Sunday, 10 November 2024

 

பாராளுமன்றப் பதவிப் போர் – 3




டக்ளஸின் வீணை

ஏனைய நீண்டநாள் வரலாறு கொண்ட தமிழ்க் கட்சிகளோடு ஒப்பிடும்போது வடக்கில் பெரும் சிதைவுகள் இல்லாது பலமாக இருக்கும் கட்சியென்றால் அது டக்ளஸின் கட்சிதான். கடந்த 20 வருடங்களில் 2010 மட்டுமே இந்தக் கட்சிக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருந்தது. ஆனால் 2015இல் 33,481 வாக்குகள், 2016இல் சந்திரகுமார் பிரிந்த பின்னர், 2020இல் 61,464 வாக்குகளுடன் இரண்டு ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட கட்சியாக இருக்கிறது.

 

என்னதான் தமிழ்த் தேசியம் பேசுவோர் இவரைத் துரோகி, ஒட்டுக் குழுத் தலைவர் என்று தூற்றினாலும், அவர் தொடர்ந்தும் பாராளுமன்றம் செல்லும் ஒருவராகவே இருக்கிறார். அவர் மீது தொடர்ந்தும் ஊழல் குற்றச்சாட்டுகள், கடந்த காலத்தில் பல கொலைகளைச் செய்ததான குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவர் அரசோடு இணங்கும் மத்தியில் கூட்டாட்சி என்ற வழிமுறையில் பலமான அரசியல்வாதியாகவே இருந்து வந்திருக்கிறார். பல தடவைகள் எம்பியாகவும் அமைச்சராகவும் இருந்த காலத்தில் தனது கட்சி சார்ந்தவர்கள், கட்சியோடு எந்தத் தொடர்பும் இல்லாதவர்களுக்கும் வேலை வாய்ப்பை வழங்கியவர் என்பதால் அவரது ஆதரவுத் தளம் பலமாகவே இருக்கிறது.

 

ஆனால் இம்முறை கடற்தொழில் அமைச்சராக இருந்த காலத்தில் வடபகுதி மீனவர்களுக்கு இந்திய மீனவர்களால் ஏற்படும் பாதிப்புகள், வடக்கின் மீன்வளம் அழிவடைவது தொடர்பாக இவர் எந்தக் காத்திரமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற கோபம் கணிசமான மீனவர்களுக்கு இருக்கிறது. இருந்தாலும் ஏனைய கட்சிகள் சிதறிக் கிடக்கும் சூழலில் டக்ளஸின் வெற்றியை இந்தப் பின்னடைவு தடுக்கப் போவதில்லை என்றே ஊகிக்க முடியும்.

 

 

மணியும் மானும்  

2020 தேர்தலின் பின்னர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட மணிவண்ணன், தமிழரசுக் கட்சியில் இளைஞர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் காத்திருந்து கிடைக்காத நிலையில் வெளியேறிய உமாகரன் இராசையா மற்றும் பலரைக் கொண்ட சுயேட்சைக் குழுவாக மான் சின்னத்துடன் தமிழ் மக்கள் கூட்டணியும் இம்முறை களம் காண்கிறது. மணிவண்ணன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிட்டபோது 22,741 வாக்குகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

பின்னர் EPDP ஆதரவுடன் மாநகர முதல்வரானபோது அவருக்கு துரோகிப் பட்டம் வழங்கப்பட்டாலும், முதல்வராக சில நல்ல வேலைகளைச் செய்தது இவரின் சாதகமான அம்சமாக இருக்கிறது. ஆனால் அபலைக்கு வாழ்வாதார உதவியாக பார் லைசன்ஸ் பெற்றுக் கொடுத்த பாரி வள்ளல் விக்னேஸ்வரன் நிழலில் நிற்பதும் அவரது தவறை ஒப்புக்கொள்ளாது சமாளிக்க முயல்வதும் பாதகமான விடயமாக இருக்கிறது.

 

கட்சியில் இன்னொரு பேச்சாற்றல் உள்ளவரான உமாகரன் இராசையாவின் மீது சங்கி என்ற ஒரு முத்திரையும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு ஆசனத்துக்காக வீட்டை விட்டு ஓடிவந்தவர் என்ற கருத்தும் சொல்லப்படுகிறது. இருப்பினும் இவர்மீதான “சங்கி” முத்திரையே வடக்கின் சைவர்களின் வாக்குக்களைப் பெற்றுக் கொடுத்தாலும் ஆச்சரியம் இல்லை.

 

சித்தரின் சித்து வேலையும் சங்கும்!

சித்தரின் ஜனநாயகத் தமிழ் தேசிய  கூட்டணி இரண்டு சித்து வேலைகளை முயற்சித்தது. தேர்தலில் போட்டியிட, ஜனாதிபதி தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்ற பெற்ற சங்குச் ஆசைப்பட்டபடி கிடைத்துவிட்டது. கடந்த வருடமும் ஒரு சித்துவேலை முயற்சிக்கப்பட்டது. தமது கட்சிப் பெயரை தமிழ்த் தேசியக் கூட்டணி என்று மாற்றி, ஆங்கிலத்தில் TNA எனப் பயன்படுத்தவும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தேர்தல் ஆணைக்குழு அனுமதிக்கவில்லை.

கட்சியில் செல்வம், சுரேஸ், சித்தா என மூன்று முன்னாள் இயக்கங்களின் தலைவர்கள் அவர்களோடு அமரர் ரவிராஜின் மனைவி சசிகலா எனப் பிரபலங்கள் இருந்தாலும் இவர்கள் மீதுள்ள முன்னாள் ஒட்டுக் குழுக்கள் என்ற பெயரும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனவே இது இவர்களுக்கு ஒரு பாதகமான விடயமாக இருக்கிறது. ஆனால் இந்த முக்கியஸ்தர்களுக்கு என்று சில ஆதரவுத் தளங்கள் இருப்பதையும் மறுத்துவிட முடியாது. ஆனால் 2015இல் 53,740 வாக்குகளை எடுத்த சித்தரால் 2020இல் 23,840 வாக்குகளை மட்டுமே பெறமுடிந்தது. இம்முறை அது அதிகரிக்குமா இல்லையா என்பது கேள்விக்குரியதே. ஆனால் அவர் இம்முறை 15,௦௦௦ வாக்குகள் பெற்றாலே இம்முறை ஆசனம் கிடைக்கும் என்ற எதிர்வுகூறல்களும் வைக்கப்படுகின்றன.

 

கடந்த தேர்தலில் 23,098 வாக்குகள் எடுத்துப் பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பை இழந்த சசிகலா ரவிராஜ் இம்முறை தனக்கு TNA போட்டியிட சந்தர்ப்பம் தராத காரணத்தால் கட்சியை விட்டு வெளியேறி சங்குடன் சங்கமமாகி நிற்கிறார். கணவரின் பாதையை விட்டு நான் விலகவில்லை, அவருடன் சேர்ந்து பயணித்தவர்களுடன்தான் பயணிக்கிறேன் என்று இவர் சொன்னாலும், சித்தாவை 2004இல் கூட்டமைப்பில் சேர்த்துக் கொள்ளவில்லை என்பதையும், இறுதிப் போரின் பின்னரே அவர் உள்வாங்கப்பட்டார் என்பதையும் மக்கள் அறிவார்கள். சசிகலா கட்சிக் கொள்கையை விட பாராளுமன்றம் செல்லும் ஆசைக்கே முன்னுரிமை கொடுத்துள்ளார் என்ற விமர்சனத்தைத் தாண்டித்தான் அவர் வாக்கு வேட்டை செய்ய வேண்டியுள்ளது. இவருக்கு இம்முறை ஆசனம் கிடைப்பது சந்தேகமே.

 

அங்கஜன்

கடந்த முறை வடக்கில் யாழ் தொகுதியில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவரான அங்கயன் ராமநாதன், SLFP யிலிருந்து தாவி ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளித்தார். இரண்டே மாதத்தில் கட்சி தாவி DNA உடன் சேர்ந்து நிற்கிறார். அவரால் வேலை வாய்ப்புக் கிடைக்கும் என்று நம்பிக் கடந்த தடவை அவரை வெற்றிபெறச் செய்த இளைய தலைமுறை நிச்சயம் இம்முறை அவருக்கு வாக்களிக்கப் போவதில்லை. ஆனால் அவர் தபார்பெட்டிச் சின்னத்தில் நிற்பதால், வீட்டுக்கு போடப் போகும் வாக்காளர் சிலர் மாறி இவருக்குப் போடவும் வாய்ப்புள்ளது. ஆனால் இவருக்கு ஆசனம் கிடைப்பது சந்தேகமே.

 

மாம்பழம்

வடக்கில் ஆசனம் தரவில்லை என்பதால் வீட்டை விட்டு வெளியேறிய இன்னொரு சட்டத்தரணியான தவராசா உருவாக்கிய கட்சிதான் ஜனநாயக தமிழரசுக் கூட்டமைப்பு. கட்சி ஆரம்பித்த உடனேயே மாம்பழத்துடன் மாவையைச் சந்தித்து, தேர்தல் விதிமுறையை மீறி விமர்சனத்துக்கும் உள்ளானார். இவர் மீது அரசியல் கறையேதும் இல்லாதபோதும் இவரோடு நிற்கும் ஐங்கரநேசன் ஊழல் நிரூபிக்கப்பட்ட ஒருவராகக் காணப்படுகிறார். இன்னொருவரான சரவணபவன் மீதும் பல ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே சேராத இடம் சேர்ந்த தவராசா இம்முறை வெற்றி பெறுவதற்கான சந்தர்ப்பம் இல்லையென்றே கூறலாம். அதிகாரிகளின், அரசியல்வாதிகளின் ஊழல் மோசடிகளால் கோபத்தில் இருக்கும் மக்கள் இந்தக் கட்சிக்கு வாக்குப் போடுவது சந்தேகமே.

 

தொடர்ந்து பேசுவோம்!

 

-    வீமன் -

No comments:

Post a Comment

  அடி சறுக்கும் அனுர?   தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கில் பெரும் வெற்றியைப் பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்திரு...