Friday, 23 April 2021

 பெரும் தொற்றுக் காலத்தில் உடல், உள ஆரோக்கியம் - 1

 


பெரும் தொற்றுக் காலத்தில் ஒரு வருடத்திற்கும் மேலாக பல நாடுகளிலும் சிறு சிறு தளர்வுகளுடன் முடக்கநிலை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் உடற்பயிற்சி, விளையாட்டுச் செயற்பாடுகளுக்கு உள்ளக அரங்குகளைப் பயன்படுத்துதல்,  பொது இடங்களில், வீடுகளில் நண்பர்கள், உறவினர்களை ஒன்றாகச் சந்தித்தல்  போன்ற பல விடயங்களைச் செய்ய முடியாதுள்ளது.

 

அதிலும் எங்களில் பலர் வீட்டிலிருந்தே அலுவலக வேலைகளையும் செய்வதால் தனிமையிலே இனிமை காண வேண்டிய ஒரு நிலையில்தான் நாங்கள் இருக்கிறோம். போதுமான உடற்பயிற்சி இல்லாதது ஒருபுறம் இருக்க, வீட்டில் உள்ளவர்கள் Youtube பார்த்து விதவிதமாக சமையல் செய்து எங்களை பரிசோதனை எலியாகவும் பயன்படுத்துவதால் எங்களை அறியாமலே உடல் எடை கூடிப் போய்விட்டது. தனிமை, கோவிட் பற்றிய பயம், எதிர்காலம் குறித்த யோசனை போன்றவற்றாலும் எமது உள ஆரோக்கியத்திலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

இன்னும் எத்தனை நாளைக்கு இந்த நிலைமை என்று தெரியாத நிலையில் எங்கள் உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியத்தை நல்ல நிலையில் பேணுவது எங்களின் கையில்தான் இருக்கிறது. ஆனால் இதற்கு கொஞ்சம் திட்டமிடலும், நிறைய மன உறுதியும் இருந்தாலே போதும்.

 

உங்கள் பிரதேசத்தில் தேவையான பாதுகாப்பு முறைகளுடன் வெளியில் உடற்பயிற்சிக்காக செல்ல அனுமதியிருந்தால்,

வாரத்தில் 4 நாட்களாவது நடைபயிற்சி செய்யுங்கள். அதற்காக எடுத்த எடுப்பிலேயேமுதல் நாளே 10 – 15 km நடந்துவிட்டு பத்து நாளைக்குப் படுத்து ஓய்வெடுக்காமல், முதல் நாள் 2 km இல் தொடங்கி தினமும் கொஞ்சம் கொஞ்சமாக நடக்கும் தூரத்தை அதிகரியுங்கள். ஒன்று அல்லது இரண்டு km தூரத்தில் உள்ள கடைக்குப் ஒரு சில பொருட்கள் மட்டுமே வாங்கச் செல்வதாக இருந்தால் நடந்தே செல்லுங்கள். உங்கள் நாலு சக்கர, இரண்டு சக்கர வாகனங்களுக்குக் கொஞ்சம் ஒய்வு கொடுத்துவிடுங்கள்.

 

நீங்கள் சைக்கிள் ஓடுவதில்  ஆர்வம் உள்ளவராக இருந்தால் வாரத்தில் நான்கு நாட்களாவது, தினமும்  30  - 60 நிமிடங்கள் சைக்கிள் ஓடுங்கள். அதேபோல ஓடுவதில் ஆர்வம் உள்ளவர்கள் தினமும் அரை மணிநேரம் ஓட்டப் பயிற்சியிலும் ஈடுபடலாம்.

இவ்வாறான உடற்பயிற்சி செய்பவர்கள், Strava, Apple Health, Google Fit, Fitbit  போன்ற App இனையும் பயன்படுத்தலாம். இதன் மூலம் உங்கள் வாராந்த பெறுபேறுகளைப் பார்க்க முடிவதுடன், உலகெங்கும் உள்ள நண்பர்களுடன் இணைப்பில் இருக்க முடியும். இதன் மூலம் ஒருவரை ஒருவர் ஊக்கப்படுத்த முடியும். சில App களில் ஒவ்வொரு மாதமும் 50 km walking challenge, 200 km cycling challenge போன்ற சவால்களை ஏற்றுக் கொள்வதன்மூலம் எங்களை நாங்களே ஊக்குவிக்கவும் முடியும்.

 

நடப்பவர்களும் ஓடுபவர்களும் பொருத்தமான காலணி அணிந்து செல்லுங்கள். இதன்மூலம், கால், பாதங்களில் வலியேற்படுதல், கால் தடக்கி விழக்கூடிய சந்தர்ப்பங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதேபோல சைக்கிள் ஓடுபவர்களும் பாதுகாப்பாக தலைகவசம், பொருத்தமான காலணிகளை அணிந்து செல்லுங்கள்.

 

வீட்டிற்கு வெளியே செல்வதற்கு அனுமதி இல்லையென்றால் (அரச அல்லது இல்லத்தரசியின் கட்டுப்பாடு காரணமாக) வீட்டிலேயே சில உடற் பயிற்சிகளைச் செய்யலாம்;

தற்போது உங்கள் துவாய்களைக் காயப்போடும் Treadmill இன் மீதுள்ள துவாய்களை எடுத்து வேறிடத்தில் காயப் போட்டுவிட்டு Treadmill இனைப் பயன்படுத்துங்கள்.

 

கண்டபடி சிற்றுண்டி செய்து உண்ண வைத்து எந்த Youtube உங்களை குண்டாகியதோ அந்த Youtube இலேயே மிக இலகுவாக செய்யக்கூடிய உடற்பயிற்சிக் காணொளிகளும் தாராளமாக இருக்கின்றன. அவற்றில் உங்களுக்குப் பிடித்த ஒன்றைத் தெரிவுசெய்து அதைப் பார்த்து நீங்களும் தினமும் உடற்பயிற்சி செய்யலாம்.

 

உடற்பயிற்சி செய்வதில் விருப்பமில்லாதவர்கள், உங்கள் அறையில் விருப்பமான பாடல்களைப் போட்டுவிட்டு உங்கள் இஷ்டம் போல நடனம் ஆடலாம். (குறிப்பு: தேவையற்ற விமர்சனம், அவமானங்களைத் தவிர்த்துக் கொள்ள கதவை மூடிவிட்டு ஆடுவது நல்லது).

 

இதைத் தவிர, வீட்டுத்தோட்டம் செய்தல், செல்லப் பிராணியை நடப்பதற்குக் கூட்டிச் செல்லுதல் (அதற்காக பூனையின் கழுத்தில் கயிறு கட்டிக் கூட்டிச் செல்ல வேண்டாம்) போன்றவையும் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்த்து வீட்டு வளவில் கிரிக்கெட், கூடைப்பந்து, கால்ப்பந்து, பட்மிண்டன் போன்ற விளையாட்டுகளை விளையாடுவதும் எமது உடல் ஆரோக்கியத்தை பேண நாங்கள் செய்யக்கூடிய சில விடயங்களாகும்.

 

உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முறையான உடற்பயிற்சி மட்டுமே போதாது. உடலுக்குப் போதுமான ஓய்வும் அவசியம். அதனால் நள்ளிரவில் உங்கள் மொபைல் போனை நோண்டிக் கொண்டிருக்காமல் தினமும் நேரகாலத்துக்கு படுக்கைக்குச் செல்லுங்கள். அதேபோல காலையிலும் வேலை இருக்கிறதோ இல்லையோ, குறிப்பிட்ட நேரத்துக்கு எழுந்திருக்கப் பழகுங்கள்.

 

அதேபோல நீங்கள் உண்ணும் உணவிலும் கொஞ்சம் அவதானம் செலுத்துங்கள். நொறுக்குத் தீனிகளைக் கண்டநேரத்தில் கண்டபடி உண்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். தினமும் சாப்பிடும் உணவின் அளவையும் உங்கள் உடல் உழைப்புக்கு ஏற்றதாக அமைத்துக் கொள்ளுங்கள். அதிகம் காய், கனிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

 

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு உள ஆரோக்கியமும் முக்கியமானது என்கிறார்கள் வல்லுனர்கள். இன்றைய சூழ்நிலையில் எங்களின் உள ஆரோக்கியத்தைப் பேணுவது எப்படியென்று இன்னொரு பதிவில் பார்ப்போம்.

No comments:

Post a Comment

  அடி சறுக்கும் அனுர?   தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கில் பெரும் வெற்றியைப் பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்திரு...