்களின் கொள்கைச் சுத்தத்தை வெளிப்படுத்தும் வகையில்
உள்ளது. இம்முறை வன்னித் தொகுதியில் முன்னாள் போராளிகளை பட்டியலில் இணைக்கும்படி
ஒரு முன்னாள் போராளி நேரடியாக தொடர்பு கொண்டு கேட்டபோது கட்சியின் தளபதி,
“எங்களோடு போராட்டத்துக்கு வரக்கூடிய ஆட்களுக்குத்தான் இடம் கொடுப்போம் என்று
கூறியதாகவும் ஒரு தகவல் இருக்கிறது.
தொடர்ந்து பேசுவோம்!
-
வீமன் -
No comments:
Post a Comment