Saturday, 8 April 2023

 




அய்யனும் அவன் மேல் ஐயமும்!
========================
தமிழ் கூறும் நல்லுலகில் அய்யன் வள்ளுவன் அவர் இயற்றிய திருக்குறளுக்காக இன்றளவும் கொண்டாடப்படுகிறார். உலகில் இதுவரை 42 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நூலாகவும் மதசார்பற்ற நூலாகவும் திருக்குறள் விளங்குகிறது. ஆனால் ஐயம் திரிபறக் கற்கும்படியும், எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் மெய்ப்பொருள் காணவும் சொன்ன வள்ளுவன் யார் என்பதில்தான் எங்களுக்கு இன்னமும் சந்தேகம் தீர்ந்தபாடில்லை. அவன் வள்ளுவன் மறைந்து 2000 ஆண்டுகள் கடந்த பின்னரும் இதற்கு ஒரு முடிவு வரவில்லை.
உண்மையில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த வள்ளுவர் எப்போது வாழ்ந்தார் என்பதற்கு யாரிடமும் ஆதாரமில்லை. அதேபோல அவரது தோற்றம் தொடர்பாக அறிந்தவரும் யாருமில்லை. ஆனால் இன்று அவரைச் இந்து சமயத்தவர் என்று ஒரு சாராரும் சமணர் என்று இன்னொரு சாராரும் இன்றுவரை வாதிட்டு வருகிறார்கள். ஆசீவகம் என்று விவாதிப்போரும் உண்டு. இவர்களுக்குப் போட்டியாக அவரைக் கிறிஸ்தவர் என்று சொல்வோரும் உண்டு, வள்ளுவர் மதச் சார்பற்றவர் என்று சொல்வோரும் உண்டு. மறுபுறத்தில் அவரைப் பிராமணர், தேவர், நாடார், வன்னியர், பறையர் என்று சாதிச் சாயம் பூசும் முயற்சியும் நடைபெற்றது.
வள்ளுவருக்கு உருவம் கொடுக்கும் வேலை 19ம் நூற்றாண்டிலேயே ஆரம்பித்தது என்று கூறுகிறார்கள். சென்னை மாகாணத்தின் ஆட்சியராக இருந்த பிரான்சிஸ் வைட் எல்லிஸ் என்பவர் திருவள்ளுவர் உருவம் பொறித்த தங்க நாணயத்தை 1810 அளவில் வெளியிட்டதாகத் தெரிகிறது. அதில் வள்ளுவர் சமணரைப் போன்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தார்.
அதன் பின்னர், 1904இல் இந்து தியலோஜிகல் மேல்நிலைப் பள்ளியில் பண்டிதராக இருந்த கோ.வடிவேலு செட்டியார் என்பவர் வெளியிட்ட திருக்குறளில் திருவள்ளுவரை சடாமுடி, தாடி மீசையுடன் மார்புக்குக் குறுக்காக துண்டும், ஒரு கையில் சின் முத்திரையுடன் செபமாலையும் மறுகையில் ஏடும், நெற்றியில் பட்டையும் குங்குமமும் உள்ளதாக வரையப்பட்டிருந்தது. இந்த உருவம் வழங்கப்பட்டமைக்கு இந்த நூலில் விளக்கம் சொள்ளப்பட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. பின்னர் இந்த நூலின் ஆங்கிலப் பதிப்பில் வள்ளுவர் ஒரு சைவ அடியார் போலவும் அவரிடம் இரு அடியார்கள் தொழுவது போலவும் வரைந்ததாகச் சொல்லப்படுகிறது. அதன் பின்னரான காலத்தில் சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1952இல் வெளியிட்ட நூல்களிலும் வள்ளுவர் சைவ அடியாராகவே காட்சிப்படுத்தப்பட்டிருந்தார்.
அதேநேரம், இந்த நூல்களில் பயன்படுத்தப்படும் படங்களில் இருப்பது திருவள்ளுவர் அல்ல, அது திருவள்ளுவ நாயனார் என்பவரின் படம் என்கிறார்கள். அவர் 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த, ஞான வெட்டியான் என்ற நூலை எழுதிய ஒருவர் என்று சொல்கிறார்கள். அவர் வாழ்ந்தது 16ம் நூற்றாண்டின் பிற்பகுதி என்போரும் உண்டு. மறுபுறத்தில் திருவள்ளுவரும் திருவள்ளுவ நாயனாரும் ஒன்று என்று வாதிடுவோரும் உண்டு.
இந்த சூழ்நிலையில் திராவிடச் சித்தாந்தம் செல்வாக்குடன் இருந்த 1950களின் பிற்பகுதியில்தான் வெள்ளுடையுடன் மதசார்பற்ற வள்ளுவரை வரையும் முயற்சி தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. அதன்போது வேணுகோபால சர்மா என்ற பிராமணர் வரைந்த உருவப் படமே இன்றுவரை பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் அரசாணை பெற்ற வள்ளுவர் உருவமாகவும் திகழ்கிறது. இவரும் தான் ஏன் வள்ளுவரை அப்படி வரைந்தேன், எவ்வாறு திருக்குறளிலிருந்து அதற்கான எண்ணக்கருக்களைப் பெற்றேன் என்று விளக்கவுரை ஒன்றையும் வெளியிட்டார்.
அதேநேரம், பிராமணரான அவர், இவ்வாறு திறனாய்ந்து திருக்குறளை எழுதும் ஆற்றல் பிராமணருக்கே இருந்திருக்கும் என்று சிந்தித்ததாகவும் அதனால் வள்ளுவருக்குப் பூணூல் போட்டு முதலில் வரைந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் பின்னர் பாரதி தாசனின் ஆலோசனைப்படி அது தெரியாத வகையில் சால்வையை வரைந்தாகச் சொல்லப்படுகிறது. 1959 அளவில் வள்ளுவரை இவர் வரைந்து முடித்த நிலையில் 1960 இல் இந்தப் படம் சி.என். அண்ணாத்துரையால் காங்கிரஸ் மைதானத்தில் வெளியிடப்பட்டது.
அதன் பின்னர் வள்ளுவர் கிறிஸ்தவர் என்று சிலர் வாதம் செய்ததுடன் இரண்டு பாகங்களாகப் புத்தகம் வெளியிட்டு அதனை வலியுறுத்தப் பார்த்தார்கள். அதைத் தொடர்ந்து, நான்கு வருடங்களுக்கு முன்னர்தான் இந்தியாவில் வள்ளுவரின் வெள்ளை வேட்டியை உருவிவிட்டு காவி கட்டி சிலர் அழகு பார்க்கத் தலைப்பட்டார்கள். 2019 நவம்பர் மாதத்தில் சமூக வலைத் தளத்தில் காவியுடை வள்ளுவரை தரவேற்றி தமிழர்களை ஆழம் பார்த்தது பா.ஜ.க. பின்னர் 2020 ஜனவரி மாதம் அப்போது துணை ஜனாதிபதியாக இருந்த வெங்கயா நாயுடுவும் காவியுடை வள்ளுவனை உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிந்து பின்னர் எதிர்ப்பால் பின்வாங்கி வெள்ளுடை வள்ளுவனை மீளப் பதிந்தார். ஆனால் தமிழ்நாட்டு பா.ஜ.க.வினர் இன்றுவரை தொடர்ந்தும் காவி கட்டிய வள்ளுவரை வெளியிட்டு மல்லுக்கட்டி வருகிறார்கள்.
இலங்கையைப் பொறுத்த வரையில், கடந்த காலங்களில் வள்ளுவர் மீதுள்ள மரியாதையால் சில முக்கிய இடங்களில் வள்ளுவர் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதன் பின்னர் 2016இல் மறவன் புலவு சச்சிதானந்தத்தின் வேண்டுகோளை ஏற்று வி.ஜி.பி உலக தமிழ்ச்சங்க நிறுவனர் வி.ஜி. சந்தோஷம் பைபர் கிளாஸினால் ஆன 16 வள்ளுவன் சிலைகளை இலங்கையிடம் ஒப்படைத்தார். இவற்றை தமிழர்கள் அதிகம் வாழும் திருகோணமலை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, புத்தளம், புளியங்குளம் போன்ற இடங்களில் நிறுவுவதே மறவன் புலவு சச்சியின் திட்டமாகும். கடந்த வருடம் நவம்பர் மாதம் வலிவடக்கில் மக்கள் மீளக் குடியமர்ந்த வள்ளுவர்புரத்திலும் கருங்கல்லில் ஒரு வள்ளுவர் சிலை நிறுவப்பட்டது.
தற்போது இலங்கையின் வடக்கில் யாழ் பிரதம தபாலகத்துக்கு முன்பாக நிர்மாணிக்கப்பட்ட வள்ளுவர் சிலையிலும் கடந்த மார்ச் 17இல் கலாநிதி ஆறுதிருமுருகனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையில் காணப்படும் சிவசின்னங்கள் மீண்டும் ஒருமுறை வள்ளுவரின் அடையாளத்தை விவாதிக்க வைத்துள்ளது.
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பின் அதன் மெய்ப் பொருள் காணும்படி வள்ளுவர் சொன்னதை சரியாகப் புரிந்திருந்தால் கிறிஸ்தவராகட்டும், சைவ சமயத்தவராகட்டும், தங்களை இந்துக்கள் என்பவர்களாகட்டும், கடவுள் இல்லை என்பவர்களாகட்டும் எவருமே வள்ளுவர் யாரென்று தேடியிருக்க மாட்டார்கள். மாறாக வள்ளுவன் சொன்னவற்றில் ஒரு சில அறிவுரைகளையாவது பின்பற்றி தமது வாழ்வையும் தம்மைச் சூழ உள்ளவர்கள் வாழ்வையும் மகிழ்வானதாக மாற்றியிருப்பார்கள்.

ஏனெனில் மற்றவர்களுக்கு தொண்டு செய்வதும் அன்பு பாராட்டுவதும் உயர்ந்த மதம் என்ற உயர் கருத்தையே திருக்குறள் வலியுறுத்துகிறது. மனித இனத்தில் காணப்படும் பலவீனங்களை அகற்றி அறம் சார்ந்து இயங்கும் சமூகத்தைக் கட்டியெழுப்ப வழிகாட்டும் ஒரு பொது மறையைத் தந்த வள்ளுவர் உலகுக்குப் பொதுவானவர். அவரை உங்கள் மனதுக்கு உகந்தபடி அவரை உருவகிப்பதற்கும் மரியாதை செய்யவும் எவருக்கும் உரிமையுள்ளது. அதேநேரம் தமது அதிகாரத்தை வலுப்படுத்தவும் மற்றவர் மீது மதரீதியான ஆதிக்கம் செலுத்தவும் வள்ளுவரையும் திருக்குறளையும் பயன்படுத்த நினைப்பது ஏற்புடையதல்ல.

 


உடற்பயிற்சியும் உபாதைகளும்

சில தசாப்தங்களுக்கு முன்னர் வாழ்ந்த எமது முந்திய தலைமுறையில் அதிகமானவர்கள் நாளாந்தம் உடலுழைப்பில் ஈடுபடுபவர்களாக இருந்தார்கள். அதனால் இயல்பாகவே அவர்களின்தசைநார்கள் வலிமையாக இருந்தன, உடல் எடையும் கட்டுக்குள் இருந்தது, அவர்கள் தனியாக தினமும் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க வேண்டிய தேவை இருந்திருக்கவில்லை.

 

ஆனால் காலப் போக்கில் உடல் உழைப்பற்ற உத்தியோகங்கள் அதிகரிக்க மக்களும் உடலுழைப்பைக் குறைக்கத் தொடங்கினர் அல்லது தவிர்த்தனர். அதன் விளைவாக அதிக உடல் எடை, இதய நோய், நீரிழிவு என்பன இள வயதினரையே பாதிக்கக்கூடிய ஒரு காலத்தில்தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதன் தாக்கம் தற்போது பலரையும் விரும்பியோ விரும்பாமலோ உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டு மைதானங்கள், நடைப் பயிற்சிக்கான பாதைகளை நோக்கி நகர வைத்துள்ளது.

 

இன்று நாற்பதிலிருந்து எழுபது வயது வரையான ஆண், பெண் இருபாலாரிலுமே பலர் தமது ஆரோக்கியம் கருதி உடற்பயிற்சி செய்வதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். தமது ஆரோக்கியத்தில் கொண்ட அக்கறை அல்லது குடும்ப வைத்தியரின் அறிவுறுத்தல் காரணமாக நடத்தல், ஓடுதல், சைக்கிள் ஓடுதல், நீச்சல் என உடற்பயிற்சி செய்பவர்கள் ஒருபுறம் என்றால் பயிற்சிக் கூடத்துக்கு ஒழுங்காக சென்று உடற்பயிற்சி செய்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கிறது. இன்னொரு புறம் கிரிக்கெட், உதைபந்து, பூப்பந்து, கரப்பந்து போன்றவற்றை விளையாட்டுகளில் ஐம்பது, அறுபது வயதைத் தாண்டியும் விளையாடுபவர்களும் இருக்கிறார்கள்.

 

இது உண்மையிலேயே ஒரு மகிழ்ச்சியான விடயம்தான். ஆனால் மறுபுறத்தில் இவ்வாறு உடற்பயிற்சி செய்பவர்கள், விளையாட்டில் ஈடுபடுபவர்களில் கணிசமானவர்கள் கடுமையான மற்றும் நிரந்தரமான காயங்கள், உபாதைகளுக்கு உள்ளாவதும் அதிகரிக்கிறது. அதேநேரம் பாட்மிண்டன் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுபவர்களில் சிலருக்கு விளையாடும்போதே மாரடைப்பு, இதயச் செயலிழத்தல் என்பவற்றால் சிலர் துரதிஷ்டவசமாக இறந்து போவதும் கடந்த சில வருடங்களாகவே நடைபெற்று வருகிறது.

 

இவ்வாறு கடும் காயங்கள் ஏற்படுவதற்கும் எதிர்பாராத விதமாக மரணம் ஏற்படுவதற்கும் நாம் விடும் தவறுகளே காரணமாக இருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை. உடற்பயிற்சியானாலும் விளையாட்டானாலும் எமது உடலைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டுதான் நாம் களத்தில் இறங்க  வேண்டும். எல்லோருடைய உடல் ஆரோக்கியமும் நீண்டநேர உடல் உழைப்பைத் தாங்குதிறனும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மறுபுறத்தில், ஒரு தனிநபரின் உடற்பலம், தாங்குதிறன், தசைநார், நரம்புகளில் ஏற்படும் காயங்கள் குணமடைய எடுக்கும் காலம் என்பன வயதாக வயதாக மாறுபடுகிறது.

 

எனவே நாம் முதலில் எமது ஆரோக்கிய நிலை மதிப்பீட்டைச் செய்து விட்டே எமக்குப் பொருத்தமான உடற்பயிற்சியையும் தெரிவு செய்ய வேண்டும். ஆரோக்கியமான உடலைப் பேண உணவில் எவ்வளவு கவனம் எடுக்கிறோமோ அதேயளவுக்கு நாம் செய்யும் உடற்பயிற்சியையும் அளவோடுதான் செய்ய வேண்டும். பொதுவாகவே மூன்றிலிருந்து ஆகக் கூடியது ஐந்து நாள் உடற்பயிற்சி போதுமானது என்று சொல்கிறார்கள். ஆனால் சிலருக்கு ஐந்து நாட்கள் உடற்பயிற்சியில் ஈடுபட்டாலே அதிக களைப்பு ஏற்படவும் காயங்கள் ஏற்படவும் சந்தர்ப்பம் உள்ளது.

 

எனவே நாம் கடுமையான உடற்பயிற்சி செய்யும்போது இவ்வாறான விடயங்களைக் கட்டாயம் கருத்தில் எடுக்க வேண்டும். அதற்கு முதலில் உங்கள் குடும்ப வைத்தியரிடமோ ஒரு தகுதி வாய்ந்த உடற்பயிற்சியாளரிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டு பயிற்சியில் ஈடுபடுங்கள். குறிப்பாக மருத்துவ காரணங்களுக்காகவோ வேறு காரணங்களுக்காகவோ கணிசமான கால இடைவெளியின் பின்னர் மீள உடற்பயிற்சியை ஆரம்பிக்கிறீர்கள் என்றால் கட்டாயம் தகுந்த ஆலோசனை தேவை.

நாம் பொதுவாக தெரிவு செய்யும் உடற்பயிற்சி அல்லது விளையாட்டுகளில் ஈடுபடும்போது காயங்கள், உபாதைகள் வராது தடுக்கும் சில வழிமுறைகளை உங்களுடன் பகிரலாம் என்று நினைக்கிறேன்.

 

நீங்கள் தேர்ந்தெடுத்தது நீண்ட தூரம் நடத்தல் அல்லது மெல்லோட்டம் என்றால் அவற்றை ஆரம்பிக்க முன்னர் பெரிதாக முன்னாயத்தம் எதுவும் தேவையில்லை. ஆனால் நீண்ட நாட்களுக்குப் பின்னர் மீள ஆரம்பிக்கிறீர்கள் அல்லது புதிதாக ஆரம்பிக்கிறீர்கள் என்றால் முதல் நாளே 10 km தூரம் நடக்கவோ ஓடவோ ஆசைப்பட வேண்டாம். முதல் வாரம் மூன்று அல்லது நான்கு km தூரம் மட்டுமே நடந்தால் போதுமானது. பின்னர் மெது மெதுவாக தூரத்தை அதிகரியுங்கள். நீண்ட தூரம் நடக்கப் பழகிய பின்னரும் ஒவ்வொரு 20 நிமிடம் நடந்த பின்னர்  2 – 3 நிமிட ஓய்வு எடுப்பது நல்லது. நடந்து அல்லது ஓடி முடிந்த பின்னர் உடல் தசைகளை மீளத் தளர்வாக்க தளர்வுப் பயிற்சி (Cool down Exercise) செய்வது சிறந்தது.

 

நீங்கள் தெரிவு செய்வது கரப்பந்து, கால்பந்து, பாட்மிண்டன், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளாக இருந்தால் அதன்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், விளையாடத் தொடங்க முன்னர் 5 நிமிடமாவது Warm-up எனப்படும் தசைகளைத் தயார்ப்படுத்தும் உடற்பயிற்சியைக் கட்டாயம் செய்ய வேண்டும். இது விளையாடும்போது தசைப்பிடிப்பு, தசைநார்ச் சேதம் என்பன ஏற்படும் சந்தர்ப்பங்களைக் குறைக்க உதவும். அதேபோல விளையாடி முடிந்த பின்னரும் 5 – 10 நிமிடங்கள் தசைத் தளர்வுப் பயிற்சி செய்ய வேண்டும்.

 

பாட்மிண்டன் போன்ற விளையாட்டுகளின் பொது 2 – 3 games விளையாடிய பின்னர் 5 நிமிட ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. இது உடற்தசைகள் ஓய்வெடுக்கவும் உங்கள் இதயம் தொடர்ந்து அளவுக்கு அதிகமான வேகத்தில் நீண்டநேரம் வேலை செய்வதைக் குறைக்கவும் உதவும்.

 

நான் ஆரம்பத்தில் சொன்னது போலவே ஒரு வாரத்தில் எத்தனை நாட்கள் உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்பதும் முக்கியமானது. இளவயதில் தினமும் பாட்மிண்டன் அல்லது உதைபந்து விளையாடுவதால் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது. ஆனால் நாற்பதைத் தாண்டி ஐம்பதை அண்மிக்கும்போது அதேபோல தினமும் விளையாட முடியாது. அவ்வாறு விளையாடினால் காயங்கள் ஏற்படுவது சந்தர்ப்பம் அதிகம். மறுபக்கத்தில், அவரவர் உடல் நிலையைப் பொறுத்து, விளையாடிய நாளுக்கு மறுநாள் முழுவதும் உடல்வலி, தலைவலி அல்லது கடும் உடற்சோர்வு ஏற்படும் சாத்தியம் இருக்கிறது.எனவே உங்கள் உடல் நிலையை நீங்களே கணிப்பிட்டு ஒரு நாள் விட்டு ஒரு நாளோ, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறான விளையாட்டுகள், கடும் உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம்.

 

எம்மவர் மத்தியில் இவ்வாறான விளையாட்டுகளில் ஈடுபடுபவர்களில் கணிசமானவர்கள் தாம் வாழும் நாட்டில் நடைபெறும் பல்வேறு சுற்றுப் போட்டிகளில் விளையாடுவதில் அதிக ஆர்வம் காட்டுவதையும் அண்மைக் காலமாக அவதானிக்க முடிகிறது. நாற்பதுகளைத் தாண்டிய பின்னர் இவ்வாறு சுறுசுறுப்பாக இருப்பது போட்டிகளில் விளையாடுவதும் நல்லதுதான். ஆனால் எமது உடல் நிலையை சரியாகக் கணிக்காமல் தொடர்ந்து சுற்றுப் போட்டிகளில் ஈடுபடுவதும் புத்திசாலித்தனமான செயலல்ல.

 

எனக்குத் தெரிந்த நண்பர்கள் பலர் இவ்வாறு தொடர்ந்து சுற்றுப் போட்டிகளில் விளையாடியதன் விளைவாக அடிக்கடி உடல் உபாதைகளுக்கு உள்ளாவதைப் பார்த்து வருகிறேன். உங்கள் உடல் ஒத்துழைத்தால் போட்டிகளில் கலந்து கொள்வதில் தவறில்லை. இல்லையெனில் நீங்கள் கொஞ்சம் அவதானமாக இருப்பது நல்லது. போட்டிகளில் ஈடுபடும் ஆர்வம் இருந்தால், நடைபெறும் எல்லாப் போட்டிகளுக்கும் போகாமல் தெரிந்தெடுத்த முக்கியமான போட்டிகளில் மட்டும் கலந்து கொண்டு உங்கள் திறமையைக் காட்டுங்கள், காயம் வராது பார்த்துக் கொள்ளுங்கள்.

 

சுருக்கமாகச் சொன்னால் நாம் ஆரோக்கியமாக வாழ உடற்பயிற்சி எமக்கு உதவுகிறது. எனவே வாராந்தம் உங்கள் ஓய்வுநேரத்தில் ஒரு பகுதியை உடற்பயிற்சிக்கென ஒதுக்குங்கள். அதேநேரம், உடற்பயிற்சி செய்யும்போது உடலுறுப்புகளுக்கு இடையிடையே போதிய ஓய்வும் கொடுங்கள். தேவையற்ற உடலுபாதைகள் ஏற்படும் சந்தர்ப்பத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

 

வீமன்

  அடி சறுக்கும் அனுர?   தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கில் பெரும் வெற்றியைப் பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்திரு...