தேங்காய் எண்ணெயும் இரு கோடுகளும்
ஒரு தாளில் உள்ள ஒரு கோட்டை அழிக்காமல் சிறியதாக்குவது
எப்படி? இதற்கு விடை உங்களில் பலருக்கு தெரியும் என்று நான் நம்புகிறேன்.
இன்றைய அரசியல் சூழலிலும் இந்த இருகோடுகள் தத்துவம் பல நாடுகளில் வெற்றிகரமாக
பின்பற்றப்படுகிறது. சரி, தேங்காய் எண்ணெய்க்கும் இந்த இரண்டு கோடுகளுக்கும் என்ன
தொடர்பு? இந்தக் கட்டுரையின் இறுதியில் உங்களுக்கே புரியும் !
கடந்த ஒரு வாரமாக அரசியல்வாதிகள் மட்டத்திலும்
மக்கள் மத்தியிலும் முக்கிய பேசுபொருளாகி இருப்பது இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய்
எண்ணெய்க்குள் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் கலந்திருப்பதாக எழுந்த
குற்றச்சாட்டும் அதன் பின்னரான வாதப் பிரதிவாதங்களும் ஆய்வுகூட அறிக்கைகளும் அவை தொடர்பாக பல்வேறு அமைச்சர்கள்,
அதிகாரிகளின் முன்னுக்குப் பின்னான அறிக்கைகளுமே.
அஞ்சுதல் அஞ்சாமை பேதைமை என்ற வள்ளுவன் வாக்கு
என்றும் உண்மையானதே.
இந்த நச்சுத்தொற்று விடயத்திலும் நாங்கள் அஞ்ச
வேண்டியதற்கு அஞ்சுவது சரியானதே. ஆனால் இந்தக் இரண்டு வார காலப்பகுதியில் தேங்காய்
எண்ணெய் விவகாரம் கையாளப்படும் விதம் பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது.
முதலில் இந்த எண்ணெய் விவகாரத்தில் சொல்லப்படும்
இரசாயனக் கலப்பு பற்றி சுருக்கமாகப் பார்ப்போம். Aspergillus என்ற பூஞ்சணம் (Fungi) தேங்காய்
கொப்பறாவில் வளரும்போது அது aflatoxin என்ற சுரப்பை வெளியேற்றுகிறது.கொப்பறாவில்
வளரும் பூஞ்சனத்தின் வகையைப் பொறுத்து B1, B2, G1 & G2 என நான்குவகையான aflatoxins இருப்பதாக விடய ஞானமுள்ளவர்கள் கூறுகிறார்கள்.
இந்த aflatoxins கொப்பறாவில் இருந்து எண்ணெய்
தயாரிக்கும்போது அழிவடையாது எண்ணெய்க்குள்ளும் போய்விடுகிறது.
குறித்த பங்கசினால் சுரக்கப்படும் இந்த நச்சுப் பதார்த்தம் நாம் தேங்காய்
எண்ணெய்யை உணவுடன் பயன்படுத்தும்போது எமது
உடலுக்குள் சென்று எமது ஈரலை பாதிக்கக்கூடியதாக இருக்கிறது. இந்தப் சுரப்பு ஒரு
carcinogenic பதார்த்தமாகும். அதாவது இது எமது உடலில் கான்சரை ஏற்படுத்தக்கூடியது.
ஆனால் இவ்வாறு aflatoxin உள்ள எண்ணெயை ஓரிரு
தடவைகள் மட்டும் உட்கொள்வதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுவிடாது. ஆனால் தொடர்ந்து
பயன்படுத்தும்போது எமது ஈரலைப் பாதித்து ஈரல் அழற்சி, மஞ்சள் காமாலை, அல்லது ஈரல்
புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும். ஆனால் அதேநேரம் நீங்கள் பாவிக்கும் எண்ணெயில் உள்ள aflatoxin இன்
அளவு குறைவாக இருந்தால் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தாது.
கடந்த ஒரு வாரமாக அமைச்சர்களும் ஊடகங்களும்
அல்லோலகல்லோலப்படுவதைப் பார்த்தால் இந்த aflatoxin புதிதாக கண்டறியப்பட்ட ஒரு
விடயமோ என்று ஒரு பொதுமகன் நினைக்கக்கூடும். ஆனால் இதில் வேடிக்கையான விடயம்
என்னவென்றால், இந்த aflatoxin தேங்காய் எண்ணெயில் இருப்பதை 1980ம் ஆண்டளவிலேயே
இலங்கையில் தென்னை உற்பத்திப் பொருட்கள் தோடர்பான ஆராய்ச்சி செய்தவர்கள் ஆராய்ந்து
ஆய்வுக் கட்டுரைகளும் வெளியிட்டிருக்கிறார்கள். அதோடு,
சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெயில் உள்ள இந்த நச்சுப் பொருளை solar radiation
மூலம் சுதிகரிக்கலாம் என்பதையும் ஒரு முன்னோடி பரிசோதனை மூலம் நிரூபித்து ஆய்வுக்
கட்டுரையும் சமர்ப்பித்துள்ளனர். (U. Samarajeewa, C. L. V.
Jayatilaka, A. Ranjithan, T. V. Gamage & S. N.
Arseculeratne).
இந்த ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவரான பேராசிரியர் உபாலி சமரஜீவா, தனது கருத்தை கடந்த வாரம் Island பத்திரிகையில் தனது கட்டுரையில் மீண்டும் வலியுறுத்தி உள்ளதுடன், aflatoxin உள்ள எண்ணெயை தற்போது இலங்கையில் உள்ள வசதிகளைப் பயன்படுத்தி சுத்தமாக்க முடியும் என்பதையும் சொல்லியிருக்கிறார். (இணைப்பு – கீழே comment இல்). அத்தோடு அவர் அரசின் கையாலாகத்தனத்தையும் கேலி செய்யவும் தவறவில்லை.
இதைவிட Nuwan B.Karunarathna, Chandima J.Fernando, D.M.S.Munasinghe , RuchikaFernando ஆகியோர் 2019 ஜூலை மாதம் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் இலங்கையில் பாவனையில் உள்ள தேங்காய் எண்ணெயில் கிட்டத்தட்ட 38% எண்ணெயில் aflatoxins இருப்பதாகவும், அதன் அளவு 2.25 to 72.70μg/kg ஆக இருப்பதாகவும் Aflatoxin B1 இன் அளவு 1.76 to 60.92 μg/kg ஆக இருப்பதாகவும் அறிக்கைப்படுத்தியுள்ளனர். மறுபுறத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத் தலைவர் Dr. Anuruddha Padeniyaவும் இலங்கையில் விற்கப்படும் தேங்காய் எண்ணெயில் 80% ஆனவை சுத்தமற்றவை என்று கடந்தவாரம் Island பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.
அதாவது,
இந்த aflatoxin விடயம் ஒன்றும் இலங்கைக்குப் புதிய விடயம் இல்லை என்பதும்,
aflatoxin இன் பாதிப்பைக் குறைக்கும் சுத்திகரிப்பு வசதி இலங்கையிலேயே இருப்பதாகவும்
கொள்ள முடியும். அதேநேரம் aflatoxin இன் அளவு அதிமாக இருக்கும்போதே அது உடலுக்குப்
பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும், அவ்வாறு உயர்ந்த அளவில் aflatoxin அதிகம் உள்ள
எண்ணெயை நீண்டகாலம் பயன்படுத்தும்போதே பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதையும்
புரிந்து கொள்ளலாம்.
இனி இந்த விவகாரத்தில் என்ன வில்லங்கம்
இருக்கிறது என்று பார்ப்போம்.
1.
இந்த விவகாரம் கடந்த ஒரு வாரமாகவே சூடு
பிடித்திருந்தாலும், கடந்த மார்ச் 23ம் திகதியே All
Ceylon Traditional Coconut Oil Producers’ Association ஒரு ஊடக சந்திப்பில், 13 கொள்கலன்களின் இறக்குமதி
செய்யப்பட்ட பாவனைக்குதவாக தேங்காய் எண்ணெய் சந்தைக்குள் விடப்பட்டுள்ளதாக குற்றம்
சுமத்தியது.
அதன் தலைவர் Buddhika De Silva இதே நச்சுப்
பதார்த்தம் இறக்குமதி செய்யப்பட்ட வேறு சமையல் எண்ணெய்களிலும் இருப்பதாகக்
கூறினார். இதில் கேட்கப்பட வேண்டிய கேள்வி – எந்த பரிசோதனையும் இல்லாது அவர்
எப்படி இரண்டு வாரங்களுக்கு முன்னரே இந்தக் குற்றச் சாட்டை முன்வைத்தார்?
எங்கிருந்து அவர் தரவுகளைப் பெற்றார்?
2.
ஆரம்பத்தில் இந்தக் குற்றச்சாட்டை மறுத்த
சுங்கத் திணைக்களம், தொற்று ஏற்பட்டதாக சொல்லப்படும் எண்ணெய் தங்கள் காவலிலேயே
இருப்பதாகக் கூறிவந்தது. ஆனால் இந்தவாரம் வெளியிட்ட அறிக்கையில், தொற்று ஏற்பட்ட
எண்ணெய் விநியோகச் சந்தைக்குள் போயிருக்கலாம் என்று சொல்லுகிறது. ஒரு
பொறுப்புள்ள அரச திணைக்களம் ஏன் இவ்வாறு முன்னுக்குப் பின் முரணான கருத்துகளைத்
தெரிவிக்க வேண்டும்?
3.
சுங்கத் திணைக்களம் மேற்சொன்னபடி முரண்பட்ட
கருத்தை தெரிவித்துள்ள நிலையில், அமைச்சு மட்டத்தில், இன்னமும் பாவனைக்குதவாக
எண்ணெய் சந்தைக்குள் விடப்படவில்லை என்றும் கொள்கலன்கள் அனைத்தும் சுங்கத்
திணைக்கள சேமிப்பு கிட்டங்கியில் இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால் சுங்கத்
திணைக்கள தலைமை அதிகாரியோ எண்ணெய் கொள்கலன்கள் அவற்றை இறக்குமதி செய்த
நிறுவனங்களின் கிட்டங்கிகளில் இருப்பதாகச் சொல்கிறார். ஆனால் ஏப்ரல் முதலாம் திகதி
அதிகாரிகள் தம்புள்ளை வர்த்தக வலயத்தில் ஒரு எண்ணெய் கொள்கலன் கொண்ட பார ஊர்தியைகே
கைப்பற்றி இருக்கிறார்கள். அதேபோல தங்கொட்டுவ பகுதியில் தரித்து நின்ற இரண்டு பார
ஊர்திகளையும் மார்ச் 31 ம் திகதி போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள். அப்படியென்றால் சுங்க
அதிகாரி சொல்வதுதான் உண்மை என்றுதானே கருத வேண்டியுள்ளது? (April 4 – Sunday Times)
4.
தம்புள்ளையிலும் தங்கொட்டுவையிலும் எண்ணெய்
கொள்கலன்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் சுங்கத் தலைமை அதிகாரி இப்போது, எண்ணெய்
இறக்குமதியாளர்கள் உண்மையில் குறித்த சுத்தமற்ற எண்ணெய்யை சந்தைக்குள்
விட்டுவிட்டார்களா என்று விசாரித்து வருவதாகக் தெரிவித்துள்ளார். அப்படியென்றால்
இதே அதிகாரி என்ன அடிப்படையில் கடந்த வாரம், கொள்கலன்கள் எல்லாம் தமது
கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்?
5.
பொது சுகாதார
ஆய்வாளர்கள் சங்கத் தலைவர் உபுல் ரோகண (Upul Rohana) ஏற்கனவே இந்த Aflatoxinஉள்ள
எண்ணெய் சந்தைக்குள் விடப்பட்டிருந்தால், அதை பரிசோதனைகள் மூலம் உடனடியாகக்
கண்டறிவது கடினம் என்று கூறியுள்ளார். இதுவரை நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து
நூற்றுக்கு மேற்பட்ட எண்ணெய் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றின்
முடிவுகளைப் பெற ஒரு மாதத்திற்கும் மேலாக காத்திருக்க நேரிடும் என்று சொல்கிறார்.
இதற்கு அரச ஆய்வுகூட நடைமுறைகள் மெதுவாக செயல்படுவதே காரணம் என்றும்
தெரிவித்துள்ளார். (ஏப்ரல் 4ம் திகதி (Sunday
Times)
6.
குறித்த தொகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட
தேங்காய் எண்ணெய் சந்தைக்குள் விடப்பட்டு விட்டதா என்பதை கண்டறிவதில் உண்மையில்
மிகப்பெரிய சிக்கல் உள்ளது. இலங்கையில் ஏற்கனவே விற்கப்படும் தேங்காய் எண்ணெயில் 80% ஆனவை சுத்தமற்றவை
(அரச வைத்திய
அதிகாரிகள் சங்கத் தலைவர் Dr. Anuruddha Padeniya வின் கூற்று) என்று
சொல்லப்படும் நிலையில் தற்போது எடுக்கப்படும் மாதிரிகள் புதிதாக சந்தைக்கு வந்த
எண்ணெயா அல்லது ஏற்கனவே சந்தையில் காணப்பட்ட Aflatoxin கலந்துள்ள எண்ணெயா என்பதைக்
கண்டறிய யாரிடமும் எந்த மந்திரக் கோலும் இல்லை என்பதே யதார்த்தம். மேலும் சில
அதிகாரிகள் சந்தேகிப்பதுபோல குறித்த தொகுதியில் வந்த எண்ணெய் ஏற்கனவே சந்தையில்
இருந்த எண்ணெயுடன் கலக்கப்பட்டிருந்தால் Aflatoxin சதவீதம் ஆபத்தான அளவில்
இல்லையென்று பரிசோதனை முடிவில் சொல்லிவிடுவதற்கும்
சந்தர்ப்பம் உள்ளது.
7.
பிந்திய செய்திகளின்படி சுங்கத் தினைகலப் பணிப்பாளர்
விஜித ரவிப்ரிய (Majar General Vijitha Ravipriya) மேற்படி கொள்கலன்கள் எந்த நாட்டிலிருந்து
இறக்குமதி செய்யப்பட்டனவோ அந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படும் என்று
சொல்லியுள்ளார். Aflatoxin தொடர்பாக 35 வருடங்களுக்கு முன்பிருந்தே ஆய்வு செய்த, அதனை எண்ணெயிலிருந்து நீக்கும்
முறையையும் பரிசோதனை செய்த அனுபவமுள்ள பேராசிரியர் சமரஜீவ போன்றவர்கள் இந்த
எண்ணெய்யை சுத்தமாக்கும் வசதிகள் இலங்கையிலேயே இருப்பதாகக் தெரிவித்துள்ள நிலையில்
எதற்காக அவசரமாக இந்தக் கொள்கலன்களை அரசு திருப்பி அனுப்ப நினைக்கிறது?
8.
இதைவிட இந்தத் தொகுதி எண்ணெய்க்கான அனுமதி 2016 வழங்கப்பட்டதாகவும் அந்தத் தொகுதி எண்ணெயே இந்த
வருடம் இறக்குமதி செய்யப்படதாகவும் உறுதிப்படுத்தாக ஒரு செய்தியும்
உலவவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசு இந்தப் ஆனால் அதில் உண்மை இருக்க வாய்ப்புக்
குறைவு. ஏனெனில் 2017 வழமையை விட 20% அதிகமாக 10,000 MT எண்ணெயும் 2019ம் ஆண்டு அதைவிட
அதிகமாக 30,000 MT எண்ணெயும் இறக்குமதி செய்யப்படும் இருக்கும் நிலையில்,
2016 நல்லாட்சி
அரசினால் வழங்கப்பட்ட அனுமதியின் கீழ் இந்த வருடம் வந்த எண்ணெய்தான் இது என்றால்
உங்களால் நம்ப முடிகிறதா?
இவ்வளவு வில்லங்கமான விடயங்கள் இடம்பெறுவது ஒருபுறம்
இருக்க இது தொடர்பாக அரசின் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்களை நினைவுபடுத்திப் பார்த்தால்
உங்களுக்கு பெரும் ஆச்சரியம் ஏற்படும் என்பதில் ஐயமில்லை.
1.
கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச - தேங்காய்
எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தும் மூலக்கூறு உள்ளதாகப் பரப்பப்படும் செய்திகளின்
பின்புலத்தில் பாம் ஒயில் வர்த்தகர்களே இருக்கிறார்கள். பாம் ஒயில் மீது கொண்டுவரப்பட்ட தடை காரணமாகவே
இவ்வாறு செய்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.
2.
இளைஞர்கள், விளையாட்டு அலுவல்கள் அமைச்சர்
நாமல் ராஜபக்ஷ - புற்றுநோய்
ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் விவகாரம் பொய்யென்றால், அதன்
பின்னணியிலுள்ள சக்திகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
3.
இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன - இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து தேங்காய் எண்ணெய் மாதிரிகளும் தரமற்றவை என இலங்கை தர கட்டளைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் உறுதிபடுத்தியுள்ளார்.
4.
State
Minister அருந்திக பெர்னான்டோ – சுத்திகரிக்கப்படாத
தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவது இனி நிறுத்தப்படும். உள்ளூரில் தூய தேங்காய் எண்ணெய்யை உற்பத்தி செய்து மக்கள் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை
எடுக்கப்படும்.
5.
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (மார்ச் 26) - சர்ச்சைக்குரிய
தேங்காய் எண்ணெய் உள்ள சேமிப்புக் கிட்டங்கி நுகர்வோர் அதிகார சபையால் சீல்
வைக்கப்பட்டுள்ளது. முறையான பரிசோதனையின் பின்னர் அனுமதி பெற்ற பின்னரே அடுத்த
நடவடிக்கை எடுக்கப்படும்.
6.
Minister
Dr. Ramesh Pathirana (March 30) – இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயில்
கான்சர் வரக்கூடிய aflatoxin இருப்பதான சதி கோட்பாடு பாம் எண்ணெய்
உற்பத்தியாளர்களால் உருவாக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை நான் நிராகரிக்கவில்லை.
7.
அமைச்சர் உதய கம்மன்பில - குறித்த தொகுதி எண்ணெய் நான்கு கம்பனிகளாலேயே
இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவை இன்னமும் சந்தையில் விடப்படவில்லை.
அண்மையில் இலங்கை சம்பந்தப்பட்ட சில முக்கியமான
விடயங்கள் உங்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன்!
1.
UNHRC வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிராக அதிக
வாக்குகள் கிடைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக சிலஅமைச்சர்கள்
தமது கூட்டல் கழித்தல் திறமைகளைக் காட்டியபோதும் மக்களும் ஊடகங்களும் அரசைக் கழுவி
ஊற்றிவிட்டார்கள்.
2.
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இலங்கை
ரூபாவின் பெறுமதி தாறுமாறாக விழுந்து ஒரு அமெரிக்க டொலர் Rs.200.00
ஐத் தாண்டிவிட்டது.
3.
சிங்கராஜ வனத்தில் அரச
அனுசரணையோடு நடாத்தப்பட்ட காடழிப்பு, பாக்யா அபேரத்ன என்ற இளம்பெண்ணின்
துணிச்சலால் வெளிக் கொணரப்பட்டு தற்போதைய அரசின் இயற்கையைப் பாதுகாக்கும்
உறுதிமொழி கேள்விக்கும் கேலிக்கும் உட்படுத்தப்பட்டது.
4.
நீர்கொழும்பில்
வனப்பகுதியில்விளையாட்டு மைதானம் அமைக்கும் திட்டம், நீர்கொழும்பு நீரேரித் திட்டத்தினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புத் தொடர்பாக
வனவியல் அதிகாரி Devani Jayathikala தொடர்ந்தும் தெரிவித்துவரும் எதிர்ப்பும் அரசுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்திருந்தது.
5.
அதேபோல சீனா அன்பளிப்பாகக் கொடுத்த 600,000 Sinapharm வக்சின்கள்
தொடர்பாகவும் அதன்
பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக இலங்கை மருத்துவ உலகில் அமைச்சருக்கும் மருத்துவ
அதிகாரிகளுக்கும் இடையிலான இழுபறியும் இந்தக் காலப்பகுதியில்தான் நடைபெற்று
வந்தது.
யோசித்துப்
பாருங்கள் !! மேற்கூறிய ஐந்து விடயங்கள்தானே இரண்டு வாரங்களுக்கு முன்னர் பெரிய
கோடுகளாக இருந்தன. ஆனால் இன்று?
இன்று அதனருகே “தேங்காய் எண்ணெய் – Aflatoxin - புற்றுநோய் – மரணம்” என்ற பெரிய கோட்டை அரசு கீற முயல்கிறதோ என்ற கேள்வி எழுகிறது. இந்த ஒரு விவகாரத்திற்கு தினமும் ஒரு அறிவித்தல், அடிக்கடி ஊடக சந்திப்புகள், ஏழு அமைச்சர்கள் கருத்துத் தெரிவிப்பு, அதிகாரிகள் முன்னுக்குப் பின்னான கருத்துத் தெரிவிப்பு என பெரிய கோடு கீறும் வேலைதானா என்ற கேள்வி எழுகிறது! உங்களில் பலருக்கும் இதே கேள்விகள் எழுந்திருக்கக்கூடும் என்றே நம்புகிறேன்.
- வீமன் -

No comments:
Post a Comment