அடி சறுக்கும் அனுர?
தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வடக்கு,
கிழக்கில் பெரும் வெற்றியைப் பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்திருக்கவில்லை.
அதனால் அதிக அழுத்தம் இல்லாமலே பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்கள். ஆனால் வடக்கு,
கிழக்கில் அவர்கள் எதிர்பார்த்ததை விடவே மக்கள் அள்ளிக் கொடுத்தார்கள். தமிழ்த் தேசியம்
பேசும் கட்சிகள் 9 ஆசனங்களைப் பெற, NPP 12 ஆசனங்களைப் பெற்று, வன்னி மற்றும் மட்டக்களப்பு
நீங்கலாக வடக்கு, கிழக்கில் அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது.
அதன் பின்னர் தாம் தமிழரின், குறிப்பாக வடக்கு வாழ்
தமிழரின் இதயங்களை வென்று விட்டதாக பிரச்சாரம் செய்வதை தனது பகுதிநேர வேலையாகவே NPP
மேற்கொள்ளத் தொடங்கியது. ஆனால் வடக்கு, கிழக்கு மக்கள் அனுரவிடம் எதை எதிர்பார்த்து
அவரது கட்சி பாராளுமன்றில் அறுதி பெரும்பான்மையைப் பெறத் தமது பங்களிப்பையும் வழங்கினார்களோ
அந்த எதிர்பார்ப்புகளை இன்னமும் நிறைவேற்றவில்லை என்பது ஒருபுறம் இருக்க, இனிவரும்
நாட்களில் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையையும் வழங்க இந்த அரசு தவறி வருகிறது.
குறிப்பாக வடக்கு, கிழக்கு போரினால் பல்வேறு வகையில்
பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பல முக்கிய விடயங்களில் அனுர அரசின் வாக்குறுதிக்கு மேலாக
ஆக்கபூர்வமான செயற்பாட்டையே எதிர்பார்க்கிறார்கள். அவை என்னவென்று அனுரவுக்கு மட்டுமல்ல,
வடக்குக் கிழக்கின் NPP பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றாகவே தெரியும்.
யாழில் நடைபெற்ற கூட்டத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்
குடும்பங்களின் வலியைத் தன்னாலும் உணரமுடியும் என்றும், தனது குடும்பமும் அவ்வாறு ஒரு
குடும்ப உறுப்பினரை இழந்த குடும்பம் என்றும் கூறியிருந்தார். ஆனால் அவர் பதவிக்கு ஆறு
மாதம் கடந்த நிலையிலும் அவரது கட்சி பெரும்பான்மையுடன் பதவிக்கு வந்து ஐந்து மாதங்கள்
கடந்த நிலையிலும் இன்று வரை அரசு எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுத்ததாகத் தெரியவில்லை.
அவர்களை எது தடுக்கிறது என்றும் புரியவில்லை. அதேபோல, ஆரம்பத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும்
தமிழ் அரசியல் கைதிகளை விரைவில் விடுவிப்போம் என்று வாக்களித்த அரசு பின்னர் அவ்வாறு
கைதிகள் யாரும் தடுப்புக் காவலில் இல்லை என்று சொல்லி எதிர்பார்ப்போடு இருந்த குடும்பங்களின்
எதிர்பார்ப்பில் மண் அள்ளிக் கொட்டி விட்டது.
இதேபோல இந்த அரசு வடக்குக் கிழக்கில் முப்படைகள்
வசம் இருக்கும் தமிழ் மக்களின் காணிகள் படிப்படியாக ஒப்படைக்கப்படும் என்றும் அனுர
வாக்குறுதி அளித்திருந்தார். அப்போது, படையினர் கட்டுப்பாட்டில் விவசாய நிலங்களும்
உள்ளன என்பதை தான் அறிவேன் என்றும், அவை தொடர்பாக ஒரு ஆய்வு செய்யப்பட்டு, அவை உண்மையில்
முன்னர் விவசாயக் காணிகளாக இருந்தன எனக் கண்டறியப்பட்டால் அவை விடுவிக்கப்படும் என்றும்
கூறியிருந்தார். இதன்மூலம் இவர் விவசாயக் காணிகளை விடுவிப்போம், ஏனையவற்றை விடுவிக்க
மாட்டோம் என்று சொல்ல வருகிறாரா என்ற கேள்வியும் எழுகிறது. அதற்கு மேலாக எப்போது அந்த
ஆய்வு செய்யப்படும், எப்போது காணிகள் விடுவிக்கப்படும் என்ற கால எல்லையும் அவரால் சொல்லப்படவில்லை.
அதேபோல வடக்கின்
மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைக்கும் மீன்பிடி அமைச்சரும் சரி, NPP அரசும் சரி
இன்னமும் தீர்ப்போம் என்று சொல்கிறதே தவிர இந்தியாவுடன், குறிப்பாக தமிழக அரசுடன் சுமூகமான
பேசிப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான முதல் அடியையே எடுத்து வைத்ததாகத் தெரியவில்லை.
வடக்கிற்கு வரும் அமைச்சர் சந்திரசேகரன் அதுபற்றிப் பேசும்போது அதற்கு தீர்வு தரப்படும்
என்று சொன்னாலும் அவரும் அது தொடர்பாக காத்திரமான செயற்பாட்டில் இறங்கியதாகத் தெரியவில்லை.
இவற்றை விட இவர் மீதான நம்பிக்கையை சிதைக்கும் வகையில்
அவர் பேசிய மேலும் இரண்டு விடயங்கள் அமைந்துள்ளன. அவற்றுள் முக்கியமானது தையிட்டி தொடர்பானது.
தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரைப் பிரச்சனை தொடர்பாக
வடக்கின் அரசியல் கட்சிகளோ தெற்கின் கட்சிகளோ தலையிடக் கூடாது என்கிறார். வடக்கில்
இனவாதம் பேசும் கட்சிகள் இதில் தலையீடும்வரை அந்தப் பிரச்சனையைத தீர்க்க எதுவும் செய்ய
முடியாது என்கிறார். அது விகாரதிபதியும் அந்தப் பிரதேச மக்களும் நாகதீப விகாரதிபதியும்
பேசித் தீர்க்க வேண்டும் என்கிறார். இத்தனைக்கும் அந்த இடத்தை ஆக்கிரமித்தது அவருக்கு
கீழே இருக்கும் படையினர் என்பது அவருக்கும் தெரியும். இலங்கையில் ஊழலற்ற,
சட்டத்தின் ஆட்சியைக் கொண்டு வருவோம் என்று கூறும் ஒரு நாட்டின் தலைவர் இப்படி சுற்றி
வளைத்து பேசுவதும் நிலத்தை இழந்த மக்களின் வலியை உணர மறுப்பதும், இவரும் சிங்கள
பௌத்த பேரினவாத அரச இயந்திரத்தின் சாரதிதானோ என்று எண்ண வைக்கும் வகையில்
அமைந்துள்ளது.
அதேபோல, உள்ளூராட்சி சபைகள் தொடர்பாகப பேசும்போதும்,
NPPயினர் கைவசப்படும் நகரசபை, மாநகரசபை போன்றவற்றுக்கு அவை கேட்கும் நிதி வழங்கப்படும்
என்றும் ஏனைய ஊழல் கட்சிகள் கவசமாகும் சபைகளின் நிதிக் கோரிக்கைகள் ஓன்று பத்துத தடவைகள்
மீளாய்வு செய்தே நிதி வழங்குவது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றும் கூறினார்.
அதன் பின்னர் அடுத்த கூட்டத்தில் தான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை என்று அதை மறுத்திருந்தார்.
ஏற்கனவே NPP கட்டமைப்பில் உள்ள பலர் முன்னுக்குப்
பின் முரணாக பேசுவதாலும் பொய்யான தகவல்களைப் பகிர்ந்ததாலும் அந்தக் கட்சி கடும் விமர்சனத்துக்கு
உள்ளாகி வரும் நிலையில், இன்னமும் அந்தக் கட்சி தமது துருப்புச் சீட்டாக நினைத்து உள்ளூராட்சித்
தேர்தலில் வெல்ல அவருடைய நாவன்மை பயன்படும் என்று நம்பி இறக்கிய அனுரவே ஆங்காங்கு சறுக்குவதை
அவதானிக்க முடிகிறது.
ஈஸ்டர் தாக்குதல், பட்டலந்த போன்ற விடயங்களில் அனுரவும்
அவர் கட்சியும் காட்டும் அக்கறை ஏன் சிறுபான்மையினர் தொடர்பான விடயங்களில் காட்டப்படவில்லை
என்ற கேள்வி, விடை தரப்படாமல் காற்றில் அலைந்து கொண்டிருக்கிறது.
-
வீமன் -
No comments:
Post a Comment