உடற்பயிற்சியின்போது ஏற்படும் மாரடைப்பு-மரணமும் அதைத் தவிர்த்தலும்
Links
Monday, 8 November 2021
Friday, 13 August 2021
யானைகளுக்கும் சுதந்திரம் கொடுப்போம்!
Saturday, 10 July 2021
நேருவின் பழங்குடியின “மனைவி” !
மன அழுத்தமும் தமிழ்ச் சமூகமும்
=================================
கடந்த
வருடம் இதே காலப்பகுதியில் தமிழர் மத்தியில், குறிப்பாக ஐரோப்பியத் தமிழர்கள்
மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்ட விடயம், இங்கிலாந்தில் தன் மகளையும் கொன்று தன்னையும்
மாய்த்துக் கொண்ட ஒரு தமிழ் பெண்மணி
பற்றியதாகும். குறிப்பாக அந்த ஐந்து வயதுச் சிறுமியின் உயிரிழப்பு உலகெங்கும் உள்ள
பல தமிழர்களைக் கவலை கொள்ள வைத்தது.
கடந்த
வருடம் நடந்த அந்தத் துயரமான நிகழ்வு தொடர்பாக பலரும் தமது மனக் கவலையை வலைத்தளங்களில் பகிர்ந்திருந்த அதேவேளை, சில பக்குவமற்ற, பொறுப்பற்ற, வெறும்
உணர்ச்சிவசப்பட்ட பதிவுகளையும் பார்க்க நேர்ந்தது. அவர்களில் சிலர், மனிதர்களுக்கு பண ஆசை மற்றும் பேராசை கூடியதாலேயே
மன அழுத்தம் வருகிறது என்றும், அவ்வாறு மனவழுத்தம் வந்தவர்கள் சாக விரும்பினால்
பிள்ளைகளை வேறு யாரிடமாவது கொடுத்துவிட்டு தாங்கள் மட்டும் செத்துப் போய்விட வேண்டும்
என்ற பொருள்பட பதிவிட்டிருந்தார்கள். அதற்கும் மேலாக தமிழராகப் பிறந்தவர்கள் இப்படிச் செய்வது
தமிழினத்துக்கு பெரும் அவமானம், கேவலம் என்றும் சிலர் சொல்லியிருந்தார்கள்.
இவ்வாறான
கொலை,
தற்கொலை முயற்சிகள் கடந்த காலங்களிலும் நடைபெற்றுள்ளன. இப்போதும் நடைபெறுகின்றன.
·
2006 இல் கனடாவில் 30 வயதான தமிழ்ப் பெண் தனது இரண்டு
வயது மற்றும் மூன்று மாதக் குழந்தையைக் கொன்றுவிட்டுத் தற்கொலைக்கு முயன்று உயிர்
தப்பினார்.
·
2008 இல்
இங்கிலாந்தில் 36 வயதான ஒரு தமிழ் பெண் தன இரண்டு
பிள்ளைகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்ய முயன்றார். மூன்றாவது (ஆறு மாதக்)
கைக்குழந்தை உயிர் தப்பிவிட்டது. பின்னர், அந்தப் பெண் மனநலக் காப்பகத்திற்கு
அனுப்பப்பட்டார்.
·
2014 இல்
இங்கிலாந்தில் 33 வயதான தமிழ் பெண் தனது
இரண்டு ஆண் குழந்தைகளையும் கொன்றுவிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
·
2020 அக்டோபர்
மாதம் 36 வயது மனைவி, 42 வயதுக் கணவன் மற்றும் மூன்று வயது மகன்
ஆகியோர் இறந்து காணப்பட்டனர். இது கொலை மற்றும் தற்கொலை சம்பந்தப்பட்டு இருக்க
வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
·
2021 ஜூன் மாதம்
(போன மாதம்) இங்கிலாந்தில் 36 வயதுடைய ஒரு
இந்தியத் தமிழ்ப் பெண், தான் கோவிட் வந்து இறந்துவிட்டால் மகளைப் பார்த்துக்கொள்ள
யாரும் இல்லை என்ற அச்சத்தில் தனது ஐந்து வயது மகளைக் கொன்றிருக்கிறார். இப்போது
மனநலக் காப்பகத்தில் இருக்கிறார்.
இவ்வாறான
பல மரணங்கள் வருடாந்தம் இலங்கை, இந்தியா, பங்காளதேஷ் போன்ற நாடுகளிலும்
நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் அன்றும் சரி இன்றும் சரி தமிழ் மக்களின்
எதிர்வினைகள் குறித்த ஆண் அல்லது பெண்ணைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதாகவே
இருக்கின்றன. அதிலும் சிலர் மிக மோசமான முறையில் திரும்பத் திரும்ப “உங்களுக்கு
மனவழுத்தம் இருந்தால் செத்துத் தொலையுங்கள், பிள்ளைகளைத் தொட உங்களுக்கு
உரிமையில்லை, நீங்கள் எங்கேயாவது போய்ச் சாகுங்கள்” என்று சொல்கிறார்கள்.
இவ்வாறு
இவர்கள் சமூக வலைத் தளங்களில் பகிரங்கமாக மன அழுத்தம் உள்ளவர்களைத் தற்கொலைக்குத் தூண்டும்
குற்றத்திற்காக அவர்கள் வாழும் நாட்டின் பொலிசார் கைது செய்ய முடியும் என்பது
அவர்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை.
இவ்வாறு
பொறுப்பற்ற வகையில் வீடியோக்கள் வெளியிடும் இவ்வாறான நபர்களுக்கு மனவழுத்தம்
தொடர்பாக எந்தவிதமான புரிதலும் இல்லை என்றே புரிகிறது. தனிமனித உணர்வுகள்,
பிரசவத்தின் பின்னர் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், குடும்பத்தில் இருக்கக்கூடிய
சிக்கல்கள், இந்த pandamic காலத்தில் ஏற்படக்கூடிய பொருளாதாரச் சிக்கல்கள்,
அதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்பவற்றைப் புரிந்து கொள்ள முயற்சி
செய்ததாகவும் தெரியவில்லை. இவ்வாறான அரைவேக்காட்டு சமூகப் போராளிகளின் தவறான
செய்தியைக் காவும் வீடியோக்களைக் கண்ணை மூடிக்கொண்டு 400 க்கும் மேற்பட்டவர்கள் ஒரு வாரத்தினுள் பகிர்ந்துள்ளமை
மிகவும் கவலை தருகிறது. இது எங்களில் பலர் உணர்ச்சிகளால் உந்தப்பட்டு ஆட்டு மந்தைகளாக
செயற்படும் நிலையில்தான் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
நீண்ட வரலாறு,
மொழிச் செழுமை, கலாச்சாரம் போன்ற பல பெருமைகளைக் கொண்டிருக்கும், அவற்றைக் கொண்டாடும்
தமிழர்கள் மத்தியில் துரதிர்ஷ்டவசமாக மனநலம், உளவியல் தொடர்பாக போதிய விளக்கம்
போதுமானதாக இருப்பதாகத் தெரியவில்லை. சிலருக்கு அதுபற்றிய அறிவு இருந்தாலும் அவர்களின் அறிவும் நுனிப்புல்
மேய்ந்த அறிவாகத்தான் இருக்கிறது.
தமிழர்
சமூகங்களில் இவ்வாறான பார்வை இருப்பதற்கு, எமது சமூகம் மன நோய் பற்றிப் பேசுவதை தவிர்க்க
வேண்டிய ஒரு விடயமாக வைத்திருந்ததே முக்கிய காரணமாக இருக்க வேண்டும். இன்னொரு
வகையில் சொல்வதானால் தனது குடும்பத்தில் ஒருவருக்கு மனநோய் இருந்தால் அதை வெளியில்
சொல்வதை அவமானமாகக் கருதுவதும் உரிய ஆலோசனை, சிகிச்சையினைப் பெறாமல் தவிர்க்கும்
நிலையும்தான் இன்றும் பல குடும்பங்களில் இருக்கிறது.
இன்றைய
சமூகத்தில் பிள்ளைகளாகவே பெற்றோரிடம் சென்று “எனக்கு மன அழுத்தம் இருக்கிறது, மனநல
மருத்துவரைப் பார்க்க வேண்டும்” என்றாலோ “எனக்கு கவுன்சிலிங் தேவை” என்று
சொன்னாலோ, பல பெற்றோர் அதைக் கணக்கெடுப்பதில்லை. “கண்டதையும் வாசித்துவிட்டு
உளறாதே, உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை” என்று தாங்களே வைத்திய ஆலோசகராக
மாறிவிடும் பெற்றோர்தான் அதிகம்.
கடந்த
காலங்களில், மனநோய் வந்தவர்களைக் குணப்படுத்த முடியாது. அவர்கள் இனி சமூகத்துக்கு
பயன்படமாட்டார்கள் என்ற எண்ணமே எங்களில் பலருக்கும் இருந்திருக்கிறது. மனநலம்
பாதிக்கப்பட்டவரை வீட்டினுள் அடைத்து வைத்தல், கோவிலுக்கு கூடிச் சென்று
மந்திரித்தல், பேய் விரட்டுதல், மனநலம் அதிகம் பாதிக்கப்பட்டால் கைகால்களைச்
சங்கிலிகளால் பிணைத்து வைத்தல் என்றுதான் செய்து வந்திருக்கிறார்கள்.
இன்றைய
சூழலில் எங்கள் சமூகத்திலேயே உளவளத் துறையில் எத்தனையோ நிபுணர்கள் வந்துவிட்ட
நிலையில் எமது சமூகம் இனியாவது மனநலம் சார்ந்த விடயங்களை வெளிப்படையாகக் கதைக்க
முன்வர வேண்டும். சமூக வலைத் தளங்களில் இது தொடர்பாக உணர்ச்சிவசப்பட்ட
கருத்துக்களைப் பரப்புவதைத் தவிர்த்து, அறிவுபூர்வமான விடயங்களைப் பகிர வேண்டும்.
மக்கள் உளவியல் பிரச்சனை தொடர்பாகத் தமது அறிவை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு
நாட்டிலும் இயங்கும் தமிழ் வானொலிகளும் இந்தப் பிரச்சனைகளை அடிக்கடி உரையாட
வேண்டும். பத்திரிகைகள் இந்த விடயம் தொடர்பாக அதிக விழிப்பூட்டல் கட்டுரைகளை
வெளியிட வேண்டும். தொலைக்காட்சி நிறுவனங்களும் வானொலிகளும் துறைசார் நிபுணர்களை
அடிக்கடி அழைத்து அவர்கள் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் மனநலப் பாதிப்புகள், மனநல
பாதிப்புக்குள்ளானவரைப் பராமரித்தல், ஆதரவாக இருத்தல் தொடர்பாக தமிழ் மக்களைத்
தொடர்ந்து அறிவூட்ட வேண்டும்.
- வீமன் -
Sunday, 9 May 2021
உயர்தர பரீட்சை முடிவுகளும் உபதேச உலகமும் !
உலகில்
இலகுவான ஒன்றுதான் இன்னொருவருக்கு அறிவுரை சொல்வது. அதிலும் இலங்கையிலும் பல்வேறு
நாடுகளிலும் பரந்து வாழும் தமிழினம் இந்த அறிவுரை சொல்லும் கலையில் எப்போதும்
சிறந்த ஒரு உயிரினமாகவே திகழ்கிறது.
மாதம்
மும்மாரி பெய்வதுபோல ஒவ்வொரு வருடமும் ஐந்தாம் வகுப்புப் புலமைப் பரிசில், க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தர
பெறுபேறுகள் வெளிவரும் மூன்றுமுறையும்
ஆலோசனை மழையில் மாணவர்கள் நனைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. தோற்றவருக்கு
அறிவுரை, ஆலோசனை, யாராவது பிள்ளைகள் பரீட்சைத் தோல்வியால்
தற்கொலை செய்துவிட்டால் அதற்கு ஒரு கண்ணீர் அஞ்சலி, சரியாக, பிள்ளையை தோல்விக்கு முகம் கொடுக்கப்
பழக்கவில்லை என்று பெற்றோருக்குக் கண்டனம், அப்படியே ஆசிரியர்களுக்கு ஒரு குட்டு என்று
உயிரைக் கொடுத்து வேலை செய்வார்கள்.
அந்த மரபின்படி
இந்த வாரம் முழுவதும் வலைத்தளம் எங்கும்
சோர்ந்து விடாதே; சேர்ந்து படி; மீண்டும் முயற்சி செய்; அடிமேல் அடி அடித்தால்
அம்மியும் நகரும்; நீ படி
படியென்று படித்தால் F எல்லாம் A ஆகும்; கல்வியே செல்வம் என்று ஒரு குழு
சொல்லிக் கொண்டிருக்கிறது.
மறு பக்கத்தில்,
திரும்பத் திரும்பப் படித்து காலத்தை வீணாக்காதே; உயர்தரம் இன்றியே உயர்ந்த
மனிதர்கள் பலர், ஒருமுறை
முயற்சி செய்,
முடியாவிட்டால் வேறு துறையைத் தெரிவு செய்து அதில் முன்னேறு கதைகளும்
வலைத்தளமெங்கும் வலம் வருகின்றன.
பாவம்
மாணவர்கள்! எல்லா வகையான அறிவுரைகளையும் கேட்டுவிட்டு, வடிவேலு பாணியில் “என்னை
ஏண்டா இப்பிடிப் படுத்துறீங்கள்?” என்பதுதான் பல மாணவர்களின் மனக்குரலாக (அதுதாங்க
Mind Voice) இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
இங்கு அறிவுரை
சொல்லுவோர் எல்லோருமே பெரும்பாலும் தாம் மாணவர்களாக இருந்த கால அனுபவங்களை, எமது சமூகத்தில் நாம் காணும் ஒரு சில அரிதான
உதாரணங்களை மற்றும் ஒரு சில புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டு அறிவுரை
சொல்கிறார்கள் என்பது அவர்கள் சொல்லும் அறிவுரைகளைப் பார்த்தாலே புரியும். ஆனால்
இருதரப்பாரும் முக்கியமான விடயங்களாப் பேசாது கடந்து விடுகிறார்கள் என்பதுதான்
வருத்தம் தருவதாக இருக்கிறது.
எல்லோருமே,
பிள்ளைகளைப் கஷ்டப்பட்டுப் படித்து முன்னேறுங்கள் என்று நெருக்கடி கொடுத்தாலும் உயர்தரம்
கற்கும் மாணவர்களுக்கு பௌதீக விஞ்ஞானம், உயிரியல் விஞ்ஞானம், வர்த்தகம், கலை, Engineering technology,
Bio systems technology ஆகிய மட்டுப்படுத்த கற்கை நெறிகளே தெரிவாக
உள்ளன.
இதைத்தவிர
இலங்கையில் குறிப்பாக வடக்குக் கிழக்கைப் பொறுத்தவரை வைத்தியர், பொறியியலாளர், கணக்காளர், சட்டத்தரணி போன்ற உத்தியோகங்கள் மட்டுமே பல
உயர்தர மாணவர்களின் இலக்குகளாக இன்றும் இருக்கிறது. ஆனால் ஒரு சமூகத்தில்
வைத்தியர், பொறியியலாளர், கணக்காளர், சட்டத்தரணி ஆகியோரை மட்டும் வைத்துக்கொண்டு
என்ன செய்ய முடியும்.
இவை ஒருபுறம்
இருக்க, குறித்த ஒரு
வருடத்தில் உயர்தரப் பரீட்சை எழுதும் நூறு மாணவர்களில் 60 – 64 மாணவர்கள் பல்கலைக்கழகம்
செல்லத் தகுதி பெறுகிறார்கள். அந்தத் தகுதி பெற்ற மாணவர்களில் 9
– 10 பேர் மட்டுமே அரச
பல்கலைக் கழகம் (இலவசக் கல்வித் திட்டத்தின்கீழ் ) செல்கிறார்கள். அதாவது, தகுதி பெற்ற 64 பேரில் 54 பேர் தகுதி பெற்றாலும் பல்கலைக் கழகத்தில் இடமில்லாமல் வேறு
வழி தேடவேண்டியவர்களாகவே இருக்கிறார்கள்.
ஏனெனில்
பல்கலைக் கழகத்திற்கு எத்தனை மாணவர்கள் உள் நுழைய முடியும் என்பதை அரசாங்கம்
ஒவ்வொரு வருடமும் உயர்கல்விக்கு ஒதுக்கும் நிதியின் அளவே தீர்மானிக்கிறது. இதனால்
நூற்றுக்கு 90 வீதமான மாணவர்கள் தமது உயர்கல்வித் தேவைகளுக்கு திறந்த பல்கலைக்
கழகம்,
தொழில்நுட்பக் கல்லூரிகள், German Tech போன்ற வேறு நிறுவனங்களை நம்பியிருக்க
வேண்டியவர்கள் ஆகிறார்கள். ஆனால் அவையும் தகுதி பெற்ற மாணவர்கள் அனைவரையும்
உள்வாங்கப் போதுமானதில்லை. இதுதான் இலங்கையின் இன்றைய உயர்கல்வி நிலவரம்.
இன்னொரு
வகையில் சொல்வதானால் (நாம் ஏற்றுக்கொள்ள விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்)
உயர்தரப் பரீட்சையில் வெற்றி பெற்று (100 பேரில் 10 பேர் மட்டுமே) பல்கலைக் கழகம்
செல்வதும் ஒரு சூதாட்டம் போன்றதுதான்.
உண்மையில் ஒரு
மாணவன் பல்கலைக் கழகம் சென்றுதான் தனது வேலைத் தகுதியை வளர்த்துக் கொள்ளவேண்டும்
என்றில்லை. அதேபோல உயர்தரம் கற்றுத்தான் ஒருவர் கல்வியிலும் தமது தொழில்
துறையிலும் முன்னேற வேண்டும் என்பதில்லை. இன்று அதற்கு மாற்றாக பல வழிகள் உள்ளன.
இவ்வாறான
மாற்று வழிகள் சாதாரண தரத்தின் பின்னரும் உயர்தரத்தின் பின்னரும் இருந்தாலும் அவற்றின் பயனை மாணவர்கள்
பெறுவதற்கு பல விடயங்களிலும் மாற்றங்கள் அவசியமானவை.
இலங்கையில்
உயர்தரத்தில் குறித்த மூன்று பாடங்களைப் படித்து நல்ல புள்ளிகள் பெற்று Z ஸ்கோரும் உயர்வாக இருந்தால் மாத்திரமே
குறித்த சில கற்கைநெறிகளை மேற்கொள்ள முடியும். ஆனால் இந்தியாவிலும் பல மேற்குலக
நாடுகளிலும் நிலைமை அப்படியில்லை. அவர்கள் மேற்படிப்பிற்கு தெரிவு செய்ய
விரும்பும் துறைக்குத் தொடர்பான பாடங்களில் தேவையான பெறுபேறுகளைத் தமது உயர்தரம்
கற்கும் காலத்தில் பெற்றிருந்தால் போதுமானது. இலங்கையிலும் இத்தகைய மாற்றம் வருமாக
இருந்தால் உண்மையில் மாணவர்கள் மேற்படிப்புக்குரிய பாடங்களைத் தெரிவு செய்வது
இலகுவாக அமையக்கூடும்.
தற்போதுள்ள
நிலையில் கொழும்பு போன்ற பெருநகரங்களில் காணப்படும் பரந்துபட்ட கல்வி வாய்ப்புகள்
பின் தங்கிய பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். இன்று போலிப்
பல்கலைக்கழகம் பற்றி பெரும் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுவரும் நிலையில் அரசு
தனியார் கல்வி நிறுவனங்களை நெறிப்படுத்தவும் குறைந்தபட்ச தரநிலையைக் (minimum standard) கொண்டிராத நிறுவனங்கள் இயங்குவதைக்
கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலவசக்
கல்விமுறையின் நன்மையை அதிக புள்ளிகள் பெற்ற மாணவர்கள் அனுபவிக்கும் அதேநேரம், பல்கலைக்கழகம் செல்லத் தகுதி பெற்றும்
அரசின் வளப்பற்றாக்குறை காரணமாக உள்வாங்கப்படாத மாணவர்கள் கட்டணம் செலுத்தி
(கல்விக் கடன் திட்டத்தின் கீழ்) கல்வி கற்கமுடியும் என்ற ஒரு நிலை உருவாக்கப்பட
வேண்டும்.
சமூக
மட்டத்தில் பெற்றோர் தமது பிள்ளைகள் என்னவாக வேண்டும் என்று கனவு காண்பதை நிறுத்த
வேண்டும். பிள்ளைகளின் ஆர்வத்தை அறிந்து அந்த ஆர்வத்தோடு இணைந்த துறையில் அவர்கள்
மேற்கல்வி கற்பதை ஊக்குவிக்க முன்வரவேண்டும். பாடசாலைகளில் மாணவர்கள் சரியான தெரிவுகளை
செய்வதற்குத் தேவையான வழிகாட்டல்கள், ஆலோசனைகள்
வழங்கப்பட வேண்டும்.
மறுபுறத்தில்
கல்விக் கூடங்கள் மாணவர்களைத் தொழிற் சந்தைக்கு ஏற்ப தயார் செய்பவையாக இருக்க வேண்டும். அதேபோல பாடசாலைகளின் தொழிற்சந்தை தொடர்பாக மாணவர்களுக்கு
பொருத்தமான வழிகாட்டல்கள் வழங்கப்படும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். இதைத்தவிர மாணவர்களை
வகுப்பறைக்கல்விக்கு அப்பாலான கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டும். அவர்களை சமூகப்
பொறுப்புடன் இயங்குபவர்களாக உருவாக்க வேண்டும்.
பரந்துபட்ட
பட்டப்படிப்பின் மூலம் சமூகத்தையும் நாட்டையும் முன்னேறும் முன்னேடிகளாக அடுத்த
தலைமுறையினர் வரவேண்டும். பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெறுவது பணம் சம்பாதிக்கும்
வழி என்று நினைக்கும் மனநிலை மாறவேண்டும். தொழில்முறைக் கல்விகள், சுயதொழில் முயற்சிக்கான அடிப்படைகளும்
மாணவர்களின் 15 - 16 வயதிலேயே
அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
புலம்பெயர்
சமூகமும் இலங்கையில் இளையவர்களுக்கு வேலை வாய்ப்பையும் கல்வி கற்கும் காலத்திலேயே
வேலைத்தள அனுபவத்தையும் வழங்கும் வகையில் தொழில் நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம்
மாணவர்களை தகுதியும் திறமையும் கொண்டவர்களாக உருவாக்க முடியும்.
இதையெல்லாம்
விடுத்து நாடாளாவிய ரீதியில் முதலிடம், மாவட்டத்தில் முதலிடம் எனப் பொதுப் பரீட்சைப்
பெறுபேறுகளை கொண்டாடியும், பின்னடைந்தோரை அறிவுரை என்ற பெயரில் நெட்டித்
தள்ளிக்கொண்டும் இருப்பதனால் எதையும் சாதித்து விடப்போவதில்லை. மாணவர்கள்
சுதந்திரமாகக் கற்கக் கூடிய சூழலை பெற்றோர், பாடசாலைச் சமூகம் உருவாக்க வேண்டும்.



