Sunday, 31 January 2021

 அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு





2009இல் போர் முடிவுக்கு வந்த பின்னர் உறவுகள், உடல் அங்கங்கள், சொத்துக்கள் அனைத்தையும் இழந்து நின்ற தமிழ் மக்கள் அதிலிருந்து மீண்டு பழைய நிலைக்குத் திரும்புவதற்கு உதவ வேண்டுமென்ற தவிப்பு புலம் பெயர் நாடுகளில் வாழ்ந்த மக்களிடையே ஏற்பட்டது. அதுவே கடந்த பத்து வருடங்களில் தமிழர்கள் மத்தியில் உலகெங்கும் பல்வேறு தொண்டு நிறுவனங்களும் உருவாகுவதற்கு வழி கோலியது. இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தங்களால் முடிந்த வகையில் பல்வேறு உதவிகளை அங்குள்ள மக்களுக்கு செய்து வருகின்றன.

 

கடந்த பல ஆண்டுகளில் புலம்பெயர் சமூகங்கள் மத்தியில் பல்வேறு வகையிலான அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

1.       நண்பர்களால் உருவாக்கப்பட அமைப்புகள்

2.       ஒரே ஊரைச் சேர்ந்தவர்களால் உருவாக்கப்பட அமைப்புகள்

3.       பழைய மாணவர் சங்கங்களால் உருவாக்கப்பட்ட அமைப்புகள்

4.       பாடசாலை நண்பர்களால் உருவாக்கப்பட்ட அமைப்புகள்

5.       தமிழர்களின் வியாபார நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட அமைப்புகள்

6.       ஒரே குடும்ப உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட அமைப்புகள்

7.       தனிநபரால் உருவாக்கப்பட்ட அமைப்புகள்

8.       ஏற்கனவே இயங்கிய தமிழ் அமைப்புகளின் சமூகசேவைப் பிரிவுகள் 


இவ்வாறு உருவான  அமைப்புகள் ஒவ்வொன்றும் தமது தனிப்பட்ட ஆர்வம், துறைசார் அனுபவம் என்பவற்றின் அடிப்படையில் கல்வி, விவசாய, பொருளாதார, மருத்துவம், உளநலம், தொழில்நுட்பம் ஒரு துறையில் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளில் தமது சேவைகளை வழங்கி வருகின்றன.

 

இவ்வாறு இயங்கும் இந்த அமைப்புகள் ஒவ்வொன்றும் அவை நிதி சேகரிக்கும் முறை, கருத்திட்டங்களை உருவாக்கும் முறை, திட்டங்களை நடைமுறைப்படுத்தும் முறை என்பனவற்றின் அடிப்படையில் தனித்துவமானவை என்றே கூறலாம். அதேபோல இவற்றுள் சில அமைப்புக்கள்  பதிவு செய்யப்படாதவையாகவும் சில அமைப்புகள் அவற்றின் பெரும்பாலான உறுப்பினர்கள் வாழும் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன. வேறு சில அமைப்புகள் தமது நாட்டிலும் அதேநேரம் இலங்கையிலும் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகின்றன.

 

சட்டரீதியாக பதிவு செய்யப்படாத சில அமைப்புகள் அந்த நாட்டில் இயங்குகின்ற வேறு ஒரு  பதிவு செய்யப்பட்ட ஒரு தொண்டு நிறுவனத்தினூடாகவே இலங்கைக்கு பணம் அனுப்புவதுடன் தமது சேவையும் தமிழர் வாழும் பகுதியில் செய்கின்றன. இவ்வாறு முறையாகப் பதிவு செய்யப்படாத பல அமைப்புகள், பெரும்பாலும் நண்பர்கள் மத்தியிலிருந்து மட்டுமே நன்கொடை சேகரித்து தாயகத்தில் உதவி செய்வதாலும் பரஸ்பர நம்பிக்கை அடிப்படையில் தொழிற்படுவதாலும் பதிவு செய்வதைப் பற்றி கவனம் செலுத்தாது இருந்திருக்கக்கூடும்.

வேறு சில அமைப்புக்கள், தொண்டு நிறுவனமாக பதிவு செய்ய முனைந்தபோதிலும் அதற்குத் தேவையான நியமங்களை எட்ட முடியாமையால் இலாப நோக்கற்ற அமைப்பாக மட்டுமே பதிவு செய்து இயங்குகின்றன. ஒரு நிறுவனம் தொண்டு நிறுவனமாக பதிவு செய்வதனால் பல நன்மைகள் உள்ளன. அவற்றுள் முக்கியமான ஒரு நன்மைதான்,  இலங்கையில் உதவி பெறும் அமைப்புடன் சட்ட ரீதியான ஒப்பந்தம் செய்ய முடியும் என்பது. இதைத் தவிர, திட்ட நடைமுறைப்படுத்தலில் அரச கட்டமைப்பின் உதவியைப் பெற முடியும் என்பதோடு அரசு மற்றும் பிறநாட்டு நிதிவழங்கும் அமைப்புகள், சர்வதேச நிறுவனங்களின் நிதிகளையும் விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ள முடியும்.

 

சில சட்ட ரீதியாக பதிவு செய்யப்படாத பல அமைப்புகள் பெரும்பாலும் பணத்தை சட்டவிரோதமான முறையிலேயே இலங்கைக்கு அனுப்புகின்றன. இதனால் அந்த அமைப்புகள் உள்நாட்டில் உள்ள அமைப்பிடம் கொடுத்த நிதிக்கான பொறுப்புக் கூறலை வலியுறுத்தும் சட்டரீதியான உரிமை அற்றுப் போகிறது. மக்களின் நம்பிக்கையைப் பெறுவது கடினமாகிறது. மறுபுறத்தில் வெளிநபர்களிடம் நிதி சேகரிக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது.

 

பதிவு செய்யப்படல், பதிவு செய்யப்படும் விதம் போன்ற விடயங்கள் தவிர்த்து இந்த அமைப்புக்கள் கவனம் செலுத்த வேண்டிய வேறு சில முக்கியமான விடயங்கள் உள்ளன. அந்த விடயங்களை கொஞ்சம் விபரமாகவே பார்ப்போம்.

 

1.       கருத்திட்ட முன்மொழிவு  (Project Proposal)

இன்று தமிழர்கள் மத்தியில் நூற்றுக்கணக்கான உதவி வழங்கும் அமைப்புகள் இயங்கி வந்தாலும், அவற்றுள் மிகச் சிலவே முறையான கருத்திட்ட முன்மொழிவுகளை எழுதக் கூடியவையாக இருக்கின்றன. முதலில் கூறியதுபோல, தமது சொந்தப்பணத்தை அல்லது நண்பர்கள் வழங்கும் பணத்தைக் கொண்டே தாயகத்தில் உள்ள மக்களுக்கு உதவி செய்து வருவதனால் முறையான திட்ட முன்மொழிவை விபரமாக எழுத வேண்டிய அவசியமும் பல அமைப்புக்களுக்குத் தேவைப்படவில்லை என்று கொள்ளலாம். ஆனால் அதுவே இன்று பல நிறுவனங்களின் பலவீனமாகவும் மாறியுள்ளது என்று கூறமுடியும்.

 

குறிப்பாக அண்மைக் காலமாக பல நாடுகள், நாடுகளில் இயங்கும் சேவை அமைப்புகள் இலங்கையில் உள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த நிதியுதவிகளை வழங்க முன்வந்துள்ளன. ஆனால் அவர்கள் விண்ணப்பத்தில் கேட்கும் விபரங்களை சரியான முறையில் கொடுத்து நிதிக்கொடைகளை பெற்று தேவையுள்ள மக்களுக்கு அதன் நன்மைகளைப் பெற்றுக் கொடுக்க முடியாதவர்களாக இருப்பது மிகவும் கவலைக்குரியது.

 

உண்மையிலேயே இவ்வாறு நிதிகளைப் பெறுவதற்கு திட்ட முன்முன்மொழிவை எழுதுவது கடினமான விடயமில்லை. முயற்சியும் பயிற்சியும் இருந்தால் நிச்சயமாக சிறந்த திட்ட முன்மொழிவை எழுதுவதோடு தேவையான நிதியைப் பெற்று பல மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுக்க முடியும். இதற்குக் கூட இப்போது கட்டணம் பெற்றுக் கொண்டு திட்ட முன்முன்மொழிவுகளை எழுதித் தரக்கூடிய துறைசார் நிபுணர்கள் இருக்கிறார்கள். அவ்வாறான, திறமையான நிபுணர்களைக் கண்டறிய நாம் எமது துறைசார் தொடர்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுள் சிலர் சேவை அடிப்படையில் இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்திற்கு எழுதித் தர முன் வரக்கூடும்.

 

2.       கண்காணிப்பும் மதிப்பீடும் (Monitoring and Evaluation)

எந்த ஒரு கருத்திட்டத்திலும் மிக முக்கியமானது அந்தக் கருத்திட்டம் முறையாக திட்டமிட்ட முறையில் ஆரம்பித்ததா? சரியான பாதையில் செல்கிறதா? சமூகத்தில் எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்துகிறதா என்பதை அறிந்திருத்தல் ஆகும். ஒரு கருத்திட்டத்தின் வெற்றி தோல்வியை ஒரு முறையான மதிப்பாய்வு செய்தே அறிதல் முடியும்.

 

புலம்பெயர் தமிழர் மத்தியில் உருவாகியுள்ள பல நிறுவனங்கள் தாம் இலங்கைக்கு அனுப்பும் நிதி செலவு செய்யப்படுவதை பெரும்பாலும் கண்காணிக்கின்றன. ஆனால் அவற்றுள் எத்தனை அமைப்புகள் தாம் நடைமுறைப்படுத்தும் திட்டங்களை முறையாக கண்காணிக்கும், அவற்றின் வெற்றி தோல்விகளை மதிப்பீடு செய்யும் பொறிமுறையையும் ஆற்றலையும் கொண்டிருகின்றன? தமது நிறுவனத்திற்குள் அவ்வாறான ஆற்றல் இல்லையென்றால் அந்த ஆற்றல் உள்ள நிறுவனங்களுடன் இணைந்து வேலை செய்கின்றனவா? அல்லது இணைந்து வேலை செய்யத் தயாராக இருக்கின்றனவா?

இந்தக் கேள்விகளை இவ்வாறு தாயகத்தில் மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுக்கும் அமைப்புகள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்வது அவசியமாகும்.

 

3.       அடிப்படைத் தரவு சேகரிப்பு (Basic data collection and Need Assessment)

இந்த நிறுவனங்களில் உள்ள இன்னுமொரு பெரிய குறைபாடுதான் தேவையான அடிப்படைத் தரவுகளை முறையாக சேகரிக்காமை. இந்த இடத்தில், அனைத்து உதவி அமைப்புகளுமே முறையான தகவல் சேகரிப்பில் ஈடுபடுவதில்லை என்று கூற வரவில்லை. ஆனால் பல அமைப்புகள் தமது தாயகத் தொடர்பாளராக உள்ள ஒருவரிலேயே தரவுகளுக்காக தங்கியிருக்கும் நிலையே இன்று பரவலாகக் காணப்படுகிறது.

 

இங்கு நாம் சொல்ல வருவதை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு புலம்பெயர் அமைப்புகள் தவறான தரவுகள் அடிப்படையில் ஒரு கிராமத்தை தெரிவு செய்கின்றன அல்லது தேவையுள்ள மக்களைத் தெரிவு செய்கின்றன என்று நாம் சொல்லவில்லை. உங்களுக்காக தகவல் தருபவர் தனக்குத் தெரிந்த வரையில் சரியானது என்று என்னும் தரவினை உங்களிடம் பகிரக் கூடும். ஆனால் அதே பிரதேசப் பிரிவில் அதனை விடப் பின்தங்கிய, உனடியாக உதவி சென்று சேரவேண்டிய கிராமங்கள், குடும்பங்கள் இருக்கும் சந்தர்ப்பம் அதிகம் உள்ளது. இதனைச் சரிசெய்வதற்கு, நாம் முறைப்படுத்தப்பட்ட அடிப்படைத் தரவுகளை சேகரிக்கும் பொறிமுறையை பயன்படுத்த வேண்டும்.

 

4.       தகவல் பரிமாற்றம் (Information sharing and communication)

எமது தமிழர் அமைப்புகள் மத்தியில் நாம் காணும் இன்னுமொரு குறைபாடுதான் நிரறுவனங்களுக்கிடையில் தகவல் பரிமாற்றம் செய்வதில் உள்ள தயக்கம். எனது தரவுகளை வைத்து அந்த நிறுவனம் நல்ல திட்டத்தை செயல்படுத்திப் பெயர் எடுத்துவிடுமோ, எமது வேலைத்திட்டம் தொடர்பான விடயங்கள் பலருக்கும் தெரிந்தால் வேறு யாரேனும் எமது வேலைகளுக்கு இடைஞ்சல் கொடுப்பார்களோ என்ற எண்ணங்களும் மற்றைய நிறுவனங்கள் தொர்டபான அபிப்பிராயங்களும் நிறுவனங்களுக்கிடையில் தகவல் பரிமாற்றம் நடைபெறுவதற்குத் தடையாக உள்ளன. இதனாலேயே ஒருஅமைப்பு தனது வேலைத்திட்டத்திற்கு தேவையான மனித வள உதவிகளை வேறு அமைப்புக்களிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது.

 

5.       முழுமையான அபிவிருத்தி அணுகுமுறை (Holistic Development approach)

வடக்கு, கிழக்கில் போரினாலும் வேறு காரணிகளாலும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் காத்திரமாக அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டுமென்றால் நாம் ஒரு முழுமையான அபிவிருத்தி அணுகுமுறையை பின்பற்ற வேண்டியுள்ளது. அதாவது, பொருளாதார, கல்வி, சமுதாய மற்றும் மனிதவள அபிவிருத்தியை ஒருசேர முன்னெடுப்பது அவசியமாகும்.

 

ஆனால் இன்றுள்ள நிலையில் இந்த சேவை நிறுவனங்கள் எல்லாமே ஒரு பரந்த பிரதேசத்தில் நாம் குறிப்பிட்ட வகையில் முழுமையான அணுகுமுறையைப் பின்பற்றி ஒரு குறித்த பிரதேசத்தில் நிலைபேறான வளர்ச்சியை ஏற்படுத்தத் தேவையான மனித வளங்களையும் கொண்டவையாக இல்லை என்பதே களயதார்த்தம். அவ்வாறு மனித வளங்களை ஒரு அமைப்புக் கொண்டிருந்தாலும் அவர்களிடம் போதுமான ஏனைய வளங்கள், குறிப்பாக நிதி வளம் இருப்பதில்லை.

 

இந்த இடத்தில்தான் நிறுவனங்கள் சேர்ந்து இயங்க வேண்டிய தேவை தற்போது உணரப்படுகிறது. கடந்த காலங்களில் தனித் தனித் தீவுகளாக இயங்கி வந்த அமைப்புகள் சில அண்மைக் காலங்களில் தாம் சேர்ந்து இயங்கினால் அதிக சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை உணரத் தலைப்பட்டுள்ளன.  சில மனிதாபிமான அமைப்புகளும், உதவி நிறுவனங்களும் ஏற்கனவே இணைந்து வேலை செய்ய ஆரம்பித்துவிட்டன. இனிவரும் நாட்களில் மேலும் பல அமைப்புகள் இணைந்து செயற்படக்கூடிய சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்.

6.       அரசின் கண்காணிப்பு நடைமுறை (Government’s Monitoring System)

இலங்கையில் கடந்த சில வருடங்களாகவே அரச கட்டமைப்பினூடாக சகல அரச சார்பற்ற சேவை அமைப்புகளின் விபரங்கள் தொடர்ச்சியாகத் திரட்டப்படுகின்றன. ஒவ்வொரு நிறுவனமும் அங்கு NGO ஆக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். தற்போது இலங்கையில் NGO செயலகம் நேரடியாக பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஒவ்வொரு அரசசார்பற்ற நிறுவனமும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தமது பெறுபேற்று அறிக்கையையும் நிதி அறிக்கையையும் மாவட்ட செயலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். வருடாந்தம் அவர்களின் அடுத்த வருட வேலைத்திட்டமும் பாதீடும் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டாலே அந்த நிறுவனம் தொடர்ந்தும் தமது வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும்.

 

இதைத் தவிர மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒரு மாவட்டத்தில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மாவட்டச் செயலாளருடனான மீளாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளுதல் வேண்டும். இந்தக் கூட்டம், சேவை அமைப்புகள் ஒன்றாகக் கூடி மக்களின் தேவைகளை இனங்காணவும் (Identify and discuss emerging needs), எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் கலந்துரையாடவும் (Challenges in implementation) ஒரே பிரதேசத்தில் இரண்டு அமைப்புகள் ஒரே வகையான சேவையை முன்னெடுக்கும் சூழலில் (Service duplication) அதனைத் தவிர்க்கவும், தமது அனுபவங்களைப் பகிரவும் (Experience including best practices) ஒரு சந்தர்ப்பமாகவும் அமைகிறது.

 

ஒத்துழைப்பும் கூட்டு முகாமையும் (Collaboration and Partnership)

மேலே குறிப்பிட்டது போல ஒவ்வொரு நிறுவனம்/ அமைப்பிலும் பலமும் பலவீனமும் இருக்கின்ற நிலையில் இவ்வாறான அமைப்புகள் இணைந்து பணிபுரிவதன் மூலம் பலவீனங்களை இல்லாது செய்வதுடன், ஒரே நேரத்தில் ஒரு பரந்த பிரதேசத்தில் ஏற்படுத்த நினைக்கும் மாற்றத்தை உருவாக்க முடியும். இங்கு நாம் இணைந்து இயங்குதல் என்பது பல வகைகளில் செய்யப்படக் கூடியது.

1.       ஒரு குறித்த சிறு பிரதேசத்தின் வேறுபட்ட பிரச்சனைகளைத் தீர்க்கும் வகையில் வேறு வேறு துறையில் சேவை புரியும் அமைப்புகள் ஒரே காலப்பகுதியில் அந்தப் பிரதேசத்தில் தத்தமது செயற்றிட்டங்களைச் செயற்படுத்துதல்.

2.       ஒரு பிரதேசத்தில் நிலைபேறான அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஒரு முழுமையான வேலைத்திட்டத்தை ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் இணைந்து உருவாக்குவதுடன் புரிந்துணர்வு அடிப்படையில் வேலைத்திட்டங்களின் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளுதல்.

3.       அமைப்புகளிடையே முறையான ஒப்பந்தங்களை உருவாக்கி அதன் அடிப்படையில் இணைந்து இயங்குதல்

 

சேவைகள் ஒருங்கிணைப்பும் முகாமைத்துவமும் (Service Coordination and Management)

இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல, போர் முடிவுக்கு வந்த பின்னர் எமது தொப்புள்கொடி உறவுகளுக்கு கைகொடுக்க வேண்டும் என்ற காரணத்தினால்தான் எம்மவர் மத்தியில் தோன்றிய பல அமைப்புகள் கடந்த பதினோரு வருடங்களாக தங்களால் முடிந்த உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றன. நிவாரணம் கொடுப்பதிலிருந்து மக்களின் தொழில் முயற்சிகளுக்குக் கைகொடுப்பது வரை இந்த அமைப்புகள் பலதரப்பட்ட உதவிகளை உதவி வந்தாலும் நிறுவனங்கள் இதுவரை இவர்கள் இதுவரை காலமும் முதலிட்ட நிதி, மனித வளம் என்பவற்றின் பெறுமதியோடு ஒப்பிடும்போது நாம் பெற்றிருக்க வேண்டிய பெறுபெறுகள், ஏற்படுத்தியிருக்கக் கூடிய மாற்றங்களைப் பெறமுடியவில்லை என்பதுதான் உண்மை.

 

அதேநேரம், இன்று தமிழர்கள் மத்தியில் இலங்கையிலும் சரி, உலக நாடுகளிலும் சமூக விஞ்ஞானம், பொருளியல், சூழலியல், மருத்துவம், விவசாயம், நீர்முகாமை, தகவல் தொழிநுட்பம் என பல்வேறு துறைசார் நிபுணர்களுக்குக் குறைவில்லை. அவர்களுள் பலர் தங்களால் முடிந்தவரை இலங்கையில் வாழும் பின்தங்கிய, போர் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முயற்சியில் பங்களிக்கத் தயாராகவே இருக்கிறார்கள்.

 

மறுபுறத்தில் உதவி நிறுவனங்களும் நிவாரணப் உதவிகளைவிட நிலைபேறான அபிவிருத்தியை நோக்கிய செற்பாடுகளை எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டும் என்று உணரத் தலைப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் முதலீடு செய்யப்படும் நிதி மற்றும் மனித வளங்களை முறையாக பயன்படுத்தி தற்போது உள்ள சில பொறிமுறைகளையும் புதிய பொறிமுறைகளையும் பயன்படுத்துவோமானால் எம்மால் நிச்சயமாக நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

 

உள்நாட்டு மட்டத்தில் ஒருங்கிணைவு

முன்னர் குறிப்பிட்டது போல ஏற்கனவே மாவட்ட மட்டத்தில் மாவட்டச் செயலாளரின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அரசசார்பற்ற நிறுவனங்களும் தொண்டு அமைப்புகளும் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றன. இதனை தமது வேலைத்திட்டங்களின் தேவைகளுக்கும் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வு காணவும் ஒவ்வொரு நிறுவனமும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இது மாவட்ட அளவில் பல கிராமங்களில் செயற்றிட்டங்களை முன்னேடுப்போருக்கு பொருத்தமானதாக இருக்கும்.

 

சிறிய நிதியைக் கொண்டு ஓரிரு கிராமங்களில் மட்டும் செயற்றிட்டங்களை முன்னேடுப்போர் பிரதேசச் செயலக மட்டத்தில் இதேபோல இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையோ மூன்று மாதங்களுக்கு ஒருமுறையோ சேவை ஒருங்கிணைப்புக் கூட்டங்களை நடாத்த முடியும். இதனை அந்தந்த பிரதேசச் செயலாளரே முன்னெடுக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த ஒருங்கிணைப்புச் செயற்பாடு தொடர்ச்சியானதாக அமையும். ஆனால் இந்த ஒருங்கிணைப்பை சமூக, தொண்டு நிறுவனங்களே தாமாகவே ஒன்றிணைந்தும் ஒருங்கிணைப்புக் கூட்டங்களை நடாத்தவும் முடியும்.

 

முன்னரே குறிப்பிட்டது போல, இவ்வாறான கூட்டங்களை மக்களின் தேவைகளை இனங்காணவும் (Identify and discuss emerging needs), நிறுவனங்கள் திட்ட நடைமுறைப்படுத்தலில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் கலந்துரையாடவும் (Challenges in implementation) ஒரே பிரதேசத்தில் கிராமத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகள் ஒரே வகையான சேவையை முன்னெடுக்கும் சூழலில் (Service duplication) அதனைத் தவிர்க்கவும், தமது அனுபவங்களைப் பகிரவும் (Experience including best practices) ஒரு சந்தர்ப்பமாகவும் பயன்படுத்த முடியும்.

 

தரவுத் தளத்தை உருவாக்குதல் (Information Portal)

தற்போது இலங்கையின் வடக்கு, கிழக்கில் நூற்றுக்கணக்கான அரசசார்பற்ற நிறுவனங்களும் அதேபோல புலம்பெயர் தேசங்களிலும் நூற்றுக்கணக்கான சிறிய, பெரிய தொண்டு அமைப்புகள் இயங்கி வருகின்றன. ஆனாலும் இவர்கள் நடைமுறைப்படுத்தும் கருத்திட்டங்கள் தொடர்பான விபரங்களும் இலங்கையில் இனங் காணப்பட்டு இன்னமும் செய்யப்பட வேண்டிய விபரங்கள் தொடர்பான தரவுகளும் ஒரு தளத்தில் பெறக்கூடியதான ஒரு வலைத்தளம் உருவாக்கப்படல் வேண்டும். சேகரித்த தரவுகளை ஏனைய முக்கியமான விபரங்களை உறுப்பினர்கள் மட்டுமே கடவுச் சொல்லைப் பயன்படுத்திப் பார்க்கக்கூடியதாக அமைக்க முடியும். இது வடக்கு, கிழக்கு மற்றும் மலையக அமைப்புகள் அண்மைக் காலங்களில் பங்குபற்றிய கூட்டங்களில் குறிப்பிட்ட ஒரு விடயம் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

 

புலம்பெயர் சமூக மட்டத்தில் ஒருங்கிணைவு

புலம்பெயர் அமைப்புகளும் தொடர்ந்தும் தனித்தனி அமைப்புகளாக இயங்காது துறை அடிப்படையிலோ, இலங்கையில் அவர்கள் தமது திட்டங்களை நடைமுறைப்படுத்தும் மாவட்டத்தின்/ பிரதேச செயலக அடிப்படையிலோ இணைந்து செயற்படுவதன் மூலம் காத்திரமான, வினைத்திறன் உள்ள வகையில் தாயகத்தில் செயற்பட முடியும். இதனைப் பல தொண்டு அமைப்புகள் ஏற்கனவே உணர்ந்துள்ளதுடன் கடந்த வருடம் ஒன்றிணைந்து செயற்படுவதற்கும் தொடங்கியுள்ளன.

 

உதாரணமாக தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான செயற்பாடுகளில் ஈடுபாடு காட்டும் வட அமெரிக்க, ஆஸ்திரேலிய நாடுகளில் உள்ள அமைப்புகள் வன்னிப்பிரதேசத்திலும் கிழக்கிலும் ஏற்கனவே இணைந்து செயற்படத் தொடங்கி விட்டன. இவர்களோடு இலங்கையில் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபாடு காட்டும் இளையவர்கள் அமைப்பும் ஏனைய அமைப்புகளும் இணைந்து பயணிக்கின்றன. இதே வழியில் ஏனைய துறைகளில் ஈடுபாடு காட்டும் அமைப்புகளும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும்.

 

பதிவு செய்யப்படாத அமைப்புகள்

இதுவரை நாம் பேசிய விடயங்கள் பதிவு செய்யப்பட்டு இயங்குகின்ற அமைப்புகள் தொடர்பானதே. இவ்வாறான அமைப்புகளைத் தவிர பல நூற்றுக்கணக்கான சிறு குழுக்கள் பதிவு செய்யப்படாத அமைப்புகளாக இயங்குகின்றன. அதேபோல தனிநபர்களும் தேவையுள்ள குடும்பங்களின் கல்விக்கு, வாழ்வாதாரத்திற்கு நேரடியாக உதவி வருகின்றன. இவர்கள் செய்துவரும் உதவிகள் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவை.

 

இவர்கள் செய்யும் உதவிகள் பெரிதும் பாராட்டப்பட்டாலும் இவர்கள் செய்யும் சேவைகள் தொடர்பாக “இவர்கள் ஏன் தனித்தனியே உதவி செய்கிறார்கள்? ஏற்கனவே இருக்கும் அமைப்புகளில் இணைந்து இதனைச் செய்ய முடியும்தானே?” என்ற ஒரு பொது விமர்சனம் சிலரால் முன் வைக்கப்படுகிறது. ஒரு பொது அமைப்பினூடாக நிதியுதவிகளைச் செய்யும்போது முறையாகத் திட்டமிட்டு ஒரு பிரதேசத்தில் முழுமையான முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்; நிதியைப் பெறும் குடும்பம் நிதியை வீண்விரயம் செய்யாது தடுக்க முடியும் (கண்காணிப்புப் பொறிமுறை மூலம்); போன்ற வாதங்கள் ஏற்புடையவையே.

 

ஆனால் இவ்வாறு தனிநபர்களாக, சிறு குழுக்களாக உதவும் அமைப்புகள் செயற்படும் முறையில் தனித்துவமானவையாக இருக்கின்றன. உதாரணமாக தாயகத்தில் ஒரு தேவையுள்ள குடும்பம் அடையாளம் காணப்பட்டதும் உடனடியாகவே இவர்களால் தேவையான உதவிகளை வழங்கிவிட முடியும். ஒரு குடும்பத்தின் பிள்ளைகளின் கல்விக்கு தொடர்ச்சியாக பண உதவி வழங்க முடியும். மாணவரை ஆரம்ப வகுப்பில் தத்தெடுத்து பல்கலைக் கழகம் செல்லும்வரை அவர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சிறுதொழில் தொடங்கவும் உதவுகிறார்கள். இப்படியாக இவர்கள் செய்யும் உதவிகள் நீண்டு கொண்டு செல்கின்றன.

 

நடைமுறையில் சட்டரீதியாக இயங்கும் பெரிய சிறிய அமைப்புகள் திட்டமிட்ட வகையில் பல்வேறு பெரிய, சிறிய திட்டங்களை முன்னெடுக்கின்றபோதிலும் ஆங்காங்கு விடுபட்டுப் போகின்ற சந்தர்ப்பங்களில் இவ்வாறான தனிநபர்களும் சிறுகுழுக்களும் அந்த இடைவெளிகளை நிரப்புபவர்களாக இருக்கிறார்கள் என்பதை நாங்கள் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். இதனை ஒரு செழிப்பான காட்டில் உள்ள செடிகள், கொடிகள், புற்கள், சிறு மரங்கள் எவ்வாறு பல்வேறு உயிரினங்களுக்கும் வாழிடத்தையும் உணவுக்கான ஆதாரத்தையும் வழங்குவதோடு ஒப்பிடலாம். இருந்தபோதிலும் இவர்களும் ஏனைய அமைப்புகளோடு பொருத்தமான முறையில் இணைந்து பணிபுரிய முடியுமாயின் வேலைத்திட்டங்களை விரைவாக முன்னெடுப்பதும் அதிகமான மக்களுக்கு சேவையை வழங்குவதும், பெறுபேறுகளை மதிப்பாய்வு செய்வதும் இலகுவானதாகும்.


இல்லையென்று சொல்லி விடுங்கள் !! 

“இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதும்”. ஆனால் எங்களில் பலரால் “இல்லை” என்று சொல்ல வேண்டிய சந்தர்ப்பத்தில் “இல்லை” என்று சொல்ல முடிவதில்லை. அதனாலேயே நாம் தேவையற்ற மனச் சங்கடங்கள், பிரச்சனைகள் என்பவற்றிற்கு முகம் கொடுக்கிறோம். இவ்வாறான நிலைமையை  எமது குடும்பம், அலுவலகம், நட்பு வட்டம் என நாம் வாழும் அனைத்துச் சூழலிலுமே எதிர்கொள்கிறோம்.

 

பலநேரங்களில், “இல்லை” என்று சொல்ல விரும்பினாலும் எங்களை அறியாமலே “சரி, செய்கிறேன்” என்று சொல்லி விடுகிறோம். இது ஏன் என்று நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? சுயநலமானவர், எங்களைப் பற்றி அக்கறையற்றவர், முக்கியமான தருணத்தில் கைவிட்டு விட்டார் என்று எமது நட்பும் சுற்றமும் சொல்லிவிடுமோ என்ற உணர்வே எம்மை இவ்வாறு செய்ய வைக்கிறது.

 

கேட்பவருக்கு நாம்  கடமைப்பட்டுள்ளோம் என்ற உணர்வு, கேட்பவர் நெருங்கிய உறவினர் என்பதால் தவிர்க்க முடியாத நிலை, நட்புக்காக செய்ய வேண்டுமே போன்ற அக அழுத்தங்கள் காரணமாகி விடுகின்றன. இவ்வாறான அழுத்தங்களால் இல்லையென்று சொல்ல முடியாதாவர்கள் அதனாலேயே நேரவிரயம், பண நட்டம் என்பவற்றுடன் கணவன் மனைவிக்குள் இதனால் சண்டை, உறவுமுறைகளில் விரிசல், நண்பர்கள் மத்தியில் மனக்கசப்பு மட்டுமன்றி கடும் மனவழுத்தத்திற்கும் உள்ளாகி துன்பப்பட வேண்டியுள்ளது.

 

பொதுவாக சரீர ரீதியாக இன்னொருவருக்கு உதவும்போது எங்களுக்கு வெறும் நேர விரயம் மட்டுமே ஏற்படும். ஆனால்  இன்னொருவருக்காக கடன் வாங்கிக் கொடுத்தல், அவருடைய கடனுக்கு, வீடு வாங்குவதற்கு பிணை நிற்றல் போன்ற சந்தர்ப்பங்களில் முன்பின் யோசிக்காது “சரி, செய்கிறேன்” என்று சொல்லிவிட்டு பின்னர் அந்தக்  கடனையும் அதற்கான வட்டியையும் கட்டி நொந்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.

 

 இவ்வாறு தேவையான இடத்தில் இல்லை என்று சொல்ல முடியாமைக்கும் தன்னம்பிக்கைக்கும் தொடர்பிருப்பதாக சில உளவியலாளர்கள் சொல்கிறார்கள். அதேபோல தனது தேவைகளைவிட தன்னைச் சுற்றியுள்ளவர்களின் தேவைகளுக்கே முன்னுரிமை கொடுப்பவர்களும் இவ்வாறு நடப்பதாகக் கூறப்படுகிறது. ஒருவர் சிறுவயதிலிருந்து வளரும் சூழலும் பெற்றோரின் வளர்ப்பு முறையும் இதில் தாக்கம் செலுத்துகின்றன என்பது இன்னொரு சாராரின் கருத்தாக இருக்கிறது.

 

எவ்வாறு “இல்லை” என்று சொல்வது?

முதலில் நீங்கள் “இல்லை” என்று சொல்லுவது, உதவி கேட்பவருக்கு உதவக் கூடாது என்பதனால் இல்லை என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உதவ மறுப்பதால் அவர் மிகவும் கஷ்டப்படப் போகிறார். அதற்கு நானே காரணமாக இருக்கப் போகிறேன் என்ற குற்ற உணர்வுக்கு ஆளாகிவிடாதீர்கள். நீங்கள் நிராகரிக்கப்போவது அவரின் கோரிக்கையை மட்டுமே, அவரையல்ல. உங்களால் முடியாதென்றால் உடனடியாகவே தைரியமாக, முடியாதென்று சொல்லிவிடுங்கள். ஆனால் அதற்கு விளக்கம் சொல்ல முயற்சிக்காதீர்கள். அது தேவையில்லாத பிரச்சனையைத்தான் உருவாக்கும்.


 அப்படி உடனடியாக மறுக்க முடியாவிட்டால், “நான் யோசித்துச் சொல்கிறேன்” என்று சொல்லுங்கள். இவ்வாறு போதிய நேரத்தைப் பெற்றுக் கொண்டதால் சாதக பாதகங்களை நன்கு யோசித்து பதிலளிக்க முடியும். கேட்டவரும், நீங்கள் பெரும்பாலும் மறுத்து விடுவீர்கள் என்பதை புரிந்து கொள்ளத் தயாராகிவிடுவார். செய்யமுடியாதென மறுப்பதற்கும் உங்களைத் தயார் செய்து கொள்ள முடியும்.


 உங்களிடம் ஒருவர் “எனக்கொரு உதவி செய்ய முடியுமா?” என்று கேட்டால், முதலில் என்ன உதவி வேண்டும் என்று சொல், என்னால் செய்ய முடியுமா என்று சொல்கிறேன்” என்று சொல்லப் பழகுங்கள். அவர் கேட்கும் உதவியை உங்களால் செய்ய முடியாத நிலையில் நீங்கள் இருந்தால் சிறிதும் தயங்காது, “மன்னிக்கவும் என்னால் செய்ய முடியாதுள்ளது” என்று தெளிவாகச் சொல்லி விடுங்கள். ஆரம்பத்தில் இது பலருக்குக் கடினமாக இருந்தாலும் ஓரிருமுறை செய்யத் தொடங்கிய பின்னர் தேவையான சந்தர்ப்பத்தில் “இல்லை” என்று சொல்லுவது கடினமானதாக இருக்காது.

 

முக்கிய குறிப்பு: இதனை வாசித்த பின்னர் உங்களில் பலர் இனிமேல் உங்களுக்கு விருப்பமில்லாத விடயத்தில் துணிந்து “NO” சொல்லிவிட வேண்டும் என்று தீர்மானமே எடுக்கக்கூடும். ஆனால் உங்கள் பணியிடத்தில் மேலதிகாரி சொல்லும் விடயங்களில் அவசரப்பட்டு “இல்லை, முடியாது” என்று சொல்லி விடாதீர்கள். இதனால் உங்கள் வேலைக்கே ஆபத்து ஏற்படலாம்.

 

மிக முக்கிய குறிப்பு: ஆண்களே, இந்த கோட்பாட்டை மனைவி விடயத்தில் பின்பற்றி ஆபத்தில் மாட்டிக் கொள்ளாதீர்கள். மனைவி சொல்லும் ஏதாவது விடயத்திற்கு “NO” சொல்லி அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பில்லை.

Saturday, 23 January 2021



= கல்விமுறையில் தேவையான மாற்றங்களும் மூலோபாயங்களும் =

மணிவண்ணன் மகாதேவா.

கடந்த வருட ஆரம்பத்திலிருந்து இலங்கையிலும் புலம்பெயர் சமூகத் தமிழ்பேசும் உலகிலும் அதிகம் பேசப்பட்ட விடயம் கல்வி முன்னேற்றம் தொடர்பானதாகும். கல்வியியலாளர்கள், மற்றும் கல்வி வளர்ச்சி தொடர்பில் அக்கறை கொண்டிருக்கும் பலரும் இன்று கல்வி தொடர்பில் தொடர்ந்தும் பேசவும் காத்திரமான முறையில் வினையாற்றவும் ஆர்வம் காட்டுவதற்கு பாடசாலை மட்டத்தில் நடைபெறும் மூன்று பொதுப் பரீட்சைகளில் வடக்கு, கிழக்கின் பெறுபேறுகள் மட்டுமன்றி, மானவர்களின் சமூக நடத்தை, சமூகப் பொறுப்புத் தொடர்பான கரிசனையும் காரணமாக அமைந்துள்ளது.

 

இவ்வாறு கல்வியில் அக்கறை காட்டும் பலர், பேசுவதோடு மட்டுமல்லாது, பயனுள்ள நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. பின் தங்கிய பிரதேச மாணவர்களுக்கான இணையவழிக் கல்வி, மேலதிக வகுப்புகள், செயலட்டைகள் தயாரித்துக் கொடுத்தல், மடிக்கணினி, டப்லேட் வழங்குதல் போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இவற்றுள் சில நடவடிக்கைகள் வசதி குறைந்த மாணவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொடர்ச்சியான கற்பித்தலை மேற்கொள்ள உதவுதல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டிருந்தன. சில அமைப்புகளின் நடவடிக்கைகள், இந்த வருடம் நடைபெற்ற பொதுப் பரீட்சைகளுக்கு மாணவர்களை துரிதமாக தயார் செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தன.

 

இந்த அடிப்படையில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவோரில் இரண்டு வகையானவர்களை தெளிவாக இனங் காண முடிகிறது. ஒருசாரார் தமிழ்மாணவர்கள் அனைவரும் கல்வி கற்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் அதேவேளை, மறுசாரார், தமிழ் மாணவர்கள் குறிப்பாக வடமாகாண மாணவர்கள் பொதுப் பரீட்சைகளில் மீண்டும் முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் இருசாராருமே மாணவர்கள் மத்தியில் கல்வியோடு ஒழுக்கம், நல்ல பழக்க வழக்கங்கள், சமூகப் பொறுப்பு என்பனவும் இளைய சமுதாயத்தின் மத்தியில் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதையும் அவதானிக்க முடிகிறது.

 

தமிழ் மாணவர்களின் கல்விநிலையில் முன்னேற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் எதற்காக மாணவர்களின் கல்வி, பாடசாலைச் செயற்பாடுகளில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது தொடர்பாக எமக்கு மிகத் தெளிவான நோக்கம் இருக்க வேண்டும். ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசிலாக இருக்கட்டும், சாதாரண தரப் பரீட்சையாக இருக்கட்டும் எமது நோக்கம் நாடளாவிய ரீதியில் முதலிடத்தை பிடிப்பதும் அதனைத் தக்க வைப்பதுமாக மட்டுமாக இருந்துவிடக் கூடாது.

அதற்கும் அப்பால், எமது மாணவர்களை தமிழ் சமூகத்தைக் கட்டியெழுப்புபவர்களாக, சமூகப் பொறுப்புள்ளவர்களாக எவ்வாறு வளர்க்கப்போகிறோம் என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் முகக் கொடுக்கும் பிரச்சனைகளை சரியாக இனங் காண வேண்டும். இனங் காணப்பட கல்வி தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு காண்பதானால் பல விடயங்கள் கருத்தில் கொள்ளப்படவேண்டும். முதலில் அடிப்படைப் பிரச்சனைகள் மற்றும் காரணிகள் சரியாகக் கண்டறியப்பட வேண்டும்.

 

அவற்றுக்கான சரியான அணுகுமுறைகளும் பின்பற்றப்படவேண்டும். எமது சமூகத்தைக் கல்விச் சமூகமாக மீண்டும் கட்டி எழுப்புவதற்கு மாணவர், பெற்றோர், அவர்கள் வாழும் சமூகம், ஆசிரியர்கள், அதிபர்கள், பாடசாலை பழைய மாணவர்கள் சங்கங்கள், வெளிநாட்டுத் தமிழர்கள் மத்தியில் செயற்படும் உதவி அமைப்புக்கள் அனைத்தும் சேர்ந்து பணியாற்ற வேண்டியது அவசியமாகும்.

இனி இன்றைய சூழலில் கல்வி தொடர்பான சில சவால்கள் சிலவற்றைப்  பார்ப்போம்.

 

கல்வித் துறையில் இன்று காணப்படும் சவால்கள்

எமது சமூகத்தில் நாம் அதிக அக்கறை செலுத்த வேண்டிய பிரிவாக இருப்பது ஆரம்பப் பிரிவுதான். இப்போதும் பல ஆசிரியர்களும் பெற்றோரும் ஆரம்பக் கல்வியில் அக்கறை செலுத்துகிறார்கள்தான். ஆனால் அது வேறு வகையான அக்கறை – ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் வலயத்தில், மாவட்டத்தில், மாகாணத்தில், நாட்டில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்ற வெறித்தனத்தோடு கூடிய அக்கறை.

 

இன்று காணப்படும் தீவிரம் சில தசாப்தங்களுக்கு முன்னர் அன்றைய பெற்றோர் மத்தியிலும் ஆசிரியர் மத்தியிலும் இருந்திருக்கவில்லை. அக்காலப் பகுதிகளில், பொதுவாக நான்காம் தரத்தில் பிள்ளை படிக்கும்போதுதான் பெற்றோரும் ஆசிரியர்களும் பரபரப்பாகவும் பதட்டத்தோடும் பிள்ளைகளை பரீட்சைக்குத் தயார் செய்யத் தொடங்குவார்கள். அதுவே படிப்படியாக தரம் மூன்று, தரம் இரண்டு என்று மாறி பின்னர் முதலாம் வகுப்பிலிருந்தே பிள்ளைகளை ஐந்தாம் வகுப்புப் பரீட்சைக்கு தயார் செய்யும் பழக்கம் ஏற்பட்டு விட்டது. இன்று அதுவும் எல்லை மீறிப்போய் முன்பள்ளியில் இருந்தே பிள்ளைகளை ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைக்குத் தயார் செய்யக் கூடிய மனநிலையில்தான் பல பெற்றோர் இருக்கிறார்கள்.

 

புலமைப் பரிசிலில் முதலிடம் என்ற போதையின் தாக்கத்தினால் முன்பள்ளியில் இருந்தே பிள்ளைகளுக்கு “எண்”ணையும் “எழுத்தை”யும் திணித்துத் திணித்துத்  திணறடிப்பதைத்தான் இன்றைய பெற்றோரும்  ஆசிரியர்களும் செய்து கொண்டிருக்கிறார்கள். மறுபுறத்தில் “அடியாத மாடு படியாது” என்று இன்றும் மாணவர்களை அடித்து படிப்பித்தால் மட்டுமே மாணவர்கள் நன்றாகப் படிப்பார்கள் என்று நம்பும் பல ஆசிரியர்களும் பெற்றோர்களும் நம்மத்தியில் இன்றும் உலவிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சில பாடசாலைகளில், ஆசிரியர்கள் சரியாக இருந்தாலும் அவர்கள் மீது பெற்றோர் கொடுக்கும் அழுத்தம் அதீதமானது.

 

மகிழ்ச்சிகரமான கற்றல்

2000 ம் ஆண்டின் பின்னர் நாடளாவிய வகையில் மகிழ்ச்சிகரமான கற்றல் என்ற கருப்பொருள் ஆரம்பப் பாடசாலைகளில் அறிமுகம் செய்யப்பட்டது. பிரம்படி, உடல்ரீதியான தண்டனைகளை வகுப்பறைகளில் இருந்து நீக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. மாணவர் விருப்பத்தோடு கல்வி கற்கும் சூழலை உருவாக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. வகுப்பறைகள், பாடசாலைச் சூழல் என்பன அழகுபடுத்தப்பட்டன. வகுப்பறையின் உள்ளே, நீர்மூலை, விளையாட்டு மூலை போன்றவை உருவாக்கப்பட்டன. பிள்ளைகளின் ஆக்கங்களைக் கொண்டு வகுப்பறைகள் அலங்கரிக்கப்பட்டன. பிள்ளைகளுக்கு அன்பாக கல்வி கற்பிக்க ஆசியர்களுக்கு விசேட பயிற்சிகளும் வழங்கப்பட்டன. ஆனால் இருபது ஆண்டுகள் ஆகியும் இன்னமும் வடக்குக் கிழக்கில் கற்பித்தல் முறையிலும் சரி, பெற்றோர் மனநிலையிலும் சரி பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டதாகத் தெரியவில்லை.


 


தவறு எங்கே நடைபெறுகிறது?

இது ஒருபுறம் இருக்க, வடக்குக் கிழக்கில் பெற்றோரும் ஆசிரியரும் எது சிறந்த முறையென்று எண்ணி இத்தனை நாட்களும் பின்பற்றியது மட்டுமில்லாது, இனியும் தொடர நினைக்கிறார்களோ அந்த முறையாவது வெற்றியளித்ததா? “ஆம்” என்றால்  எப்படித் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் ஐந்தாம் ஆண்டுப் புலமை பரிசிலில் சராசரியாக 15 – 25% மாணவர்கள் இரண்டு பாடத்திலும் எழுபது புள்ளிகளுக்கு மேல் ஏன் எடுக்க முடியாதுள்ளது? இன்னொரு வகையில் சொல்வதென்றால், ஏன் சித்தி பெறத் தவறுகிறார்கள்? தரம் ஒன்றிலிருந்து ஐந்துவரை கற்பிக்கும் தமிழும் கணிதமும் ஒன்றும் கடினமான, சிக்கலான பாட அலகுகள் இல்லையென்பது அனைவரும் அறிந்ததே. அப்படியானால் தவறு எங்கே நடைபெறுகிறது?

மாணவரை சக மாணவரே அவமானப்படுத்தும் வகையில் கேலி (Bully) செய்வதைத் தகாத செயலாகக் கருதும் இன்றைய யுகத்தில் ஆசிரியர்களே மாணவர்களை அவர்களின் புறத்தோற்றம், கல்வியில் பின்னடைவு, பரீட்சைப் பெறுபேறுகள்  என்பவற்றைச் சுட்டிக்காட்டி ஏனைய மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்துவது இன்றும் தொடர்கிறது. இவ்வாறு ஆசிரியர்களாலும் பாடசாலைகளாலும் அவமானப்படுத்தப்பட்டு கல்வியே வேண்டாம் என்று பாடசாலைக் கல்வியை எத்தனையோ மாணவர்கள் இடைநிறுத்தி விடுகிறார்கள். இந்தப் பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு?

 

மாணவர் இடைவிலகல்

கடந்த காலங்களில் எழுமாற்றாக சில பாடசாலைகளில் கல்வியிலாளர்கள் ஆய்வு செய்தபோது, பல பாடசாலைகளில் ஏழாம், எட்டாம் தர மாணவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானவர்கள் தரம் ஐந்துக்குரிய தமிழ் பாடநூலையே சரளமாக வாசிக்க முடியாதிருந்தனர் என்று தெரிய வந்துள்ளது. அப்படியானால் அந்த மாணவர்கள் ஏன் போதுமான வழிகாட்டல்களையும் கற்றலுக்கான சந்தர்ப்பத்தையும் பெற முடியாது போனது? சகலருக்கும் இலவசக் கல்வி நீண்ட காலமாக இலங்கையில் வழங்கப்பட்டு வந்தாலும் ஒரு வகுப்பில் முப்பது பிள்ளைகள் இருந்தால் அந்த முப்பது பிள்ளைகளிலும் ஏன் ஒரு ஆசிரியரால் கவனமெடுத்துக் கற்பிக்க முடியாது போகிறது?

 

சில ஆசிரியர்கள், நன்றாகப் படிக்கும் பிள்ளைகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் கல்வியில் பின்தங்கிய மாணவர்களை முற்றாக புறக்கணித்து நடப்பதாகவும் எழும் குற்றச்சாட்டுக்குப் பாடசாலைகளின் பதில் என்ன? பிரபலமான பாடசாலைகள் தமது செல்வாக்கைப்  பயன்படுத்தி சிறந்த ஆசிரியர்களை தமது பாடசாலைக்குள் உள்ளீர்த்துக் கொள்கிறார்கள். இதுவும் நகர்புற, கிராமப் பாடசாலைகள் திறமையான ஆசிரியர்களைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்தி விடுகிறது என்ற முறைப்பாட்டைப் புறந் தள்ள முடியுமா?

 

வருடாந்தாம் முழு நாட்டிலும் சராசரியாக 15,000 க்கும் மேற்பட்ட எண்ணிக்கையான மாணவர்கள் தரம் ஐந்திலிருந்து தரம் பத்துக்குள் பாடசாலைகளிலிருந்து இடைவிலகுகிறார்கள். 2019 ம் ஆண்டு க.பொ. த. சாதாரண தரம் எழுதிய மாணவர்களின் வயதினரான 969 மாணவர்கள் வடமாகாணத்திலும் 3,600 மாணவர்கள் கிழக்கு மாகாணத்திலும் இடைவிலகியுள்ளனர்.இந்த இரண்டு மாகாணத்திலிருந்து இடைவிலகியவர்களின் எண்ணிக்கை, இலங்கையில் மொத்தமாக இடைவிலகியவர்களின் எண்ணிக்கையில் 27% என்பது குறிப்பிடத்தக்கது.  இவர்கள் இடை விலகுவதற்கு அவர்களின் குடும்ப, பொருளாதார சூழல் என்பன சாத்தியமான காரணங்களாக இருக்கக்கூடிய அதே வேளையில் பாடசாலையின், குறிப்பாக ஆசிரியர், அதிபர்களின் செயற்பாடுகளும் ஒரு முக்கிய காரணம் என்பதை யாரும் மறுத்துவிட முடியுமா?.

 

பொதுப் பரீட்சையில் தகுதி பெறத் தவறுதல்

இலங்கையில் கல்வியை மதிப்பீடு செய்யும் இன்னுமொரு அளவீடாகவும் பாடசாலைகளுக்கு பெருமைதரும் ஒன்றாகவும் இருக்கும் க.பொ. த. சாதாரண தர பெறுபேறுகளை எடுத்துக் கொண்டால், சராசரியாக 7,000 மாணவர்களை எந்த ஒரு பாடத்திலும் சித்திபெறத் தவறி விடுகிறார்கள். அதேநேரம் ஒவ்வொரு வருடமும் மொத்தமாக 75,000 – 80,000 மாணவர்கள் உயர்தரம் கற்கும் தகுதி பெறத் தவறுகிறார்கள். கடந்த பல வருடங்களாக இதுதான் இலங்கையின் கல்வியின் நிலை.

 

ஆக மொத்தத்தில், எப்படியாவது பிரபல பாடசாலைகளின் பெறுபேறுகளை உயர்மட்டத்தில் தக்க வைத்தல், நாடாளாவிய ரீதியில் மீண்டும் யாழ் மாவட்டத்தை உச்சத்தில் வைத்தல், மாகாண ரீதியாக  முதலிடத்தைப் பிடித்தல் போன்ற பெறுபேறு சார்ந்த இலக்கினை நோக்கியே தரம் ஒன்றில் இருந்தே குதிரையோட்ட கலாச்சாரத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம். இதனால் ஒவ்வொரு ஆண்டும் மெதுவாக கற்கும் மாணவர்கள், விசேட தேவையுள்ள மாணவர்கள், பின்தங்கிய பிரதேச மாணவர்கள், கடினமான குடும்பச் சூழலில் வாழும் மாணவர்கள் போன்றவர்களில் போதிய கவனம் செலுத்தத் தவறி விடுகிறோம். இதனால் வருடாந்தம் ஆயிரக்கணக்கான மாணவர்களை பாடசாலைக்கு வெளியே விரட்டிக் கொண்டிருக்கிறோம்.

 

கல்வி விடயத்தில் மூலோபாய/ங்களில் மாற்றம்

இந்த சூழ்நிலையில் இணையவழிக் கல்வி மூலமோ, கடந்த கால பரீட்சை வினாவிடைகளை அச்சிட்டுக் கொடுப்பதன் மூலமோ தொடர்ந்தும் பிரச்சனையாக உள்ள விளிம்புநிலை மாணவர்களுக்குரிய தீர்வு கிடைத்துவிடாது. இவையிரண்டும் படிக்கக் கூடிய மாணவர்களுக்கு குறைநிரப்பியாகவே பயன்படும். உடையவன் பாரா வேலை ஒரு முழம் கட்டை என்று ஊரில் சொல்லுவார்கள். அதுபோலவே கல்வி விடயத்தில் உடையவர்களான பெற்றோர், ஆசிரியர்களின் மனமாற்றமும் உதவி நிறுவனங்களின் மூலோபாயங்களில் உடனடி மாற்றமும் அவசியமானதாகும்.

 

ஆரம்பப் பிரிவு

ஆரம்பப் பிரிவு என்பது ஒரு தனது வீட்டுச் சூழலில் வாழ்ந்த குழந்தை தனது வீட்டுச் சூழலில் இருந்து முற்றிலும் மாறுப்பட்ட இன்னொரு சூழலுக்கு அறிமுகமாகும் நிலையாகும். இந்த நிலையில்தான் ஒரு பிள்ளை முறைசார் கல்வியிலும் பாடசாலை செல்வதில் விருப்பத்தினை  உருவாக்கிக் கொள்ளும் பருவம். அல்லது வெறுப்பினை ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய பருவம் என்றும் சொல்லலாம்.

 

இந்த வயதில்தான் பிள்ளைகள் தமது சூழலில் இருந்து அதிகம் கற்றுக் கொள்கிறார்கள். குழுவாகவும் தனியாகவும் தொழிற்படப் பழகுகிறார்கள். சமூகத்தில் தமது வகிபங்கு என்ன என்பதையும் கற்றுக் கொள்ளும் பருவமும் இதுதான். அதனால் இந்தப் பருவத்தில் மாணவர்கள் கணிதத் திறமையும் தமிழ் அறிவும் மட்டுமின்றி நற்பண்பு கொண்டவர்களாகவும் சமூகப் பொறுப்புள்ளவர்களாகவும் உருவாக்குவதும் பெற்றோரினதும் ஆசிரியர்களினதும் பொறுப்பாகிறது.

இவற்றை மனதில் கொண்டு, இனிவரும் நாட்களில் சமூகப் பொறுப்புடன் கூடிய மாணவர் அறிவு விருத்தி தொடர்பாக நாம் என்ன செய்ய முடியும் என்று பார்க்கலாம்.

§  ஆசிரியர் தனது வகுப்பில் உள்ள பிள்ளைகள் மேல் அன்பு பாராட்டுபவராகவும் அதேநேரம் கண்டிப்பானவராக இருக்கலாம், ஆனால் தண்டிப்பவராக இருக்கக் கூடாது.

§  வகுப்பறைகளை, பிள்ளைகளுக்கான வகுப்பறைகளாக தொடர்ந்து பேண வேண்டும். வகுப்பை அழகுபடுத்துவதில் பிள்ளைகளுக்கும் பொறுப்பு வழங்க வேண்டும்.

§  ஆரம்பப் பிரிவில் கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் சிறுவர் உளவியல் தொடர்பான அறிவும் அடிப்படை உள ஆற்றுப்படுத்தல் பயிற்சியும் பெற்றவராக இருத்தல் வேண்டும்.

§  மாணவர்கள் அனைவரையும் விளையாட்டுச் செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டும். குறிப்பாக அணியாக விளையாடும் விளையாட்டுகளில் மாணவர்கள் ஈடுபட ஊக்குவித்தல் வேண்டும்.

§  வகுப்பில் விசேட தேவையுள்ள மாணவர்களையும் மெதுவாகக் கற்கும் மாணவர்களையும் இனம் கண்டு அவர்கள் மேல் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.

§  மாணவர்கள் மத்தியிலிருந்து ஒவ்வொரு மாதமும் சிறந்த மனிதப் பண்புகளை வெளிப்படுத்தும் பிள்ளைகளுக்கு பாராட்டி சான்றிதழ்கள் வழங்கலாம். உதாரணமாக, குழுவாக இயங்குதல், மற்றவருக்கு உதவுதல் போன்றன.

§  இந்தப் பருவத்திலேயே பாடசாலைக் கல்விக்குப் புறம்பாக பிள்ளைகளுக்காக பிற செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டும். அண்மைக் காலங்களில் பல கல்வியியலாளர்கள் கூறுவது போல நன்னெறிக் கற்கைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

§  இன்று பெரிதும் பேசப்படும் வீட்டுத் தோட்டம், சுயர் சார்பு பொருளாதாரம் என்பவற்றுக்கான அத்திவாரத்தை இந்த ஆரம்பப் பிரிவுகளிலேயே இட முடியும். 2000 -2002 காலப் பகுதியில் திருகோணமலையில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வெற்றியளித்த ஒரு செயல்முறைதான் “பாடசாலையிலிருந்து வீட்டுத் தோட்டத்திற்கு” என்ற திட்டம். இதனை ஏனைய பாடசாலைகளும் நடைமுறைப்படுத்த முடியும். பாடசாலையில் நாற்றுமேடைகள் அமைத்து பின்னர் பிள்ளைகளை அவர்கள் நட்டு வளர்த்த நாற்றுகளை தமது வீடுகளுக்கு கொண்டு சென்று நட்டு வளர்க்க ஊக்கப்படுத்துவதன் மூலம் பிள்ளைகள் மத்தியில் வீட்டுத் தோட்டம் மீதான ஆர்வத்தையும் வளர்க்க முடியும்.

§  ஒவ்வொரு வருடமும் சிறந்த ஆசிரியர் தெரிவு செய்யப்பட்டு பாடசாலைப் பொதுக் கூட்டத்திலேயோ பாடசாலை நிகழ்விலோ கௌரவிப்பது மற்றைய ஆசிரியர்களையும் ஊக்குவிக்கும்.

 


ஆறிலிருந்து உயர்தரம் வரை

இலங்கையில் உள்ள பாடசாலைகளில் பொவாகவே திறமையுள்ள மாணவர்கள், ஆர்வமுள்ள மாணவர்களே விளையாட்டுச் செயற்பாடுகளில் ஈடுபடுவதும் அதற்குப் பொறுப்பான ஆசிரியர்கள் அவர்கள் மீதே கவனம் செலுத்துவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயமே. அவ்வாறு இல்லாமல் வகுப்பில் உள்ள மாணவர்கள் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விளையாட்டுச் செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும். இது அவர்களின் ஆரோக்கியத்திற்கு மட்டுமன்றி கல்விச் செயற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்தவும் உதவி புரியும்.

 

பொதுவாக தரம் ஐந்திலிருந்து பதினொன்றுக்கு இடைப்பட்ட காலத்தில்தான் மாணவர்கள் கல்வியை இடை நிறுத்துகிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  மாணவர்கள் இடைவிலகுவதற்கு மாணவர்களின் பொருளாதாரச் சூழல் ஒரு காரணமாக இருந்தபோதிலும் மாணவர்களின் குடும்பச் சூழல், பாடசாலையில் மாணவர் முகம் கொடுக்கும் சிரமங்களும் அவர்கள் கல்வியை இடை நிறுத்துவதற்கு காரணங்கள் என்று சொல்லலாம்.

 

குடும்பப் பொருளாதார சூழ்நிலை காரணமாக  வீட்டில் உள்ள கடமைகளை முடித்து நேரம் பிந்திப் பாடசாலைக்கு வரும் மாணவர்கள் காரணமே கேட்காது தண்டிப்பதும் வார்த்தைகளால் வதைப்பதும் பரவலாக நடைபெறும் ஒரு விடயமே. இதனாலேயே பல மாணவர்கள் இத்தனை அவமானத்தோடு பாடசாலைக்குச் செல்லத்தான் வேண்டுமா என்று வெறுப்புற்று கல்வியை இடைநிறுத்தி விடுகிறார்கள்.  ஒழுக்கம், நேரம் தவறாமையை கடுமையாக நடைமுறைப்படுத்த முனையும் ஆசிரியர்களும் அதிபர்களும் மாணவர்கள் நேரம் பிந்தி வருவதற்கான காரணத்தையும் அறிய முயற்சிப்பதோடு மாணவர்களின் சுயகௌரவம் பாதிக்கப்படாத வகையில்  நடாத்துவார்கள் என்றால் அதுவே மாணவர்களுக்கு ஒரு பாடசாலை நிர்வாகம் செய்யும் பெரிய உதவியாகும்.

 

அதேபோல ஒரு ஆசிரியர் தனது வகுப்பில் உள்ள மாணவர்கள் ஒவ்வொருவரும், எதிர்பார்க்கப்படும் குறைந்த அடைவு மட்டத்திற்கு மேல் பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்துவது தனது பொறுப்பு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தனது வகுப்பில் ஒரு மாணவன் மாவட்டத்தில் முதலிடம் பெற்றமைக்காக ஒரு ஆசிரியர், அவன் தனது மாணவன் என்று பெருமை கொள்வாராக இருந்தால், அதே வகுப்பில் அதே பாடத்தில் இரண்டு மாணவர்கள் மிகக் குறைந்த புள்ளிகள் பெற்றமைக்கும் அவர்தானே பொறுப்பேற்க வேண்டியவராகிறார்?

 

உண்மையில் நன்றாகப் படிக்கும் மாணவரைவிட குறைந்த புள்ளிகளைப் பெறும் மாணவர்கள் மீதுதான் ஆசிரியர்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். சிறிய வகுப்பிலிருந்தே மாணவர்களின் பெறுபேறுகள் அடிப்படையில் குறைந்த புள்ளிகள் பெறும் மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் செயற்பாடுகளை ஒவ்வொரு ஆசிரியரும் முன்னேடுப்பார்களாக இருந்தால் சாதாரண தரப் பரீட்சையில் மிக அதிகமான மாணவர்களை சித்தியடையச் செய்ய முடியும். ஆனால் இதற்கு ஒவ்வொரு ஆசிரியரின் அர்ப்பணிப்புடன் செயற்பட முன்வர வேண்டும்.

இவ்வாறான பொறுப்புக் கூறல் தொடர்பான விடயங்கள் ஒருபுறம் இருக்க, மாணவர்களை தயார்படுத்துதல் தொடர்பாக வேறு பல விடயங்களிலும் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

 

ஒவ்வொரு வருடமும் இலங்கையில் 270,000 – 300,000 பேர் க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றுகிறார்கள். அவர்களுள் 5,000 – 8,000 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் A சித்தி பெறும் அதேநேரம் 5,000 – 10,000 வரையான மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் சித்தி பெறத் தவறிவிடுகிறார்கள். அவ்வாறு அனைத்துப் பாடங்களிலும் சித்தி பெறாதவர்களையும் சேர்த்து 70,000 – 100,000 வரையான மாணவர்கள் உயர்தரம் கற்கும்  தகுதியற்றவர்களாகிறார்கள். ஆனால் பாடசாலைகளும் ஊடகங்களும் அந்த இரண்டு வீதமான (5,000 – 8,000) மாணவரின் வெற்றியைத்தான் தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள்.  அதன் பத்து மடங்கு எண்ணிகையிலான மாணவர்களின் எதிர்காலத்தைப்பற்றி போதுமான அக்கறையை வெளிக்காட்டுவதில்லை என்றே கூறலாம்.

 

இதேபோல உயர்தர பரீட்சையைப் பொறுத்தவரை ஒவ்வொரு வருடமும் 250,000 – 280,000 க.பொ.த. உயர்தர பரீட்சைக்குத் தோற்றுகிறார்கள். அவர்களுள் 5,000 – 6,000 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் A சித்தி பெறும் அதேநேரம் அந்த எண்ணிக்கையின் நான்கு மடங்கான (20,000 – 25,000) மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் சித்தி பெறத் தவறிவிடுகிறார்கள்.

பரீட்சைக்குத் தோற்றுவோரில் மொத்தமாக 150,000 – 160,000 வரையான மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் பல்கலைக் கழகம் செல்லத் தகுதி பெற்றாலும் அவர்களுள் 20  வீதத்துக்குக் குறைவானவர்களே தேசியப் பல்கலைக் கழகங்களுக்குள் (இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ்) உள்வாங்கப்படுகின்றனர். இன்னொரு விதத்தில் சொன்னால், ஒவ்வொரு வருடமும் பரீட்சை எழுதும் மொத்த எண்ணிக்கையில் பத்து வீதமானவர்கள் மட்டுமே பல்கலைக்கழக அனுமதி பெறுகிறார்கள்.

 

இந்த இரண்டு பொதுப் பரீட்சைகள் தொடர்பான முழுமையான தரவுகளையும் நன்றாக ஆராயும்போது உங்களுக்கே பெரிய ஒரு உண்மை வெளிப்படையாகத் தெரியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நாம் உண்மையில் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய மாணவர்கள் மீதான கவனத்தை விட மிகச் சொற்பமான (மொத்த மாணவர்கள்  (5 – 10%) மீதுதான் அதிக கவனம் செலுத்துகிறோம் என்பதுதான் அந்த கசப்பான உண்மை. ஏனெனில் எமது கல்விக்  கட்டமைப்பைப் பொறுத்தவரை அவர்கள்தான் பிரபல பாடசாலைகளைத் தொடர்ந்தும் பிரபலமாக வைத்திருக்கப் போகிறார்கள். கிடைக்கும் வளங்களை முறையாகப் பயன்படுத்தி அனைத்து மாணவர்களையும் தமது கல்விப் பாதையின் ஒவ்வொரு மைல்கல்லையும் தாண்டச் செய்வதைவிட  5 – 10% மாணவர்கள் மீது மட்டும் முழு வளங்களையும் குவித்து நாடளாவிய ரீதியில் முதலிடங்களைப் பெற்றால் போதுமென்ற நிலையில்தான் பல பாடசாலைகளும் பல கல்வியாளர்களும் இயங்குகிறார்கள் என்பது உண்மையில் கவலைக்குரியது.

 

கற்பித்தலும் வழிகாட்டலும்

தரம் ஆறிலிருந்து உயர்தரம் வரையான பாடசாலைக் காலமே மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் காலமாக விளங்குகிறது. மாணவர்கள் எதிர்காலத்தில் தாம் எந்தத் துறையில் ஈடுபடப் போகிறோம் என்பதைத் தீர்மானிக்கும் பருவமாகவும் தமது எண்ணங்கள், ஆர்வங்களைப் பரீட்சித்துப் பார்க்கும் பருவமாகவும் இது விளங்குகிறது.

 

இந்த வயதில்தான் ஆசிரியர்கள் கற்பிப்பவர்களாக மட்டுமல்லாது மாணவர்களுக்கு ஆலோசகர்களாகவும் வழிகாட்டிகளாகவும் இருக்க வேண்டிய காலமாகும். இன்று பல பாடசாலைகளில் கல்வி வழிகாட்டிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் தொழிற்பாடு சாதாரண தர பரீட்சையின் பின்னரான தொழில்நுட்பக் கல்வி, முறைசாராக் கல்வி தொடர்பான வழிகாட்டல் என்ற விடயத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதைவிட மாணவர்களுக்கு உளவள ஆலோசனை, மாணவர்களின் விசேட திறமைகளை இனங் கண்டு அவற்றை ஊக்குவிப்பதற்கான கட்டமைப்புகள் கற்கை ஏற்பாடுகள் செய்வதற்கான செயற்பாடுகள் அவசியமானவையாகும்.

 

நாம் முன்பு குறிப்பட்டதுபோல பாடசாலையில் கற்கும் மாணவர்கள் அனைவருமே இலங்கைப் பல்கலைக் கழகங்களில் கற்று வைத்தியராகவோ, பொறியியலாளராகவோ, கணக்காளராகவோ, சட்டத்தரணியாகவோ ஆகிவிட முடியாது. பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் தமக்கான வேறு வேறு துறைகளைத் தெரிவு செய்ய வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அதற்காக தனியார், திறந்த பல்கலைக் கழகம் போன்றவற்றையே நாடவேண்டியுள்ளது. அதற்கான வழிகாட்டல்கள், சந்தர்ப்பங்கள், வளங்கள், வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது கல்விச் சமூகத்தினதும் பெற்றோரினதும் பொறுப்பாகிறது. அத்துடன் கல்வித்துறையில் ஈடுபாடு காட்டும் உள்ளூர், வெளியூர் அமைப்புகளும் ஆற்றக்கூடிய பங்கு கணிசமானது.

 

பின்வரும் விடயங்கள், எண்ணக்கருக்கள்  மேலே கூறப்பட்ட பல பிரச்சனைகளுக்கு ஓரளவுக்கேனும் தீர்வுகளைத் தரக்கூடும் என்பது எமது அபிப்பிராயம்.

§  ஆறாம் வகுப்பிலிருந்தே ஐம்பதுக்குக் குறைவான புள்ளிகளைப் பெறும் மாணவர்கள் இனங் காணப்பட்டு அவர்களுக்கு விசேட வகுப்புகள் ஒழுங்கு செய்யப்பட வேண்டும். இவ்வாறான மாணவர்களின் பெற்றோர் கிரமமாக ஆசிரியரைச் சந்தித்து தமது பிள்ளைகளின் முன்னேற்றம் குறித்து தொடர்ச்சியாக கலந்துரையாடும் பழக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

§  பாடசாலைகளில் வகுப்பறைக் கல்விக்கு அப்பால் பிற கற்றல் செயற்பாடுகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும். மாணவர்களிடையே தலைமைத்துவம், திறன் வளர்ச்சிகளை அதிகரிக்கும் வகையில் மாணவர் கழகங்கள் உருவாக்கப்பட்டு முறையாக இயங்க பாடசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

§  பாடசாலை அபிவிருத்தி வேலைகள், சிரமதான செயற்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும். பழைய மாணவர் சங்கங்களிடமிருந்து நிதி கோரும் சந்தர்ப்பங்களில் மாணவர் தலைவர்களையும் அந்த வேலைத்திட்ட வரைபுகளை எழுதுவதில் ஈடுபடுத்தலாம்.

§  முறைசாராக் கல்வியூடாக மாணவர்கள் தமது வேலைத் தகுதியை அதிகரிக்க முடியும் என்பதை பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் அறிவுறுத்துவதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

§  கல்விசார், கல்விசாரா சுற்றுலாக்களை ஒழுங்கு செய்தல். மாணவர்கள் தமது வகுப்பறையில் கற்பதற்கு மேலதிகமாக இவ்வாறான சுற்றுலாக்கள் மாணவர்கள் பாடசாலைக்கு வெளியே உள்ள உலகத்தைப் பற்றி அறியவும், வெவ்வேறு காலாசாரம், இயற்கைச் சூழல்கள், புவியியல், வேறுபட்ட மக்களின் வாழ்வியல் போன்ற விடயங்களைக் கற்றுக்கொள்ள உதவுவதாக அமையும்.  

§  பாடசாலை மட்டங்களில் மாணவர்களுக்கு உளவள ஆலோசனை வழங்க தகுதி வாய்ந்த உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டும். அல்லது அந்தந்த மாவட்டங்களில் உளவள சேவை செய்யும் நிறுவனங்களுடன் இணைந்து அவர்களின் சேவையைப் பெற்றுக் கொள்வதும் இன்னொரு வழியாகும்.

§  இடைவிலகிய மாணவர்களை மீண்டும் உள்வாங்கும் பொறிமுறைகளை எமது கல்வி இயந்திரம் கண்டறிந்து நடைமுறைப்படுத்த வேண்டும். அந்த மாணவர்கள் குடும்ப வருமானத்திற்காக கட்டாயம் பகுதிநேரமாக வேலை செய்ய வேண்டியவர்களாக இருப்பார்களாயின் அதற்கு ஏற்ற வகையில் கல்வி கற்கும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.

§  கிராம மட்டங்களில் கூட்டுக் கற்றல் செயற்பாடுகள் (Combine Study) படிப்பகங்கள் போன்றனவற்றை ஊக்குவிப்பதன் மூலமும் மாணவர்கள் கற்பதற்கான சந்தர்ப்பத்தை அதிகரிக்க முடியும்.

§  பிரபல பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்கள் தமது பாடசாலைகளுக்கு உதவுவதற்கு மேலதிகமாக பின்தங்கிய பிரதேசப் பாடசாலைகளைத் தத்தெடுக்க முன்வர வேண்டும். இதன் மூலம் பின்தங்கிய பிரதேசப் பாடசாலைகளின் பௌதீக வளங்களை அதிகரித்து மாணவர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.

§  இன்றும் பல மாணவர்கள் தமக்குத் தேவையான காலணிகள், அடிப்படை உபகரணங்களை வாங்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அமைப்புகளும் தனிநபர்களும் இவ்வாறான மாணவர்களுக்கு அவ்வப்போது உதவி செய்கிறார்கள். ஆனால் இதனை மேலும் முறைபடுத்தி தேவைப்படும் அனைத்து மாணவர்களுக்கும் உதவும் வகையிலான கட்டமைப்பை உருவாக்க முடியுமாயின் அது சிறந்த பலனைக் கொடுக்கும்.

§  குடும்பங்களின் குறைந்த வருமானம் காரணமாக பாடசாலைக் கல்வியைத் தொடர்வதில் சிரமங்களை எதிர்நோக்கும் மாணவர்களின் குடும்பங்களுக்கு வேறு உதவி வழங்கும் நிறுவனங்களூடாக நிரந்தர வருமானம் ஏற்படுவதற்கு வழிவகைகள் ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் அந்த மாணவர்கள் கல்வியைத் தொடர உதவ முடியும்.

 

நாம் மேலே குறிப்பிட்ட விடயங்கள் ஒன்றும் புதிய ஆலோசனைகள் அல்ல. இவற்றுள் பல, ஏற்கனவே அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பாடசாலைகளில் தன் முனைப்புள்ள சில ஆசிரியர்களும் அதிபர்களும் நடைமுறைப்படுத்தும் விடயங்கள்தான். இவற்றுள் பல விடயங்களை எந்தவித மேலதிக வளத்தேவையும் இன்றியே பாடசாலை நிர்வாகமும் ஆசிரியர்களும் பெற்றோர் சமூகமும் இணைந்து செய்துவிட முடியும். நிதி மற்றும் ஏனைய வளங்கள் தேவைப்படும் விடயங்களை கல்வி தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபடும் தொண்டு நிறுவனங்களோ பழைய மாணவர் சமூகங்களோ, பாடசாலையுடன் இணைந்து நடைமுறைப்படுத்த முடியும்.



  அடி சறுக்கும் அனுர?   தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கில் பெரும் வெற்றியைப் பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்திரு...